(நா.தனுஜா)
இம்முறை சுதந்திரதின நிகழ்வுகள் மிகக்கோலாகலமான முறையில் நடாத்தப்பட்டபோதிலும், அதுகுறித்த மக்களின் ஆர்வம் பெருமளவிற்கு வீழ்ச்சிகண்டிருந்தமையினை அவதானிக்கமுடிந்தது. அதன்மூலமும் மக்கள் ஒரு செய்தியைக் கூறுகின்றார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.
அதனடிப்படையில் தமது கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் கொழும்பில் வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில விடயங்கள் தொடர்பில் கவனம்செலுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. சுதந்திரதினத்தன்று நாட்டுமக்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரையை நாம் மிகவும் கவனமாக செவிமடுத்தோம்.
அதன்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இயலுமை அவருக்குக் கிடைக்கவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம். தற்போது நாடளாவிய ரீதியில் விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி தொடர்பில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லாவிடினும், ஜனாதிபதி என்ற வகையில் இப்பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கவேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டிருக்கும் துன்பங்களையும் அவர்களது கோபத்தையும் நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய வீழ்ச்சிக்கான பிரதான காரணம் அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகவும் அரசசேவை அரசியல்மயமாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட நெருக்கடிகளுமேயாகும். அரசசேவையில் பணிபுரியும் திறமையான அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை முன்னிறுத்திச் செயற்பட்டமையும் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் உடனுக்குடன் மாற்றமடைவதற்கும் வாபஸ் பெறப்படுவதற்கும் அதுவே காரணமாகும். ஏனெனில் நாட்டில் நிர்வாகசேவையை செயற்திறனாக முன்னெடுப்பதற்கு போதியளவு அனுபவம் அவசியமாகும்.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் மட்டுமீறிய அதிகாரங்கள், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் ஆகிவற்றைத் தம்வசம் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யமுடியவில்லை. இந்தக் குறைபாடுகளை அரசாங்கம் உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும்.
இம்முறை சுதந்திரதின நிகழ்வுகள் மிகக்கோலாகலமான முறையில் நடாத்தப்பட்டபோதிலும், அதுகுறித்த மக்களின் ஆர்வம் பெருமளவிற்கு வீழ்ச்சிகண்டிருந்தமையினை அவதானிக்கமுடிந்தது. அதன்மூலமும் மக்கள் ஒரு செய்தியைக் கூறுகின்றார்கள் என்பதைக் கருத்திற்கொள்ளவேண்டும்.
அதேபோன்று தற்போது நிலவும் அந்நியச்செலாவணிப் பற்றாக்குறைக்கும் அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகமே காரணமாகும். நாட்டில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள், நீண்டகால நோக்கிலான திட்டங்கள் வகுக்கப்படாமை, வெளிநாட்டுச்சொத்து மோசடி என்பவற்றை வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் இதற்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.
அடுத்ததாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இலங்கையில் இந்தச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவது குறித்து சர்வதேசத்தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விரோதிகளைப் பழிவாங்குவதற்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமையை நாம் அவதானித்திருக்கின்றோம்.
சுமார் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும் அதேவேளை, உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் கையாளப்படுகின்ற, ஏற்றுக்கொள்ளத்தக்க திருத்தங்களை மேற்கொள்வது சிறந்ததாக அமையும் என்றும் கருதுகின்றோம்.
அதுமாத்திரமன்றி இதுகுறித்து விரிவான கலந்துரையாடல்கள் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM