(நா.தனுஜா)
பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவந்தாலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்று நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக நம்பத்தகுந்த ஆதாரங்கள் எவையும் முன்வைக்கப்படாதபட்சத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகப் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான சாட்சி விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணையைத் தொடர்ந்து அவர் சார்பில் பிணை கோரி வாதங்கள் முன்வைக்கப்படும்பட்சத்தில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் நாட்டின் மிகமோசமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்த் தடுத்துவைக்கப்பட்டுள்ள முதலாவது சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு விசாரணைகள் மற்றும் தடுத்துவைப்பு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் 'சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள்' அமைப்பு நேற்று வியாழக்கிழமை இலங்கை அதிகாரிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரது சார்பில் ஆஜராகியவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட தருணத்தில் அதற்கான காரணம் குறித்து அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ தெளிவுபடுத்தப்படவில்லை. இருப்பினும் அவ்வாறு கைதுசெய்யப்பட்டதிலிருந்து அவர் தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உதவியமை மற்றும் இன, மத சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கக்கூடியவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இன, மத சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் இருந்து விடுதலைசெய்வதுடன் அவருடன் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டதிலிருந்து 4 தடவைகள் மாத்திரமே அவரைச் சந்திப்பதற்குத் தாம் அனுமதிக்கப்பட்டதாகவும் அவ்வனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் ஏனைய அதிகாரிகளும் இருந்ததாகவும் அவரது சட்டத்தரணிகள் அந்த ரிட் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். ரிட் மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து 2020 டிசம்பர் 15 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது சட்டத்தரணிகள் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் அவரது தடுத்துவைப்பும், சட்டத்தரணி என்ற ரீதியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அவரது கடமைகளை முன்னெடுப்பதைக் கட்டுப்படுத்துகின்ற நோக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்ற எமது கரிசனையை நாம் வெளிப்படுத்துகின்றோம். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள முதலாவது சட்டத்தரணியாவார். பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவந்தாலும், தற்போதுவரை அதனைச் செய்வதற்குத் தவறியிருக்கின்றது. பயங்கரவாதத்தடைச்சட்டமானது சர்வதேச மனித உரிமைகள்சார் கடப்பாடுகளுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் முரணானதாகக் காணப்படுவதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் உள்ளடங்கலாக சர்வதேசத்தரப்பினர்கள் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக நம்பத்தகுந்த ஆதாரங்கள் எவையும் முன்வைக்கப்படாதபட்சத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நீக்கிக்கொள்ளுமாறும் இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் அடக்குமுறைகள் தொடர்பான எவ்வித அச்சமுமின்றி அவர்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM