ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம், சுகாதார சேவை சங்கம், துறைமுக சங்கம், அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவை சங்கம், வைத்திய ஆய்வு கூட நிபுணர் சங்கம், மின்சாரம், புகையிரதம், பெற்றோலியம், தபால் மற்றும் தோட்டத் தொழிற்துறை சங்கம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (28 ) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதடைந்துள்ள நிலையில், நாட்டின் பல நகரங்கள் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக்காணப்படுகின்றன. அத்துடன் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. பெரும்பாலான பாடசாலை செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுவருவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
கொழும்பு
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து எவ்வித ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றன. போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்டன. அத்துடன் பாடசாலை செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், ஒரு சில பாடசாலை செயற்பாடுகள் இடம்பெற்றன.
வவுனியா
வாவுனியாவிலும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வவுனியா நகரத்தின் பல கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகரத்தில் மக்களின் நடமாட்டங்கள் இல்லாமையால் வெறிச்சோடிக்காணப்படுகின்றது. பல பாடசாலைகள் மூடப்பட்டு கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளது .
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொண்ட மக்கள் சீனா மொழியையும் தாங்கி பதாதைகளுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது .
இன்று நாடாளாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் போராட்டம் வவுனியாவிலும் முழு அளவில் இடம்பெற்று வருவதுடன் ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் இன்றைய போராட்டம் மற்றும் பேரணிகளையும் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது .
யாழ்ப்பாணம்
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் யாழ்ப்பாண குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக செயலிழந்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றது.
பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்துள்ளன. அத்தோடு யாழ்ப்பாண நகரத்தின் வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதோடு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மலையகம்
இதேவேளை, மலையகத்தின் பல நகரங்கள் மக்கள் நடமாட்டமற்று போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.
குறிப்பாக அட்டன் நகரத்தில் எவ்வித போக்குவரத்துக்களோ அல்லது கடைகளோ திறக்கப்படாத நிலையில் மக்கள் நடமாட்டமற்ற நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் அட்டன் ரயில் நிலையத்தில் இருந்து எவ்வித ரயில் சேவைகளும் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மலையகத்தின் பல பகுதிகளும் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிப்போயுள்ளன. அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், பாடசாலைகள் முழுமையாக இயங்காத நிலையில் பொது மக்கள் நகரங்களுக்கு வருகை தராததால் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட் கட்சிகளும் அமைப்புகளும் வேலை நிறுத்தம் செய்வதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் ஒற்றுமையாக பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். அட்டன், டிக்கோயா, மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், பொகவந்தலாவ, கொட்டகலை பிரதேசங்கள் உட்பட போக்குவரத்துச் சேவைகளும் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.
அரச மற்றும் தனியார் துறை சார்ந்த அனைவரும் பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, வெலிளிமடை, பண்டாரவளை ஆகிய பகுதிகளில் பாரிய மறியல் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் இன்றைய தினம் மேற்கொண்டனர்.
மக்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறும், ஜனாதிபதி மற்றும் ஆட்சியாளர்களை வெளியேறுமாறும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் மேற்படி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.
திருகோணமலை
நாடு தழுவிய ரீதியில் இன்று (28) இடம்பெறும் தொழிற் சங்க போராட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியும் காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் சுகயீன போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சகல உத்தியோகத்தர்களும் சுகயீன போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியே குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று (28) தம்பலகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தினை தம்பலகாமம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ், சிங்கள,முஸ்லிம் என 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் கண்டி - திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால், போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப்பட்டிருந்ததன.
கண்டி - திருகோணமலை மற்றும் கொழும்பு - கிண்ணியா வீதிகளின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு
அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று (28) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் பல்வேறு தரப்பினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்புநிலை பாதிக்கப்பட்டள்ளதுடன் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
சில பாடசாலைகளில் உயர்தர பிரிவு மாணவர்கள் வருகைதந்த நிலைமையினை காணமுடிந்தது.
பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் வரவு மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
பிரதேச செயலகங்கள் திறந்திருந்தபோதிலும் உத்தியோகத்தர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டதுடன் மக்கள் வரவும் இல்லாத காரணத்தினால் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இதேபோன்று தபால் திணைக்களங்களங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.
தனியார் மற்றும் அரச போக்குவரத்துச்சேவைகள் வழமைபோன்று சேவைகளில் ஈடுபட்டுவருகின்றதை காணமுடிந்தது.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை இன்று காலை மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்தன.
அரச,தனியார் வங்கிகள் இணைந்த தொழிற்சங்கங்கள்,கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம், இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம், இலங்கை ரெலிகொம் கூட்டுத்தாபனம், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தொழிற்சங்கங்களும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இந்த போராட்டங்களை முன்னெடுத்தது.
தங்காலை
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவிவிலகுமாறு கோரி தங்கலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகின்றது. பெருந்திரளான மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தளத்தில் சுழற்சி முறையில் சத்தியாக்கிரகம்
ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் - கொழும்பு முகத்திடலில் நேற்று (27) இரவு முதல் சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி முதல் ´கோட்டா கோ கம´ கிளையொன்று புத்தளம் , கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியுமான டாக்டல் எம்.ஐ.இல்யாஸ் குறித்த சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அனுராதபுரம்
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமெனக் கோரி அரச மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த தொழிற் சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் எதிர்ப்பு ஆர்பாட்டம் அநுராதபுர நகரில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு
நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று நண்பகல் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் வைத்தியசாலை முன்பாக அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன் அவர்கள் தெல்வத்தை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோ கமவிற்கு பேரணியாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 300 இற்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றினர்.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவு, மருந்து தட்டுப்பாடு உட்பட பல விடயங்களை அவர்கள் அங்கு குறிப்பிட்டதோடு, ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கமும் வீடு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM