(நா.தனுஜா)
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 11.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது டிசம்பர் மாதத்தில் 14 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாகக் கணிப்பிடப்படும் பணவீக்கமானது 2021 நவம்பர் மாதத்திலேயே முதற்தடவையாக இரட்டை இலக்கங்களில் பதிவானது. இம்முறையில் கணிப்பிடப்பட்ட பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 8.3 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் இவ்வாறு பணவீக்கம் உயர்வடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கி, கடந்த நவம்பர் மாதம் 16.9 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 21.5 சதவீதமாகவும் கடந்த நவம்பர் மாதம் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் டிசம்பரில் 7.6 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மரக்கறிகள், அரிசி மற்றும் பச்சை மிளகாய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் உணவகங்கள், ஹோட்டல்களுக்கான கட்டணங்கள், மதுவகைகள், புகையிலை போன்ற உணவல்லாப்பொருட்களின் விலைகளில் முறையே 3 மற்றும் 0.68 சதவீத அதிகரிப்பு அவதானிக்கப்பட்டமையை அடுத்து, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணில் ஏற்படக்கூடிய மாதாந்த மாற்றம் கடந்த டிசம்பரில் 3.68 சதவீதமாகப் பதிவானது. எனவே தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணை அடிப்படையாகக்கொண்டு கணிப்பிடப்படும் பணவீக்கத்திலும் மேற்குறிப்பிட்டவாறான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 1952 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பழைய முறைமையை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் கடந்த 2007 ஆம் ஆண்டில் பணவீக்கமானது 30 சதவீதம் வரை உயர்வடைந்தது. இருப்பினும் 2002 ஆம் ஆண்டை அடியாண்டாகக்கொண்டு புதிய விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே நடைமுறையிலிருந்த கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கொழும்பை மாத்திரமே கருத்திலெடுத்திருப்பதாகக்கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்ட மதிப்பீடுகளின்படி டிசம்பர் மாதத்தில் 14 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது என்றால், தற்போது உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் தொடர்ச்சியான விலையேற்றத்தினால் எதிர்வரும் மாதங்களில் இப்பணவீக்க நிலைமை மென்மேலும் உயர்வடையும் என்று பொருளாதார நிபுணர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM