இலங்கை அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்ட நிதானபுத்தியுடைய எவருமே அரசியல்வாதிகளினதும் அதுவும் குறிப்பாக உயர்மட்ட அரசியல்வாதிகளினதும் அவர்களின் பரிவாரங்களினதும் ஊழல் மோசடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகள் பயனளிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்து எந்தவிதமான மாயையையும் கொண்டிருக்கமாட்டார்கள். ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடிகளிலும் அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று நாட்டுமக்களுக்கு உறுதியளித்துக்கொண்டு கடந்த வருடம் ஜனவரியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவும் அவரின் தலைமையிலான அரசாங்கமும் அது விடயத்தில் பயனுறுதியுடைய நடவடிக்கைகளை எடுக்கக்கூடியதாக இருக்குமென்று எவராவது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்களேயானால், அவர்கள் இனிமேலும் அத்தகைய நம்பிக்கையுடன் இருப்பதற்கு வலுவான எந்தக் காரணமும் இல்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையில் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கப்போவதாகப் பிரகடனம் செய்துகொண்ட அதன் தலைவர்கள் அதே பழைய கட்சி அரசியல் கலாசாரத்துக்கு அப்பால் நகர முடியாதவர்களாக நகர விருப்பமில்லாதவர்களாக தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு கட்சிகளினதும் தலைவர்கள் நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற எந்தவொரு முக்கியமான பிரச்சினை தொடர்பிலும் கருத்தொருமிப்பைக் காணமுடியாதவர்களாக அல்லது காணவிருப்பமில்லாதவர்களாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது ராஜபக் ஷாக்களை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரவிடக்கூடாது என்பதைத் தவிர, வேறு எந்தவொரு விவகாரத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பெரிதாக கருத்தொற்றுமை இல்லை என்றுதான் கூறவேண்டும். ராஜபக் ஷாக்கள் மீண்டுவருவதை தடுப்பதற்காகவே இவர்கள் இருவருக்கும் இடையிலான பிணக்குகளை அவ்வப்போது தணிப்பதற்கான மத்தியஸ்தர் பாத்திரத்தை முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏற்றிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும்.
எது எவ்வாறிருந்தாலும்இ அண்மைக்காலத்திலான பல நிகழ்வுப் போக்குகள் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து கடுமையான சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன. பல விவகாரங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் கடந்த 22 மாதங்களாக நீடித்துவந்திருக்கும். ‘அரசியல் சகவாழ்வு’ சஞ்சலத்துக்குரியதாக மாறிக்கொண்டுவருகிறது என்பதில் சந்தேகமில்லை. 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய அரசாங்கம் இருவருடங்களுக்கானது என்று முதலில் கூறிய அதன் தலைவர்கள் ராஜபக் ஷவின் அணிதிரட்டல்களினால் தோன்றிய நிலைவரங்களையடுத்து முழுமையாக தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்கால முடிவுவரை ஐந்து வருடங்களுக்கானது என்று கடந்த மாதம் அறிவித்திருந்தார்கள். ஆனால் இடையிடையே ஜனாதிபதி சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தாங்கள் தனியாக ஆட்சியமைப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசிக்கொள்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாக அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைப்பலம் இல்லாத காரணத்தால் அதன் தலைவர் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் வேறுவழியில்லாமல் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையிலான சுதந்திரக் கட்சிப் பிரிவினருடன் சகவாழ்வைத் தொடர வேண்டியிருக்கிறது-
ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் நிலவிய முன்னென்றுமில்லாத வகையிலான ஊழல் மோசடிகள், முறைகேடுகள் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவுஇ குடும்ப அரசியல் ஆதிக்கம் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நாட்டின் சகல சமூகங்கள் மத்தியிலும் தோன்றிய வெறுப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு புதிய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்ற அரசியல் அணுகுமுறைகளும் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் மீண்டும் அவநம்பிக்கையை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை. மாறாக அரசாங்கத்தின் தலைவர்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தங்களுக்குள் முரண்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அண்மையில் கொழும்பு
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்களுக்கு வீடுகளும் காணிகளும் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி சிறிசேன நிகழ்த்திய உரை சந்தேகத்துக்கு இடமின்றி அந்த முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு சிறிசேனஇ பிரதமர் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் தொடர்பில் முன்னொருபோதுமே இத்தகைய கடுமையான விமர்சனத்தை தெரிவித்ததில்லை. அந்த உரை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் குறிப்பாக ஜனாதிபதியின் சீற்றம் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை நோக்கியதாகவே இருந்தது.
'குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் நிதிமோசடி விசாரணைப் பிரிவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் செயற்பட முடியாது. சட்டம் சகலருக்கும் ஒரேமாதிரியானதே. சில அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் செயற்படுமாக இருந்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதில் சில இலக்குகளும் கொள்கைகளும் இருக்கின்றன. இந்த ஆணைக்குழுக்களில் இருப்பவர்கள் தங்களுடன் சம்பந்தப்பட்ட துறைகள் எவை என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு, இராணுவ நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் பற்றி தெரியாதவர்கள் எந்தவித யோசனையுமின்றி தவறான தீர்மானங்களை எடுக்கிறார்கள். இந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் எனக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்த விவகாரங்கள் குறித்து அறிவிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பதால் அவ்வாறு எனக்கு அறிவிக்க வேண்டியதில்லை என்று சிலர் கூறலாம். ஆணையாளர்கள் அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டாலும் கூட ஜனாதிபதி என்ற வகையில் நானே இந்த ஆணைக்குழுக்களின் தலைவர்களையும் பணிப்பாளர் நாயகத்தையும் நியமிக்கின்றேன்" என்று ஜனாதிபதி தனது உரையில் காட்டமாகக் கூறினார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பற்றி பிரத்தியேகமாகக் குறிப்பிட்ட அவர், அதன் விசாரணையில் உள்ள இரு வழக்குகளை மாத்திரம் சுட்டிக்காட்டிப் பேசியது கவனிக்கத்தக்கது. இதில் ஒரு வழக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக் ஷவும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளும் சம்பந்தப்பட்டது. மற்றையது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட கடத்தல், கொலை வழக்கு ஆகும். இந்த வழக்குகளைப் பொறுத்தவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் எங்கே தவறிழைத்தார்கள் என்பதை ஜனாதிபதி வெளிப்படையாகக் கூறவில்லை என்றபோதிலும், ஒரு வழக்கு பற்றிய விபரங்கள் தனக்கு தெரியாதிருப்பதனாலும் மறுவழக்கின் தாமதத்துக்கான காரணம் குறித்து தான் அறியாதிருப்பதாலும் அவர் ஆத்திரமடைந்திருக்கிறார் என்பதை அவர் சந்தேகத்திற்கிடமின்றி வெளிக்காட்டினார்.
இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், வேறு எவருமல்ல, நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவரான ஜனாதிபதியே சுயாதீனமான ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இல்லை என்றும் அவை அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியமையேயாகும். இத்தனைக்கும் கடந்தவருடம் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதை புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய பாரியதொரு சாதனை என்று ஜனாதிபதியே முன்னர் கூறிப் பெருமைப்பட்டார். இப்போது அவர் அந்த ஆணைக்குழுக்களுக்கு எதிராக அதுவும் குறிப்பாக ஊழல் மோசடிகளுக்கு எதிராக பல்வேறு முக்கியமான விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது? அத்துடன் அதை இராணுவத்தினரையும் அவர்களின் குடும்பத்தினர்களையும் பெருமளவில் கொண்டிருந்த அரங்கொன்றில் பகிரங்கமாக கூறவேண்டும் என்று ஏன் அவர் முடிவெடுத்தார்? அந்த ஆணைக்குழு தவறான முறையில் செயற்படுகிறது என்று அவர் உணர்ந்திருந்தால் அதன் உயரதிகாரிகளையும் தலைவர்களையும் அழைத்து தனது அதிருப்தியை அவர்களிடமே நேரடியாக கூறவேண்டும் என்று ஏன் அவர் நினைக்கவில்லை ?. இவ்வாறு பகிரங்கமாக பேசியதன் மூலம் யார் யாருக்கு தனது செய்தியைத் தெரிவிக்க அவர் முற்பட்டார்? யார் யாருக்கு நம்பிக்கையூட்டுவதற்காக அவர் அதைச் செய்தார்? இவையெல்லாம் முக்கியமான கேள்விகள்.
ஜனாதிபதியின் இந்தச் சீற்றத்தையடுத்து அவருக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்ததாகவும் முக்கியமான தேசிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அவர்கள் இருவரதும் தலைமையிலான குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தவறாக ஊடகங்களினால் வெளியிடப்பட்டிருக்கின்றது என்றும் 10 நாட்கள் கழித்து அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கின்றார். எவ்வாறாயினும்இ இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவின் இயக்குநர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதை தடுக்க முடியவில்லை. அவர் பழையபடி சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கே சென்றுவிட்டார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள் மீது ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கண்டனம் சிவில் சமூக அமைப்புக்களின் பெரும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்த சிவில் சமூக அமைப்புகள் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை உறுதியாக ஆதரித்து நின்றவையாகும். தன்னை ஆதரித்து நின்ற அரசியல் சக்திகளையும் சிவில் சமூகத்தையும் மேலும் பலப்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக அவற்றை பலவீனப்படுத்தக்கூடிய கைங்கரியங்களில் ஜனாதிபதி நாட்டம் காட்ட ஆரம்பித்திருக்கின்றார். ராஜபக் ஷாக்களின் ஆதரவுத்தளமாக விளங்கும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளையும் இராணுவவாத சக்திகளையும் சாந்தப் படுத்தும் அணுகுமுறைகளை அவர் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஊழல் மோசடி விசாரணைகளில் இருந்து ராஜபக் ஷாக்களை காப்பாற்றுவதில் பிரதமர் விக்கிரமசிங்க அக்கறையாக இருக்கின்றார் என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இக் குற்றச்சாட்டை முன்வைப்பதில் முன்னணியில் நின்றது.
இப்போது பார்த்தால் ராஜபக் ஷாக்களை காப்பாற்றுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அக்கறையாக இருக்கின்றார் எனத் தெரிகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் ராஜபக் ஷாக்கள் பக்கமே இருப்பதால் கட்சியின் தலைமைத்துவத்தை தனது கையில் வைத்திருந்தும் கூட அது முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வராததால் அரசியல் ரீதியில் ஜனாதிபதி பெரும் சங்கடத்துக்குள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபடுவதற்காகவே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் தந்திரோபாயத்தை கடைப்பிடிக்க அவர் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு நிலவியதைப் போன்றே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் நிதி மோசடிப் பிரிவும் முன்னெடுக்கின்ற ராஜபக் ஷாக்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளிலும் இருவருக்கிடையிலும் முரண்பாடுகள் வளர ஆரம்பித்திருக்கின்றன என்று தோன்றுகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் கடற்படைத் தளபதிகளும் போரை முடிவுக்கு கொண்டு வருதற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதால் அவர்களை ஊழல் விசாரணைகளின் போது கண்ணியமாக நடத்தியிருக்க வேண்டும் என்றும் படையினரின் மனதைப் புண்படுத்தக் கூடாதென்றும் ஜனாதிபதி கருதுகின்றார் என்றால் போருக்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதாக எப்போதும் கூறிக்கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து அவர் தேர்தலில் போட்டியிடாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?
ஆணைக்குழுவும் நிதி மோசடிப்பிரிவும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் அரசியல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் பிரகாரமே செயற்படுகின்றன என்று ஜனாதிபதி கூறுகின்றாரென்றால், அரசியல்வாதிகளின் முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் நிகழ்ச்சித் திட்டமில்லாத விசாரணை எதுவும் இலங்கையில் எப்போதாவது நடைபெற்றிருக்கின்றதா என்பதை அவர் கூறவேண்டும். திருமதி சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளை பறிக்க சிபாரிசு செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தொடக்கம் முன்னாள் இராணுவத்திதளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய இராணுவ நீதிமன்ற விசாரணை வரை எல்லாம் அரசியல் நிகழ்ச்சித்திட்டதின் பிரகாரம்தானே நடந்தேறின.
இன்று விசாரணைகள் ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் படி நடக்கின்றன என்று ஜனாதிபதி கருதுகின்றார் என்றால் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அவை குந்தகமாக அமைகின்றன என்று அவர் கவலைப்படுகிறார் என்பதே அர்த்தம். உண்மையில் இன்று நாம் காண்பதென்னவென்றால் ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் அதே ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை பாதுகாப்பதற்கு தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்கிறார்கள். இதில் அவரவரின் அரசியல் நலன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
(வீ.தனபாலசிங்கம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM