(செய்திப்பிரிவு)
இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்கின்ற போதனைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துத் தருமாறும் மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். எச். ஹரிச்சந்திர ஆகியோர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியுடன் கடந்த 30 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
குழந்தைகளின் மனதை சிறுவயதிலிருந்தே சரியாக வளர்த்தால், சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும் என்றும், வெளிநாட்டு அடிப்படைவாத சிந்தனைகள் பாடசாலை பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விடயங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து வருடங்களுக்குமான பாடத்திட்டங்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் அச்சிடப்பட்டுள்ள பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளில் 'இஸ்லாம் மார்க்கம் மற்றும் கலாசாரம்' கீழ் அடிப்படைவாத போதனைகள் இருப்பதாக ஜனாதிபதி செயலணியினால் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமாக முன் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளடங்காத சவுக்கடி வழங்குதல், ஏனைய மதத்தினரை இஸ்லாத்திற்கு மாற்ற பணம் கொடுத்தல், உரிய வயது பூர்த்தியாகாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல், சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்பவை போன்ற விடயங்கள் பாடப் புத்தகங்களில் உள்ளடங்கி இருப்பதாக செயலணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மூன்று தலாக் விவாகரத்து நடைமுறை, தமது மனைவியை அடிக்க முடியும் என்பவை போன்ற சிறுபிள்ளைகளின் மனதுக்குப் பொருந்தாத போதனைகளும் இந்த பாடப்புத்தகங்கள் மற்றும் கையேடுகளில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலணி மற்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட மிதவாத முஸ்லிம் நிபுணர்கள் குழுவும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எகிப்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவரான யூசுப் அல் கர்ளாவி எழுதிய புத்தகங்களும் ஆசிரியர் கையேடுகளில் கூடுதல் வாசிப்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
முஸ்லிம்கள் அடங்கிய குழுவினால் இதற்கு முன்னர் இந்தப் பாடப் புத்தகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பிழைகள் அங்கு தெரியாவிட்டாலும் அவற்றை உடனடியாக திருத்தப்பட வேண்டுமென தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
அல் குர்ஆன் வசனங்களுக்கு சரியான விளக்கத்தை வழங்காமையே இதற்கு ஒரு காரணம் என ஜனாதிபதி செயலணி உறுப்பினர் மொஹமட் மௌலவி தெரிவித்துள்ளார். இந்த பிழையை உடனடியாக சரி செய்து, நாட்டிற்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற பாடத்திட்டத்தை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்று செயலணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மிதவாத முஸ்லிம் சிந்தனைவாதிகள் தெரிவித்துள்ளனர்.
பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளில் உள்ள அனைத்து அடிப்படைவாத போதனைகளையும் கண்டறிந்து, ஆவணப்படுத்தி, கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர்களின் கோரிக்கையை ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி ஏற்றுக்கொண்டது.
செயலணியின் கல்வி உபகுழுவானது ஆய்வு செய்து, பாடநூல்களைத் திருத்துவதற்கும் அடிப்படைவாதப் போதனைகள் பாடசாலைப் பாடத்திட்டத்தில் நுழைவதைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM