logo

ஜனாதிபதி நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல 

Published By: T Yuwaraj

07 Apr, 2022 | 07:03 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்களே நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாய பூமி தொடர்பில் தான் எடுத்த தீர்மானம் தவறு என்பதை ஏற்றுக்கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியதைப் போன்று , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்றபட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி பாராளுமன்றத்தினால் ஏற்பட்டதல்ல. நிறைவேற்று ஜனாதிபதி இரசாயன உரத்தை தான்தோன்றித்தனமாக தடைசெய்தார்.

இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் கேட்கவில்லை. தனிச்சையாக எடுத்த தீர்மானம் காரணமாக விவசாய உற்பத்திகள் 50வீதம் வீழ்ச்சியடைந்தது. 

பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் காரணம். அரசியலமைப்பின் 27ஆவது சரத்தில் ஜனாதிபதியின் பொறுப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதில் மக்களுக்கு போதுமான ஆகாரம், உடை, வசதியான இல்லம் போன்ற விடயங்களை வழங்குவது ஜனாதிபதியின் பொறுப்பு. இன்று ஜனாதிபதி அவற்றை வழங்க தவறி இருக்கின்றார்.

ஏனெனில் மக்களுக்கு போதுமான உணவு இல்லை. ஆடைகளின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கின்றது. வீடு கட்டமுடியாத அளவுக்கு சீமெந்து விலையை அதிகரித்திருக்கின்றது.

இதனால் மக்களுக்கு அடைப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமலுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை  மீறி இருக்கின்றார். 19 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு ,  பிரதமர், பாராளுமன்றம் மற்றும் சபாநாயகர் என மூன்று தரப்பினருக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2019 இல் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் அந்த அதிகாரங்கள் அனைத்தையும் 20ஆம் திருத்தம் மூலம் அவரது கைக்கு எடுத்துக்கொண்டார்.

இதன் மூலம் பாராளுமன்றம் பலவீனமடைந்தது. தற்போது இந்த பாராளுமன்றம் செல்லா காசு போன்றே இருக்கின்றது.

தற்போதைய நாட்டின் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தில் நாங்கள் ஏதாவது தீர்மானம் எடுத்தாலும் அதனை ஜனாதிபதிக்கு ஏற்றுக்கொள்ளவும் முடியும் நிராகரிக்கவும் முடியும். அந்த நிலையிலேயே பாராளுமன்றம் இருக்கின்றது.

அதேபோன்று 20ஆவது திருத்தத்துக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தபோது அதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்க பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு இடைநிறுத்தி இருந்தது.

இதற்கு சபாநாயகர் என்றவையில் நீங்களும் பொறுப்பு கூறவேண்டும். துறைசார் மேற்பார்வை குழு இருந்திருந்தால், சட்டமூலத்தின் ஒவ்வொரு சரத்தையும் ஆராய்ந்து பார்க்க முடியுமாகிறது. அதனை செய்யவில்லை. அதனால் பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தியதற்கு நீங்களும் பங்குதாரர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஒன்று இருக்கின்றதா என்றுகூட கண்டுகொள்ளாமல் இரண்டு வருடங்கள் செயற்பட்டு விட்டு, தற்போது நாட்டில் நெருக்கடி ஏற்பட்ட பின்னர் எங்களிடம் தீர்வு கேட்கின்றனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டதா? பாராளுமன்றத்துக்கு தெரிவிக்காமல் அனைத்தையும் செய்துவிட்டு தற்போது நெருக்கடி ஏற்பட்ட பின்னர் பாராளுமன்றத்திடம் தீர்வு கேட்கின்றனர்.

மேலும் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு தீர்வு தேவை என்றால் முதலாவதாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்க வேண்டும்.

அதுதொடரபில் சட்டமூலம்  ஒன்றை சமர்ப்பிப்போம். அதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கேட்கின்றேன். அதேபோன்று இந்திய பிரதமர் மோடி விவசாய பூமி தொடர்பாக எடுத்த தீர்மானத்துக்கு விவசாயிகள் போராடியபோது, தவறை ஏற்றுக்கொண்டு அதற்காக அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார்.

அந்த முன்மாதிரியை பின்பற்றி, நாட்டின் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு ஜனாதிபதி மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.

இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு எதிரான வழக்குகளில் அவர்கள் விடுதலையாகின்றனர். அரசாங்கத்தின் நீதிமன்ற கொள்கை இதுவாகும். அதனால் ஜனாதிபதி தொடர்ந்தும் இந்த பதவியில் இருந்துகொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55