(என்.வீ.ஏ.)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வட மாகாணம் அவசியமான வெற்றி ஒன்றை ஈட்டிக்கொண்டுள்ளது.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30)நடைபெற்ற ஊவா மாகாணத்துக்கு எதிரான போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மரியதாஸ் நிதர்ஷன் தலைமையிலான வட மாகாண அணி வெற்றிபெற்றது.
சப்ரகமுவ மாகாண அணிக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் ஏகப்பட்ட கோல் வாய்ப்புகளைக் கோட்டைவிட்ட வட மாகாண அணிக்கு, அதன் சொந்த மண்ணில் ஈட்டப்பட்ட இந்த வெற்றி பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
ஆரம்பம் முதல் கடைசிவரை ஆதிக்கம் செலுத்திய வட மாகாண அணி போட்டியின் 35ஆவது நிமிடத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் 23 வயதுக்குட்பட்ட தேசிய வீரருமான கே. தேனுஷன் மூலம் முதலாவது கோலைப் போட்டு முன்னிலை அடைந்தது.
அந்த சந்தர்பத்தில் வீ. கீதன் உயர்த்தி செலுத்திய கோணர் கிக் பந்தை நோக்கி தாவிய தேனுஷன் தலையால் முட்டி கோல் போட்டார்.
இந்த கோலுடன் இடைவேளையின்போது முன்னிலையில் இருந்த வட மாகாணம் இடைவேளையின் பின்னர் 71ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை போட்டது.
வலது புறத்திலிருந்து பந்தைப் பெற்றுக்கொண்ட கீதன் சற்று சிரமமான கோணத்திலிருந்து அலாதியான கோல் போட்டு பலத்த பாராட்டைப் பெற்றார்.
அதன் பின்னர் மேலதிக கோல் போடப்படாத நிலையில் வட மாகாண அணி 2 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.
வெற்றிதோல்வி இல்லை
கிழக்கு மாகாண அணிக்கும் வட மத்திய மற்றும் வட மேல் கூட்டு மாகாண (ரஜரட்ட) அணிக்கும் இடையில் அரியாலையில் நடைபெற்ற போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஏ.எம். பயாஸ் கோல் போட்டு கிழக்கு மாகாண அணியை முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற வாய்ப்புகள் சிலவற்றை அவ்வணி தவறவிட்ட அதேவேளை ரஜரட்ட அணியும் கோல் போடும் முயற்சிகளைக் கோட்டை விட்டது.
இடைவேளையின் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்த ரஜரட்ட அணி 73ஆவது நிமிடத்தில் அதனை நிறைவேற்றிக்கொண்டது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது மாற்று வீரராக களம் இறக்கப்பட்ட எம்.என்.என். மொஹமத் என்பவரே அந்த கோலை போட்டு ரஜரட்ட அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அவை நிறைவேறாமல்போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று 8 போட்டி முடிவுகளின் அடிப்படையில் மேல் மாகாணம் ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுடன் 4 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் நிகர கோல்கள் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கின்றது.
வட மாகாண அணியும் சப்ரகமுவ மாகாண அணியும் இதே பெறுபேறுகளுடன் நிகர கொல்கள் அடிப்படையில் 2ஆம், 3ஆம் இடங்களில் இருக்கின்றன.
ஊவா மாகாணம் ஒரு வெற்றி, ஒரு தோல்வியடன் 3 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்தில் இருக்கின்றது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM