கும்பாபிஷேகத்தில் செய்யப்படும் ஆகம விதிகள்....!

25 Jan, 2022 | 04:36 PM
image



12 ஆண்டுகள் கடந்து விட்டால் ஒரு ஆலயத்திற்கு கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம ஐதீகம்....!


அதாவது கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீரில் இறை சக்திகளை ஆவாஹனம் செய்து குறிப்பிட்ட யாகத்தின் மூலம் மந்திர உச்சாடனம் செய்து,கும்பத்திற்குள் வரவழைக்கப்பட்ட சக்தியை,கடவுள் சிலைகள் மற்றும் ஆலய ராஜகோபுர கலசங்களில் நிலையாக இருக்கும்படி அபிஷேகம் செய்து பூஜைகள் நிறைவேற்றப்படும்.


இங்கே கும்பம் என்பது கடவுளின் உடலாகவும்,அதில் சுற்றப்பட்ட நூலானது 72000 நாடி நரம்புகளாகவும்,உள்ளே இருக்கும் தீர்த்த நீரானது ரத்தமாகவும்,அதற்குள் இடப்பட்ட சொர்ணம்(தங்கம்) ஜீவனாகவும்,மேலே உள்ள தேங்காயானது சிரமாகவும்,கும்பத்தில் சாத்தப்பட்டிருக்கும் பட்டானது ஆடையாகவும், கும்பத்தின் கீழே பரப்பிய நெல் போன்ற தானியங்கள் ஆசனமாகவும் கருதப்படுகின்றது.



கும்பாபிஷேகத்தின் போது ஆற்றப்படவேண்டிய ஆகம விதி முறைகள்.....

பாலாலயம் :இதனை “பாலஸ்தாபனம்” என்பர். பூரணகும்பம் ஒன்றை ஆலய மூலவர் சிலைக்கருகில் வைத்து,தர்ப்பை,மாவிலை கொண்டு மந்திர உச்சாடனங்கள் செய்து,தெய்வ சக்தியை அப்பூரணக்கும்பத்திற்குள் எழுந்தருளச் செய்யப்படும் அல்லது மாற்றப்படும். கும்பாபிஷேகம் வரை அப்பூரணக்கும்பத்திற்கு பூஜைகள் செய்யப்படடும்.


ஆவாஹனம் : கும்பத்தில் உள்ள நீருக்குக்குள் தெய்வ சக்திகளை வரவழைக்கச் செய்வதை “ஆவாஹனம்” என்பர்.


கும்பத்தை ஆலயத்தில் உள்ள மூலவர்க்கருகில் தர்ப்பை,மாவிலை, ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி,பிம்பத்தில் உள்ள சக்தியை கும்பத்தில் எழுந்தருளச்செய்யப்படும்.


கும்பம் : யாகசாலையில் வைக்கப்படும் வெள்ளி அல்லது செப்புக் குடத்தினாலான கும்பம்,இறைவனின் வடிவமாகவே கருதப்படுகிறது.


மந்திரம்,கிரியை,தியானம், ஹோமம் மற்றும் பக்தர்களின் நல்லெண்ணங்களுடன் எங்கும் உள்ள இறைவனை சக்தி கும்பத்திற்குள் வரவழைக்கப்படும்.


கும்பாபிஷேகம் நடக்கும் போது ஒரு கால பூஜைக்கு 64 கிரியைகள் வரை முற்காலங்களில் செய்யப்பட்டது.


ஆனால் தற்போது கால அவகாசம் கருதி 12 அல்லது 13 கிரியைகள் மட்டும் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடாத்தப்படுகின்றது.


ஆச்சார்ய வர்ணம் : கும்பாபிஷேகத்தின் பொருட்டு கிடைக்கும் பணம் அல்லது பொருட்களின் மேல் செய்யபடுவது தன பூஜையாகும்.அவ்வாறு கிடைக்கும் பணம் அல்லது பொருட்களின் ஒரு பகுதி கட்டிட பணிகளுக்கும்,ஒரு பகுதி நித்திய, மாதாந்திர,விஷேட நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும்,மூன்றாவது பாகம் ஆபரணங்கள் வாங்கவும் செலவிடப்படும்.

கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடாத்தும் பிரதம குருவான சிவாச்சாரியார் சிரோண்மணியை வணங்கி மேற்கண்ட செல்வத்தைக் கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்வது "ஆச்சார்ய வர்ண"மாகும்.


அனுக்ஞை : ஆலய பணிகள் நிறைவுற்ற பிறகு, ஓர் சுப நாளில்,சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேக நிகழ்வினை முன்னின்று நடாத்தி வைக்க தகுதியான ஓர் சிவாச்சாரியாரை தேர்ந்தெடுப்பதையே "அனுக்ஞை” என்பார்கள்.

விநாயகர் சன்னதி முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடாத்தி தர வேண்டும் என முதல் வணக்கத்திற்குரிய ஸ்ரீவிநாயகப் பெருமானை வேண்டுவது "அனுக்ஞை" யாகும்.


பிரவேச பலி : கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எண் திசைகளிலும் உள்ள சகல ராட்சதர்கள் மற்றும் தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி,அவர்களை வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும்படி வழியனுப்பி வைப்பதே "பிரவேச பலி"யாகும்.ஆலய திருவிழா தருணங்களிலும் இதைச் செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன.


வாஸ்து சாந்தி : வாஸ்து புருஷனால் கும்பாபிஷேக கிரியைகளுக்கு எவ்விதமான இடையூகளும் நேரா வண்ணம் 53 விதமான தேவதைகளுக்கு பூஜை,பலி,ஹோமம், ஆகியவற்றால் சாந்தி செய்வதே "வாஸ்து சாந்தி"யாகும்.


ரக்க்ஷா பந்தனம் : காப்பு கட்டுதல் என இதற்கு பொருள்.பூஜை செயபவர்கள் சர்ப்ப தேவதைகளுக்கு பூஜை செய்து,மந்திரித்த மஞ்சள் கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள்.கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் நேரத்தில்,குடும்பத்தில் எதிர்பாராமல் ஏதேனும் தீட்டு ஏறபடும் பட்சத்தில்,காப்பு அவிழ்க்கப்படும் வரை அத்தீட்டு அவர்களை பாதிக்காது என்பது ஐதீகம்.


இதனையே "ரக்க்ஷா பந்தனம்"என்பர்.


கட ஸ்தாபனம் : கலசம் அமைத்தல் என்பது இதன் பொருள்,தங்கம்,வெள்ளி,தாமிரம்,மண் ஆகிய ஏதாவது ஒன்றில் செய்யப்பட்ட கலசம் என்ற கும்பங்கள் பயன்படுத்தப்படும்.


கும்பங்கள் இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள்
உள்ளன.

கும்பத்தின் மேற்புறத்தை நூலால் சுற்றி,நதிநீரை நிரப்பி,மேற்பகுதியில் மாவிலை செருகி,ருதங்காய் வைக்கப்படும்.எந்த தெய்வத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கின்றதோ அந்த தெய்வத்தின் உடலாக குறிப்பிட்ட கும்பம் கருதப்படும்.இதனை "கட ஸ்தாபனம்"என அழைப்பர்.


அஷ்ட பந்தனம் : கும்பாபிஷேகத்தை அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் எனச் சொல்வதுண்டு.
பீடத்தின் மீது வைக்கப்படும் தெய்வத் திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க,கொம்பரக்கு, சுக்கான்தான்,குங்கிலியம்,கற்காவி,செம்பஞ்சு, ஜாதிலிங்கம்,தேன் மெழுகு,எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டு வகையான மருந்துகளை கலந்து சாத்துவார்கள்.அஷ்டம் என்றால் எட்டு.இந்த எட்டு வகையான மருந்துகளை சாத்துவதையே "அஷ்ட பந்தனம்"எனக் கூறுவர்.


மிருத்சங்கிரஹணம் : கும்பாபிஷேக விழாவிற்கு அங்குரார்பபணம் செய்யப்படுவது,அதாவது நவதானியங்கள் முளைவிட்டு வளர வைக்கப்படும்,அதற்காக சுத்தமான மண் எடுக்கப்பட்டு முளைப்பாலிகைகளில் வைத்து,அதற்குள் நவதானியங்களையிட்டு வைப்பார்கள்.
இவ்வாறு தானியங்களை வளர வைப்பதையே "மிருத்சங்கிரஹணம்" எனக் கூறுவர்.

நான்கு வகை கும்பாபிஷேகங்கள்......


கும்பாபிஷேகங்களில் ஆவர்த்தம்,அனுவர்த்தம், புனராவர்த்தம் ,அந்தரிதம் என நான்கு பொதுவான வகைகள் உள்ளன.


1.புதிதாக ஆலயம் அமைத்து நிர்மாணம் செய்து அங்கே புதிய இறைவன் திருவுருவச் சிலைகளை அமைத்து பிரதிஷ்டை செய்யப்படுவதை "ஆவர்த்தம்"என அழைப்பர்.


2.ஆலயம் அல்லது தெய்வ மூர்த்தங்கள் ஆகியவை வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு அவற்றை மீண்டும் சீரமைப்பது "அனுவர்த்தம்"எனச் சொல்லப்படும்


3.குறிப்பிட்ட காலம் கடந்த நிலையில் ஆலயத்தின் பழுதுகளை சரி செய்து அஷ்ட பந்தன மருந்துகள் சாற்றி,மீண்டும் புதுப்பிக்கும் முறை "புனராவர்த்தம்"ஆகும்.


4.கள்வர்களால் தெய்வச் சிலைகள் களவாடப்பட்டு,அவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்யும் முறைக்கு "அந்தரிதம்"என சொல்வர்.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை.


உபசெயலாளர்:கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right