(எம்.எப்.எம்.பஸீர்)
வெளிநாட்டுக்கு செல்லும் போது, விமான நிலைய அதிகாரிகளுக்கு கையளிக்க வேண்டிய பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை நாட்டின் முன்னணி தனியார் வைத்தியசாலையின் அறிக்கைக்கைகளை ஒத்த அறிக்கைகளாக போலியாக தயாரித்து 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகையை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு கோடீஸ்வர வர்த்தகர்கள் உள்ளிட்ட மூவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரு கோடீஸ்வர வர்த்தகர்களும் நேற்று (22) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.
இந்த போலி பி.சி.ஆர். விவகாரத்தில் பிரதான சந்தேக நபரக கருதப்படும் பிரபல கோடீஸ்வர மாணிக்கக் கல் வர்த்தகரான அளுத்கமை - தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் ஹுசைன் சஹீர் ஷியாம், களுத்துறையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான வட்டவல கங்கானம்கே தொன் தில்ஷான் மதுரங்க ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்ச் செய்த சி.ஐ.டி. அதிகாரிகள், குறித்த சந்தேக நபர்கள் முன்னணி தனியார் வைத்தியசாலையின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை மிக சூட்சுமமாக பயன்படுத்தி 1000 பி.சீ.ஆர். அறிக்கைகள் வரை போலியாக தயார் செய்து வழங்கியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகளை சந்தேக நபர்கள் மிக சூட்சுமாக பல நாட்களாக முன்னெடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்ததாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர். முன்னணி தனியார் வைத்தியசாலை ஒன்றின் இணையத் தளத்தினை ஒத்த இணையத் தளம் ஒன்றினையும் இணைத்த இந்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் கியூ.ஆர். குறியீட்டினையும் சேர்த்து, விமான நிலைய அதிகாரிகளின் கணிணித் தகவல்களில் சிக்காத வண்ணம் இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.
கடந்த 20 ஆம் திகதி சி.ஐ.டி. அதிகாரிகள், நீர்கொழும்பு - தெல்வத்த பகுதியில் சுற்றி வளைப்பொன்றினை முன்னெடுத்து 27 வயதான மருதானை சேர்ந்த மரிக்கார் மொஹம்மட் நசார் மொஹம்மட் எனும் நபரைக் கைது செய்திருந்தனர். இந்த பி.சி.ஆர். போலி அறிக்கை விவகாரத்தில் தரகராக செயற்பட்ட நபர் ஒருவரே அவர் என விசாரணையாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர் சுமார் 70 போலி பி.சி.ஆர். அறிக்கைகளைப் பெற்றுக்கொடுக்க தரகராக செயற்பட்டுள்ளதாக கூறும் சி.ஐ.டி.யினர், இவரை தவிற மேலும் 8 தரகர்கள் இருப்பதாக குறிப்பிட்டனர்.
ஒரு போலி பி.சி.ஆர். அறிக்கைக்கு 6 ஆயிரம் முதல் 6,500 ரூபாவரை பெறப்பட்டுள்ளதாகவும் , பிரதான சந்தேக நபருடன் தரகர்கள் வட்ஸ் அப் ஊடாகவே தமது அடையாளங்கள் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படா வண்ணம் தொடர்புபட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தரகரான குறித்த சந்தேக நபர் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டு இன்று ( 23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளிலேயே பிரதான சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் - பிரண்டியாவத்தையில் வைத்தும் மற்றையவர் களுத்துறை - நாகொட பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டியவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ( தர்கா நகரைச் சேர்ந்தவர்) சுமார் 750 போலி பி.சி.ஆர். அறிக்கைகளை வழங்கி நபர்களை வெளிநாடு செல்ல உதவியுள்ளதாக சி.ஐ.டி.யினர் சந்தேகிக்கின்றனர். அவரிடமிருந்து ஒரு மடிக் கணினி மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ள பொலிசார் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 3 மடிக் கணினிகள், கையடக்கத் தொலைபேசி ஒன்று, 4 தகவல் சேமிப்பு பெட்டகங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையிலேயே சந்தேக நபர்கள் நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தண்டனை சட்டக் கோவையின் 452,457,263 ஆகிய அத்தியாயங்களின் கீழும் புலன் சொத்துக்கள் சட்டத்தின் 186 ஆவது அத்தியாயத்தின் கீழும் தனிமைப்படுத்தல் ,தொற்று நோய் கட்டுப்பாடுத்தல் சட்டம் மற்றும் 2015 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் 24 ஆவது அத்தியாயத்தின் கீழும் குற்றம் புரிந்துள்ளதாக நீதிமன்றுக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு ஆய்வுகூடத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன தாக்கல்ச் செய்துள்ள அறிக்கையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பணிப்பாளர் காவிந்த பியசேகரவின் ஆலோசனைக்கு அமைய, டிஜிட்டல் பகுப்பாய்வு ஆய்வுகூடத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM