(எம்.எப்.எம்.பஸீர்)
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக முன் வைத்துள்ள பரிந்துரைகள் சட்டத்துக்கு முரணானவை எனவும், அவ்வாறான பரிந்துரைகளை முன் வைக்க ஆணைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதங்களை முன் வைத்தார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக தம்மை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனு நேற்று (14) மீள பரிசீலிக்கப்பட்ட போதே, மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த விடயத்தை முன் வைத்தார்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான டி.எம்.சமரகோன் மற்றும் லபார் தாஹிர் ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (14) பரிசீலிக்கப்பட்டிருந்தது.
இதன்போது பிரதிவாதிகலில் ஒருவரான ஜனாதிபதி செயலர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்க, ' ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழி வாங்கல் குறித்த ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு மனுதாரருக்கு எதிரான பரிந்துரைகளை முன் வைத்துள்ளன.
எனினும், பின்னணியில், அந்த ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியுமான பின்னணி தொடர்பில் ஆராய விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அரிக்கை கிடைக்கும் வரை மனுதாரருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.' என மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இதனை மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.
இதனையடுத்தே மனுதாரராண அனுர குமார திஸாநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பரிந்துரைகள் சட்டத்துக்கு முரணானவை என வாதங்களை முன் வைத்து மனுவை பரிசீலிக்க திகதியொன்றினை வழங்குமாறு கோரினார்.
அதனை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் ஏபரல் 5 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்தது.
முன்னதாக குறித்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்ரசிறி ஜயதிலக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்ரா பெர்ணான்டோ, ஆணைக்குழுவின் செயலாளர், அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவையின் செயலாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகஸ்தர்கள் ஏதேனும் வகையில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் , அதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், சட்ட மா அதிபரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, அவற்றின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் குற்றவாளிகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை சட்ட விரோத செயல் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செயற்பட்டதனூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி ஆணைக்குழு செயற்பட்டுள்ளதாக மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகையால், ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாதிருக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கடந்த 2021 மார்ச் 18 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM