(என்.வி.ஏ.)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில் விளையாடுவதறகு சப்ரகமுவ மாகாண அணியும் வட மாகாண அணியும் முதலாவது அணிகளாக தகுதிபெற்றுக்கொண்டன.
மத்திய மாகாணத்துக்கு எதிராக காலியில் இன்று நடைபெற்ற 6ஆம் கட்டப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் சப்ரகமுவ மாகாண அணியும் ரஜரட்ட அணியுடனான போட்டியை 2 - 2 என வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டதன் மூலம் வட மாகாண அணியும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
எஞ்சிய இரண்டு இடங்களுக்கு மேல், தென், கிழக்கு மகாhண அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகின்றது. இந்த 3 அணிகளில் ஏதாவது 2 அணிகளுக்கு மாத்திரமே அதிகப்பட்சமாக 13 புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.
மேல் மாகாணத்துடனும் தென் மாகாணத்துடனும் கிழக்கு மாகாணம் தனது கடைசி 2 போட்டிகளில் மோதவுள்ளதால் இந்த 3 அணிகளில் 2 அணிகளுக்கே வெற்றிபெறக்கூடியதாக இருக்கும்.
இது இவ்வாறிருக்க, எம். எவ். றஹ்மான் பயிற்றுவிக்கும் சப்ரகமுவ மாகாண அணி இன்றைய போட்டியில் ஆரம்பம் முதல் திறமையாக விளையாடி மத்திய மாகாணத்தை வெற்றிகொண்டது.
போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் எம். ஷிபான் இடதுபுறத்திலிருந்து எடுத்த ப்றீ கிக்கை நன்கு பயன்படுத்திக்கொண்ட எம்.எப்.எம். ரஸான் கோல் போட்டு சப்ரகமுவ மாகாண அணியை முன்னிலையில் இட்டார்.
இடைவேளைக்கு சில செக்கன்கள் இருந்த போது மத்திய களத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை நோக்கி ஓடிய அணித் தலைவர் எம். ஷிபான் மிகவும் இலாவகமாக தனது முன்னங்காலால் கோல் போட்டு சப்ரகமுவ அணியை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் பந்தை அங்குமிங்குமாக உதைத்த வண்ணம் விளையாடியதால் மேலதிக கோல் எதுவும் போடப்படவில்லை.
வட மாகாணம் 2 - ரஜரட்ட 2
வட மாகாண அணிக்கும் வட மத்திய மற்றும் வட மேல் கூட்டு அணியான ரஜரட்ட அணிக்கும் இடையில் மாத்தறையில் நடைபெற்ற மற்றொரு போட்டி 2 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
போட்டியின் 56ஆவது நிமிடத்தில் வட மாகாண வீரர் எம். நிதர்ஷனை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து முரணான வகையில் ரஜரட்ட வீரர் எம். அஷெவ் வீழ்த்தியதால் வட மாகாணத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அந்தப் பெனல்டியை கோலாக்கிய நிதர்ஷன், 57ஆவது நிமிடத்தில் வட மாகாண அணியை முன்னிலையில் இட்டார்.
போட்டியின் 78ஆவது நிமிடத்தில் ரஜரட்ட வீரர் எம்.என்.என். மொஹமத் உதைத்த பந்தை திசைதிருப்ப முயற்சித்த வட மாகாண வீரர் ரி. கிளின்டன் சொந்த கோல் ஒன்றை எதிரணிக்கு போட்டுக்கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்த ரஜரட்ட அணி போட்டியின் 83ஆவது நிமிடத்தில் எம்.என்.எம். மோஹமத் மூலம் கோல் போட்டு 2 - 1 என முன்னிலை அடைந்தது.
எவ்வாறாயினும் சரியாக 90ஆவது நிமிடத்தில் அசிக்கூர் ரஹ்மான் பந்தை வேண்டுமென்றே கையால் தட்டியதால் மத்தியஸ்தர் தரங்க புஷ்பகுமாரவின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்காகி களம் விட்டு வெளியேறினார்.
அந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்ட ப்றீ கிக் மூலம் நிதர்ஷன் கோல் போட்டு வட மாகாணத்துக்கு ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடிக்க உதவினார்.
இன்றைய போட்டி முடிவுகளுக்கு அமைய சப்ரகமுவ மாகாணம் 6 போட்டிகளில் 4 வெற்றிகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கின்றது.
வட மாகாணம் 6 போட்டிகளில் 3 வெற்றிகள், 3 வெற்றிதோல்வியற்ற முடிவுகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.
மேல் மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன தலா 7 புள்ளிகளுடன் 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களில் இருக்கின்றன.
ரஜரட்ட அணி 5 புள்ளிகளுடனும் மத்திய மாகாண அணி 4 புள்ளிகளுடனும் ஊவா மாகாண அணி 3 புள்ளிகளுடன் கடைசி 3 இடங்களில் இருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM