ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 08

21 Feb, 2022 | 12:53 PM
image

(ஸ்ரீ ஸக்தி சுமனன்)

இங்கு ஸ்ரீ அரவிந்தர் சொற்களைப் பயன்படுத்தும் போது divine Event எனும் சொல்லில் Event இற்கு E என்ற பெரிய எழுத்தைப் சங்கேதமாகப் பயன்படுத்துகிறார். 

சிறிய e இனைப் பயன்படுத்தினால் அது சாதாரண ஒரு நிகழ்வு என்று பொருள் படும். ஆனால் பெரிய எழுத்தைப் பயன்படுத்தும் போது அது சிருஷ்டியினைக் குறிக்கும் நிகழ்வினைக் குறிக்கிறது.

இப்படியாக the huge foreboding mind of Night இல் உள்ள Night சாதாரண இரவினைக் குறிக்கவில்லை.

இது இருள் சூழந்த ஆன்மாவினைக் குறிக்கிறது. இந்த இருள் சூழந்த ஆன்மாவின் மனம் முன்னறிவிக்கும் தன்மையுடையது. 

அது இன்னும் ஒளியேற்றப்படவில்லை. இந்த ஆன்மா முன்னறிவிக்கும் மனதுடன் எங்கிருக்கிறது என்றால் In her unlit temple of eternity – தன்னுடைய ஒளியேற்றப்படாத ஆலயத்தில் நிசப்தத்தின் விளிம்பில் அசைவற்றுக் கிடந்தது.

படைப்பு நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக ஆன்மாவானது தான் ஆன்மா, ஆனந்தம், சத்தியம்,

அமரத்துவம் என்ற தனது அசல் நிலையிலிருந்து பிராண தளத்திற்குள் செல்லும் போது தனது தொடர்பினை அறுத்துக்கொண்டு இருளான மயக்கம், துன்பம், பொய்மை, மரணம் என்ற நிலைக்குள் செல்லப்போகிறோம் என்பதையும் அறிந்துகொண்டு, ஒளியேற்றப்படாத இருளான ஆன்மாவாக, படைப்பிற்குள் புகுவதற்கு தயாராக நிசப்தத்தின் விளிம்பில் இருந்துகொண்டு தன்னை விரித்துக் கொள்ளத் தயாராகிறது.

இந்த வரிகளில் ஒரு ஆன்மா அல்லது உணர்வு தன்னை படைப்பிற்குள் உட் செலுத்த முன்னர் உள்ள நிலையை விபரிக்கிறது. 

அது தான் கீழறங்கப்போகும் நிலையைப் பற்றிய உள்ளுணர்வுடன் அசையாத நிலையில், நித்தியமான தன்மையுடன்,மௌனத்தின் விளிம்பில் படைப்பிற்கு ஒருமணி நேரம் முன்னதாக இருக்கிறது என்று விபரிக்கப்படுகிறது.

Almost one felt, opaque, impenetrable, In the sombre symbol of her eyeless muse The abysm of the unbodied Infinite A fathomless zero occupied the world. 1.3

ஊடுருவமுடியா கனத்தை அனேகமாக உணரும் நிலையில் கண்களற்ற அந்த இரவு மந்தமான குறியீட்டுடன் சிந்திக்க உடலற்ற அந்த அனந்தப் படுகுழி அளவிடமுடியாச் சூன்யம் உலகை ஆக்கிரமித்தது. 

1.3 படைப்பின் முதல் வெளிப்பாடு தனது மூலத்திலிருந்து பிரிந்து ஊடுருவ முடியாத கனமான நிலையையும், ஊடுருவ முடியாத மயக்க நிலையையும் உணர்வு அடைகிறது. 

தெய்வீக் நிகழ்வு என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுவது படைப்பின் சுழற்சி ஆரம்பமாகப் போகிறது என்பதாகும். 

இந்தப் படைப்பு என்ற செயல் நித்தியமானது, தொடர்ந்து ஒரு சுழற்சியில் நடைபெற்றுக்கொண்டு இருக்கு ஒன்றாகும், இது ஆரம்பமாகும் நிலையை அவர் foreboding mind of Night - பெரிய தீய முன்னறிகுறியை அறிந்த இரவின் மனம் என்று குறிப்பிடுகிறார். 

இது உணர்வற்ற, அசையாத, உயிரற்ற, அந்தகத் தன்மை வாய்ந்தது. தெளிவின்மை மற்றும் சுயநினைவின்மை, அசைவின்மை, உடலற்ற அனந்தப் படுகுழி, போன்ற சொற்கள் ஸ்ரீ அரவிந்தர் பாவிப்பது அளவிடமுடியாச் சூன்யத்தின் தன்மைகளை விபரிப்பதற்காகும்.

பொதுவாக சூன்யம் என்பது ஒன்றுமற்ற பூச்சியம் என்று கருதப்படும். ஆனால் ஸ்ரீ அரவிந்தர் fathomless zero என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். 

fathomless என்பது அளவிடமுடியா, புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல். அளவிட முடியாத ஆழம் கொண்டது சூன்ய நிலை என்று கூறுகிறார். 

இது ஒன்றுமற்றதல்ல எல்லாம் நிறைந்த படைப்பிற்கு மூலமான, அசைவற்ற நிலையில், அசைவதற்குத் தயாரான கனமான நிலையில், இருளால் நிறைந்த சூன்ய நிலை. 

இது புத்தர் கூறிய வெற்றுச் சூன்யம் அல்ல. 

இது பல மில்லியர் பிரபஞ்சங்கள் வெளிப்பட மலரக் காத்திருக்கும் உறை நிலையில் இருக்கும் சூன்ய நிலை. 

இந்தச் சூன்யத்தினை மனதால் வரைவிலக்கணப் படுத்தவோ, அளக்கவோ முடியாது. இதற்குள் படைக்கப் படப்போகிற அனைத்தும் நிறைந்திருக்கிறது.

இந்த வரிகள் படைப்பு இருள் நிறைந்த, உடல் அற்ற, அளவிடமுடியாச் சூன்யத்திலிருந்து நடைபெறுகிறது.

என்பதையும் அதன் தன்மைகளையும் கூறுகிறார்.

ஒளி நிறைந்த ஆன்மா தனது உண்மை சொருபமான ஒளி, ஆனந்தம், சத்தியம், அமரத்துவம் என்பவற்றிலிருந்து பிரிந்து பிராணத்தளத்தினை அடையும் போது அது இருள் நிறைந்த, உடல் அற்ற, அளவிடமுடியாச் சூன்யத்திற்குள் புகுந்துகொண்டு பின்னர் படைப்பினை ஆரம்பிக்கிறது.

இந்தச் சூன்யத்தின் தன்மையை பிரசவிக்க இருக்கும் தாய் எப்படி தனது வயிற்றினுள் குழந்தையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதேவேளை மந்தமாகவும், வாந்தி எடுத்துக்கொண்டு, துன்பத்துடன், கனமாக இருக்கிறாளோ அதுபோன்ற நிலையையே fathomless zero என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

தாயின் வயிற்றில் உயிர்ப்புடன் குழந்தை வெளிப்பட இருக்கிறது, வயிறு நிரம்பியிருக்கிறது, வெளிப்படத்தயாராக இருக்கிறது. 

இந்த வெளிப்பாட்டிற்கு முன்னர் தாய் வலியுடனும், மந்தமாகவும், இருக்கும் நிலையே படைப்பிற்கு முந்திய இருள் சூழந்த அந்த இரவின் நிலையும் கூட.

(தொடரும்….)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right