( எம்.எப்.எம்.பஸீர்)
சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) மனுவை பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) திகதி குறித்தது.
எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி இம்மனுவை பரிசீலனைக்கு எடுக்கவே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இம்மனு கடந்த 10 ஆம் திகதி முதன் முதலாக ஆராயப்பட்ட நிலையில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன கோரிய கால அவகாசத்துக்கு அமைய, வியாழக்கிழமை (17) வரை பரிசீலனைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
இன்றைய தினம் இம்மனு பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரரான வைத்தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க, தனது சேவை பெறுநருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடிப்படை ஒழுக்காற்று விசாரணைகள், தற்போதைய குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ ஊடாக முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைப்பதாக கூறினார்.
குறித்த பணிப்பாளர் பக்கச்சார்பான நபர் எனவும், அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க குறிப்பிட்டார்.
இதன்போது பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன மன்றில் விடயங்களை முன் வைத்ததுடன், அரசியலமைப்பின் 58 மற்றும் 61 ஆம் உறுப்புரைகளை சுட்டிக்காட்டி, அரச சேவை ஆணைக் குழு முன்னிலையில் உள்ள ஒரு விடயம் தொடர்பில் விடயங்களை பரிசீலனை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
அத்துடன், ஏற்கனவே சம்பள நிலுவையை மனுதாரருக்கு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் படிமுறைகளை பூர்த்தி செய்து அதனை வழங்குவது தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் மன்றில் குறிப்பிட்டார்.
இந் நிலையிலேயே இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மனுவை எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி பரிசீலிக்க திகதி குறித்தது.
சட்டத்தரணி சஞ்ஜீவ குல ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய இம்மனுவில் மனுதாரர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக சட்டத்தரணிகளான புலஸ்தி ரூபசிங்க, ஹபீல் பாரிஸ் ஆகியோருடன் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகின்றார்.
பிரதிவாதிகளுக்காக அரச சட்டவாதி மெதக பெர்ணான்டோவுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆஜராகின்றார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக தான் சேவையாற்றியதாகவும், இதன்போது சட்ட விரோத கருத்தடை தொடர்பில் ஆதாரமற்ற, இன ரீதியிலான வெறுக்கத் தக்க பிரச்சாரங்களை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தான் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகப்பேற்று துறையில் நிபுணர்கள் பலரும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அறிவியல் ரீதியாக சாத்தியமற்றவை எனவும் பொய்யானவை எனவும் ஆதாரபூர்வமாக விளக்கியும், தன் மீதான பொய்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பணவுகள் இதுவரைக் கிடைக்கவில்லை எனவும் தாபன விதிக் கோவையின் 20 (2) ஆம் பிரிவின் படி, கட்டாய விடுமுறையில் உள்ளவருக்கு சம்பளம் வழங்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதரரான வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அவற்றை செலுத்த உடனடியாக பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM