(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டதொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் வத்திக்கானுக்குச் சென்றிருக்கும் நிலையில், இம்முறை இலங்கைமீது வலுவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கை குறித்து நாம் அஞ்சவில்லை என்று கூறிக்கொண்டிருக்கமுடியாது.
ஏனெனில் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கக்கூடிய மிகமோசமான நெருக்கடிநிலையில் சர்வதேச சமூகத்தை அனுசரித்து, அதன் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது மிகவும் அவசியமாகும்.
மாறாக நாட்டின்மீது மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் பட்சத்தில், நாடு தலைதூக்குவதென்பது மிகவும் கடினமான விடயமாக மாறிவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
தற்போது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் மாத்திரமன்றி முழுமையாக வங்குரோத்து நிலையை அடையக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
இருப்பினும் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்குவதற்கோ அல்லது சிக்கல்களிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கோ இன்னமும் அரசாங்கம் உரியவாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இப்பிரச்சினைகளின் நவீன வடிவமாக இப்போது நாடளாவிய ரீதியில் 24 மணிநேரமும் மின்சாரத்தை விநியோகிக்கமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.
மின்னுற்பத்தி, போக்குவரத்து போன்ற தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதற்குக்காரணம் உலகசந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்போ அல்லது உற்பத்தி வீழ்ச்சியோ அல்ல.
மாறாக எரிபொருளைக் கொள்வதற்குத் தேவையான டொலர் எமது நாட்டின்வசமில்லாமையே அதற்குக் காரணமாகும்.
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நடைமுறைக்குப் பொருத்தமானதும் ஸ்திரமானதுமான பொருளாதாரக்கொள்கை இன்றியமையாததாகும். இருப்பினும் அரசாங்கம் அத்தகைய கொள்கையைக் கொண்டிருக்கவில்லை.
இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் அதற்குத் தீர்வுகாண்பதற்கும் அரசாங்கத்தின்வசமுள்ள செயற்திட்டம் என்ன? நாட்டில் டொலருக்குப் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும் அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றார்.
இவ்வாறு நாட்டின் உண்மை நிலைவரத்தை மக்களிடமிருந்து மறைப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றதே தவிர, அதற்கான தீர்வு தொடர்பில் கவனத்தைத் திருப்பவில்லை.
இன்றளவில் வலுசக்தி அமைச்சரும் மின்சக்தி அமைச்சரும் நாட்டில் இருக்கின்றார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்கு ஏதுவான காரணங்களைக் கூறாமல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அவதானம் செலுத்தவேண்டும்.
அமைச்சரவையில் பேசவேண்டிய விடயங்களை ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுவதால் எவ்வித தீர்வும் கிட்டப்போவதில்லை. மாறாக அதன்மூலம் மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பது மாத்திரமே அவர்களது நோக்கமாக இருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் வெகுவாக அதிகரித்த பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக ஏற்பட்ட உணவுற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மிகத்துரிதமாகத் தீர்வுகாணாவிட்டால், எதிர்வரும் ஏப்ரல்மாதம் கொண்டாடவிருக்கும் தமிழ், சிங்களப் புதுவருடப்பிறப்பிற்கு முன்னதாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிடும். அவற்றுக்குத் தீர்வுகாணாமல் நாடு என்ற ரீதியில் நாம் முன்நோக்கிப்பயணிக்க முடியாது.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் நாளையதினம் (இன்று) இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதுடன் அதுகுறித்த விவாதமும் இடம்பெறமுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடருக்கோ அல்லது அதனூடாக இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கை குறித்தோ நாம் அஞ்சவில்லை என்று கூறிக்கொண்டிருக்கமுடியாது.
ஏனெனில் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய மிகமோசமான நெருக்கடிநிலையில் சர்வதேச சமூகத்தை அனுசரித்து, அதன் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது மிகவும் அவசியமாகும்.
மாறாக மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் நாட்டின்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் பட்சத்தில், நாடு தலைதூக்குவதென்பது மிகவும் கடினமான விடயமாக மாறிவிடும்.
மறுபுறம் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசரை சந்திப்பதற்காக வத்திக்கானுக்குச் சென்றிருக்கின்றார். அதன்நோக்கம் குறித்து நாம் அறியாதபோதிலும், உயிர்த்த ஞாயிறுப்பயங்கரவாதத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் இம்முறை நாட்டின்மீது வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்று கருதுகின்றோம்.
ஆகவே இராஜதந்திர ரீதியான பொறிமுறையின் ஊடாக இவ்விடயத்தைக் கையாளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM