தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண் டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங் களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.
அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
வடக்கு மாகாண சபை, சர்வமத தலைவர்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகம், பல்கலைக்கழக சமுகம், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை இந்த ஹர்த்தாலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது விடுதலை தொடர்பாக வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எமது விடுதலை தொடர்பாக உரிய உத்தரவாதம் வழங்கப்படவேண்டும். எமது உறவுகளுடன் இணைந்து வாழ்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இடைநிறுத்தியிருந்த தமது உண்ணாவிரதப்போராட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெ ள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் இயல்புநிலையைப் புறக்கணித்து காலை முதல் மாலை ஐந்து மணி வரையிலான காலப்பகுதியில் அமைதியான முறையில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக இன்று ஹர்த்தால் அனுஷ்டித்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசாங்கம் எமக்கும் சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்துக்கும் உரத்துச் சொல்லும் வகையில் நாம் இன்றைய தினம் ஹர்த்தலை அனுஷ்டிக்கின்றோம்.
இதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி சிறையில் வாடும் எமது சகோதரர்களை விடுதலை செய்வதற்கு ஏக குரலில் வலியுறுத்துவோம் என தமிழரசுக்கட்சியின் தலைவரும்இ யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை வவுனியா மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமகாண சுகாதார அமைச்சர் ப.சத்திய லிங்கம் ஆகியோர் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் பேரூந்துகள், முச்சக்கரணவண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைதிகளின் விடுதலையை வலியுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ஸ் இருதயநாதன், சந்திஸ்ரீஸ்கந்தராஜா உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கோரியுள்ளனர்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் இன்று நடைபெறவுள்ள புரண ஹர்த்தால் ஊடாக அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்திற்கு முதல் எச்சரிக்கையை விடுப்போமென கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆரச அரசார்ப்பற்ற நிறுவனங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கிழக்கு மாகாண தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், கோடீஸ்வரன், யோகேஸ்வரன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க தவறும்பட்சத்தில் கைதிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயல்கின்றது. விடுதலையின்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தாம் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்ற அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தவும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பானது திட்டமிட்டபடி இன்று வெ ள்ளிக்கிழமை இடம்பெறும். இப்போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புக்களதும் ஆதரவினை கோரிநிற்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
குறித்த தினத்தில் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் மூடியும், போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் முழுமையான இயல்பு நிலை தவிர்ப்பை கடைப்பிடிக்குமாறு அக்கட்சி கோரியுள்ளயுள்ளது. அத்துடன் இப்போராட்டத்தின்போது எவரும் வன்முறையில் ஈடுபடவோ, வன்முறைக்கு இடமளிக்கவோ கூடாது எனக் கோருவதுடன், மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கபடக்கூடாதென்பதுடன்இ பொது அமைதியை பேணும் வகையில் அனைவரையும் செயற்படுமாறும் வேண்டுவதாகவும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக நிறைவேற்றக்கோரி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்துக்கும் உரத்துச் சொல்லும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை வடக்குஇ கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்குஇ வடக்கு மாகாணசபை பூரண ஆதரவை வழங்குகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தின் போது மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படாதவாறு கண்ணியம் காக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.
ஆதரவு குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவதற்கான தார்மீக கடமை எனக்கு உள்ளது. நானும் பொதுமன்னிப்பிலுள்ள ஒரு நபராவேன். நீண்டகாலமாகவே நான் இவர்களின் விடுதலைதொடர்பாக குரலெழுப்பி வருகின்றேன். அந்த வகையில் அவர்களின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு நானும் எமது அமைப்பினரும் பூரண ஆதரவை வழங்குகின்றோம். எனினும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாது அமைதியான முறையில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு அரசியல் நலன்களுக்கு அப்பால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அழுத்தமளிக்கப்படவேண்டும் என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறுகையில்இ தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டுமென நான் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றேன். அண்மையில் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன். அதேபோன்று இன்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் சகோதர இளைஞர்களின் துன்பதுயரங்களில் பங்கெடுக்கும் ஒரு நபர் என்ற அடிப்படையிலும் நானும் எனது கட்சியும் தொழிற்சங்கமும் அரசியல் பேதமின்றி பூரண ஆதரவை வழங்கவுள்ளோம். இவ்வாறான போராட்டங்கள் அரசியல் நலன்களுக்கு அப்பால் கருத்தொற்றுமை மிக்கதாக பாதிப்படைந்தோரின் குரலாக இடம்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
இதேவேளை வடக்குஇ கிழக்கில் செயற்படும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் பிரமுகர்களும் தமது ஆதரவுகளை வௌியிட்டுள்ளன. இந்த ஹர்தாலை உணர்வு பூர்வமானதாகவும் அமைதியான முறையிலும் முன்னெடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இன்றைய தினம் ஹர்த்தால் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பொதுச்சொத்துக்கள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறளிக்காது அவற்றை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM