இலங்கையைப் பொறுத்தவரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதியத்தை பெறுவது தோட்டத்தொழிலாளர்களே ஆவர். ஒப்பீட்டு ரீதியல் ஏனைய துறைகளைவிட முறைசாரா தொழிலாளர் பெறும் வேதனத்தைவிட குறைந்த நாளாந்த ஊதியத்தையே பெறுகின்றனர். இலங்கை பற்றிய கவனத்தை செலுத்துகின்ற ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இம்மக்களின் உரிமைகளும் அபிலாஷைகளும் குறித்து கவனம் செலுத்த வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளன. மலையகப் பெருந்தோட்ட மக்களின் நிலம் மற்றும் வீட்டுரிமை சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. இன்றுவரையும் 50 வீதத்திற்கு மேலான மக்கள் பிரித்தானியர் அமைத்த “லயன்” வீடுகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் இந்த லயன் அறையோ, அந்த நிலமோ அவர்களின் உரிமையாகக் காணப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி ரீட்டா ஐசக்கிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி ரீட்டா ஐசக் சனிக்கிழமை மலையகத்திற்கான விஜயத்தினையும் மேற்கொண்டார். இதன் போது சமூக சேவையாளர்கள், புத்திஜீவிகளுடனான சந்திப்பும் நடைபெற்றதுடன் தெல்தோட்டடை லிட்டில்வெலி தோட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இங்கு மலையக சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி ரீட்டவிடமும் அவரது குழுவிடமும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி ரீட்டா வருகை தந்திருந்த சமயம், சிவில் சமூகம் சார்பாக மனித அபிவிருத்தி தாபனம் மற்றும் சமூக ஆய்வாளர்கள், புத்தி ஜீவிகள் பின்வரும் விடயங்களை முன்வைத்தனர்.
மலையக தமிழ் மக்கள் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் மிக முக்கியமானதொரு சிறுபான்மை அமைப்பினராக காணப்படுகின்றனர். வரலாற்று ரீதியாக பல்வேறு பாகுபாடுகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்ற மலையக தமிழ் மக்கள் ஏறக்குறைய 1.5 மில்லியன் சனத்தொகையை கொண்டுள்ளனர்.
இலங்கை பற்றிய கவனத்தை செலுத்துகின்ற ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இம்மக்களின் உரிமைகளும் அபிலாஷைகளும் குறித்து கட்டாயம் கவனமெடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளன. நல்லாட்சிக்கான அரசாங்கம் அரசியல் யாப்பு சீர்திருத்தம், நல்லிணக்கப் பொறிமுறை, பொருளாதாரக் கட்டமைப்பு சீர்
திருத்தம், சட்டவாட்சி, மனித உரிமைகள் குறித்த கரிசனை போன்ற விடயங்களில் மிகுந்த கவனஞ்செலுத்தி வருகின்றமை நல்ல நடவடிக்கைகளாக கருதப்படுகின்ற அதேவேளை, இப்பொறிமுறைகளில் சிறுபான்மையின மக்களும் குறிப்பாக மலையக மக்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
அத்துடன் அவர்கள் தொழிலாளர்களாக மாத்திரம் பார்க்கப்படாமல் இந்நாட்டின் பிரஜைகள் என்ற உரிமையையும் அந்தஸ்தையும் பெற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மற்றும் இன, மத, சாதிய, பால் பாகுபாடுகள் கலையப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் சகலருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இம்மக்கள் இலங்கையில் வறுமைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகமாகக் காணப்பட்டனர். ஆனால் அது தற்பொழுது 2009–2010 ஆம் ஆண்டுகளில் 9 வீதம் துரித வீழ்ச்சியடைந்துள்ளது. இப்புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
மலையகப் பெருந்தோட்ட மக்களின் நிலம் மற்றும் வீட்டுரிமை சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. இன்றுவரையும் 50 வீதத்திற்கு மேலான மக்கள் பிரித்தானியர் அமைத்த “லயன்” வீடுகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் இந்த லயன் அறையோ, அந்த நிலமோ அவர்களின் உரிமையாகக் காணப்படவில்லை. நல்லாட்சிக்கான அரசாங்கம் தற்பொழுது வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது. ஆனால் முன்னெடுப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டியிருக்கின்றது.
மொழி உரிமை மற்றுமொரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. மலையகத் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மலைநாட்டுப் பகுதியில் அரச நிறுவனங்களில் போதியளவு தமிழர்கள் நியமிக்கப்படாமை மொழி உரிமையை கேள்விக்குறியாகியுள்ளது. அரச சேவைகளை அணுகுவதற்கான உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், அம்பகமுவ, நுவரெலியா போன்ற பிரதேச செயலகங்கள் இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்டு காணப்படுகின்றன. இது மக்கள் அரச சேவைகளை அணுகுவதற்கான உரிமையை கேள்விக்குறியாகியுள்ளது. பிரதேச சபை சட்டத்தின் 33 ஆவது சரத்து, தோட்ட மக்கள் உள்ளுராட்சி அமைப்புகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தடைகளை ஏற்பத்தி வருகின்றது. இது சட்டச் சீர்திருத்தம் தேவை என்பதை உணர்த்தி நிற்கின்றது.
பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதார - வைத்திய சேவைக்கான உரிமை ஓப்பீட்டு ரீதியில் பின்தள்ளப்பட்டு காணப்படுகின்றது. கல்வியைப் பொறுத்தளவில் தற்போதைய அரசாங்கம் தேசிய அளவில் குறிப்பிடத்தக்களவு நிதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கியுள்ளது. என்றாலும் கூட மலையக பிரதேசங்களில் முழுமையான விஞ்ஞானம் மற்றும் தங்குமிட வசதிகளுடன் கூடிய பாடசாலைகளோ¸ தேசிய பாடசாலைகளோ ஓப்பீட்டு ரீதியில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏறக்குறைய 60 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்ற போதும் அவர்களுக்கு ஏறக்குறைய 1வீத பாடசாலைகள் 7 மாத்திரமே காணப்பட அது சிங்கள மொழி மூலம் 19 ஆக காணப்படுகின்றது. இவ்வாறான பாகுபாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தற்போது அரசாங்கத்தினால் மலையதத்தில் 25 கணித விஞ்ஞான பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட சுகாதார - வைத்திய துறை தேசிய சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தேசிய மயமாக்கப்பட வேண்டும். குறிப்பாக சிறுவர்¸ பெண்கள் இன விருத்தி சுகாதார, விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான பெருந்தோட்ட மருந்தகங்கள் தோட்ட வைத்திய உதவியாளர்களினாலேயே நடத்தப்படுகின்றன. இவர்களே சில வேளைகளில் தோட்டங்களில் வைத்தியர்களாக கடமையாற்றுகின்றனர். இது தேசிய வைத்தியத்துறைக்கு ஒரு சவாலாக அமைகின்றது. மற்றும் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை ஓர் அடிப்படை உரிமையாகும். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஓப்பந்த அடிப்படையில் நாட்சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த இரு வருட காலமாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தொழிற்சங்க- முதலாளிமார் சம்மேளன கூட்டு ஓப்பந்த பேச்சு வார்த்தை தோல்வியை தழுவியுள்ளது. இங்கு கூட்டாண்மை சமூக பொறுப்பு அல்லது ஐ.நா வர்த்தக ஒழுக்க விதிகளை அவர்கள் பின்பற்றுகின்றார்களாக என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதியத்தை பெறுவது தோட்டத்தொழிலாளர்களே ஆவர். ஒப்பீட்டு ரீதியல் ஏனைய துறைகளைவிட முறைசாரா தொழிலாளர் பெறும் வேதனத்தை விட குறைந்த நாளாந்த ஊதியத்தையே பெறுகின்றனர். எனவே அவர்களின் வாழ்வாதார உரிமை கேள்விக்குறியானதாக காணப்படுகின்றது. இம்மக்களைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கான உரிமையை அணுகுவதில் பல்வேறு தடைகளும், பாகுபாடுகளும் காட்டப்படுகின்றன. இம்மக்களின் அபிவிருத்தி உரிமையானது சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. எவ்வாறெனினும், பெரும்பாலான பெருந்தோட்டங்கள் கம்பனிகளினாலும், மற்றும் அரச நிறுவனங்களினாலும் நிர்வகிக்கப்படுகின்றமையால் தேசிய அபிவிருத்தி திட்டங்கள், அபிவிருத்தி நலன்கள் தோட்டங்களை அணுகுவதில், அல்லது பெருந்தோட்ட மக்கள் அத்திட்டங்களை அணுகுவதில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தடைகள் காணப்படுகின்றன.
இலங்கையில் புதிதாக தயாரிக்கப்படவுள்ள அரசியல்யாப்பு, இலங்கை சமூகத்தை, எதிர்கால சவால்களை சந்திக்க, சாதிக்க கூடிய ஒரு சமூகமாக இட்டு செல்ல வேண்டும். இவ்யாப்பு சகோதரத்துவம் ஒருமைப்பாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மனித உரிமை ஜனநாயகத்தை மதிக்கும் தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பின்னணியில் எமது அரசியலமைப்பானது ஒற்றையாட்சி பண்புகளையா? அல்லது சமஷ்டி பண்புகளையா? கொள்ள வேண்டுமென்ற விவாதம் எழுகின்றது. இலங்கை சமூகம் பல்லின பல மத, பல கலாசார பண்புகளை கொண்ட ஒரு சமூகமாக இருக்கின்றமையால், ஆட்சியிலே சகலரும் பங்குபற்றும், சகல கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு. பன்முக தன்மை, பன்முக ஜனநாயகம், மக்களின் ஜனநாயகத்திற்கு முதன்மை சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, மனித உரிமைகளை நிலைநாட்டல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என நாம் கருதுகின்றோம்.
இலங்கை பெருந்தோட்டத்துறையை பொறுத்தளவில் அண்மைக்காலமாக கட்டமைப்பு மாற்றம் பற்றி பேசப்பட்டு வருகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள் சுதந்திரமான தொழிலாளர்களாக அடயாளப்படுத்தப்பட வேண்டும். அரசியல் யாப்பின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதன் ஊடாக இந்நிலையை எய்தலாம் என்று கருத்துரைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM