தனது மகனை ஆயுத முனையில் கடத்திய 'ஹொரன நீலக ' பொலிஸாரால் சுட்டுக் கொலை

Published By: Digital Desk 4

17 Feb, 2022 | 09:41 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பாட்டியின் பொறுப்பிலிருந்த தனது 7 வயது மகனை ஆயுத முனையில் கடத்திச் சென்றதாக கூறப்படும் ' ஹொரன நீலக ' எனும் பெயரால் அறியப்படும் ஈஸ்வரகே தொன் நீலக சந்துருவன்  எனும் நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அங்குராந்தோட்டை - வல்பிட்ட பகுதியில் வீடொன்றில் குறித்த சந்தேக நபர் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அவரைக் கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட சம்பவத்தில்  பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  நிஹால் தல்துவ கூறினார்.

பொலிஸாரால் பல்வேறு குற்றங்களை முன்னெடுத்த நபர் என அடையாளப்படுத்தப்படும் ' ஹொரன நீலக ' எனும் பெயரால் அறியப்படும் ஈஸ்வரகே தொன் நீலக சந்துருவனுக்கு எதிராக கடந்த வாரம் தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு உள்ளது. 

இந்த தாக்குதலால்  அவரின் மனைவியின் கை இரு துண்டுகளாக வேறாகியுள்ளதாகவும், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுவதாகவும் பொலிஸார் கூறினர்.

 இதனைவிட புளத் சிங்கள பொலிஸ் பிரிவின், தனது கள்ளக் காதலியுடன் தொடர்பிலிருந்த  ஒருவரை வெட்டிப் பட்டுகாயம் ஏற்படுத்தியமை தொடர்பிலும் சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறான நிலையில், தன் மனைவியின் கைகளை வெட்டி பாரிய காயங்களை ஏற்படுத்தியமைக்காக   பொலிசார் ' ஹொரன நீலக ' எனும் பெயரால் அறியப்படும் ஈஸ்வரகே தொன் நீலக சந்துருவனை கைது செய்ய தேடியுள்ளனர்.

 இவ்வாறான பின்னணியில், இன்று காலை 7.40 மணியளவில் ,  மாமியாரின் வீட்டுக்கு சென்றுள்ள  சந்தேக நபர்,  ரீ - 56 ரக துப்பாக்கி கொண்டு வேனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய வண்ணம், அங்கிருந்த தனது 7 வயது மகனை கடத்திச் சென்றுள்ளார்.

 இந் நிலையிலேயே பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 அவ்வாறான பின்னணியிலேயே, சந்தேக நபர், அங்குருவாந்தோட்டை பொலிஸ் பிரிவின் வல்பிட்ட பகுதி வீடொன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அங்கு செல்லும் போது ரீ 56 ரக துப்பாக்கி கொண்டு சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையிலேயே பதில் தாக்குதலில் சந்தேக நபர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் அந்த தாக்குதலின் பின்னர் பொலிசார், சந்தேக நபர் மறைந்திருந்த வீட்டை  சோதனைச் செய்ததாகவும், அங்கு அவர் கடத்திச் சென்றதாக கூறப்படும் அவரது மகன் இருக்கவில்லை எனவும்  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். இந் நிலையில் குறித்த சிறுவனை மீட்க விஷேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.   

சந்தேக நபர் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த பயன்படுத்தியதாக கூறப்படும் ரீ 56 ரக துப்பாக்கியும், ஒரு தொகை தோட்டாக்களும் இதன்போது மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right