நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியிலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) என்பன கொழும்பின் இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.
இதேவேளை, கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்றுகூடியுள்ள மக்கள் மழைக்கும் மத்தியிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மெல்பேர்ன், சிட்னி, பிரிஸ்பேர்ன், பேர்த் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் கொழும்பு - தாமரைத் தடாக வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அங்கிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி பேரணியாகச் செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும், பொலிஸார் அதற்கு இடமளிக்கவில்லை.
இரும்பு கம்பிகளால் வீதித்தடைகள்
சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் சகல நுழைவு வீதிகளையும் வீதித்தடைகள் மற்றும் காவலரண் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தடுக்கப்பட்டனர்.
குறித்த பகுதியில் வீதியின் இரு மறுங்கிலும் துளைகளை இட்டு வீதித்தடைகளை உறுதியாகப் பொறுத்தி , பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாதுகாப்பு படையினரின் இந்த செயற்பாட்டின் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்
எவ்வாறிருப்பினும் இறுதி வரை அவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தைச் நோக்கிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதித்தடைகளின் மீது ஏறி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ஹர்ஷ டி சில்வா, முஜிபுர் ரஹ்மான், நளின் பண்டார, அஜித் மன்னம்பெரும, கபீர் ஹசீம், எஸ்.எம்.மரிக்கார், ரஞ்சித் மத்தும பண்டார, சம்பிக ரணவக, தலதா அத்துகோரள, வடிவேல் சுரேஷ், ஹெக்டர் அப்புஹாமி, ஹர்ஷன ராஜகருணா, லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட சகலரும் கலந்து கொண்டிருந்ததோடு , 'கோ கோட்டா ஹோம்' என்று கோஷமெழுப்பினர்.
கூட்டணி கட்சிகளும் பங்கேற்பு
இதே வேளை ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தன. அதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் என்போரும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 45 நிமிடங்களுக்கும் அதிக நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் நீடித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இதன் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , 'பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எமக்கு உரிமையும், சுதந்திரமும், வரப்பிரசாதமும் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நாம் சுதந்திர சதுக்கத்திற்கே செல்கின்றோம். இன்று அரசியலமைப்பிற்கு முரணாகவே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள். பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். சுதந்திர சதுக்கத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் எமக்கு இருக்கிறது.
நீங்கள் பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். நீங்கள் இருப்பது மக்களுக்கு துன்பத்தைக் கொடுக்கும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு அல்லவே? எனவே தயவு செய்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்வதற்கு எமக்கு இடமளியுங்கள். நாம் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். நீங்கள் பிழையான சட்டத்தை பாதுகாக்க வேண்டாம். அடிப்படை உரிமைகளை மீற வேண்டாம். இறுதியில் உங்களுக்கே நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். 220 இலட்சம் மக்களுக்காகவே நாம் இங்கு வந்துள்ளோம். பொலிஸாராகிய நீங்களும் மக்கள் சார்பாகவே முன்னிற்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் நீண்ட நேரம் வாக்குவாதம் தொடர்ந்த போதிலும் , இறுதிவரையில் பொலிஸாரால் அனுமதி வழங்கப்படாததன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதன் போது , 'எப்போது ஊரடங்கு நீக்கப்படுகிறதோ அப்போது மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம்' என்று கூறியே அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்
இதே வேளை ஜே.வி.பி. நேற்றைய தினம் மஹரகம பகுதியில் இதே போன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரிணி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்களான சுனில் ஹந்துனெத்தி, வசந்த சமரசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ, கே.டி.லால் காந்த, லக்ஷ்மன் நிபுனாராச்சி உள்ளிட்டோர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். '74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - மக்களை துன்புறுத்தும் இந்த அரசாங்கத்தை துரத்தியடிப்போம்' என்ற தொனிப்பொருளிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM