முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் முட்டையின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாக குறைந்துவிடும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் குழந்தையின்மைக்கான சிகிச்சைப் பெறுவ தற்கு அவர்களின் வயது ஒரு முக்கிய காரணி யாக அமைந்திருக்கிறது. அத்துடன் 45 வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்மணிக்கும் புற்று நோய் தாக்கக்கூடும் என்ற பயம் இயல்பாகவே இருக்கிறது. அவை மார்பக புற்று நோயாக இருக்கலாம் அல்லது கருப்பை வாய் புற்று நோயாக இருக்கலாம். அதே போல் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா? என தெரிந்துகொள்கின்றனர்.” என்று மகளிர் நலம் மற்றும் இன்றைய திகதியில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எம்முடன் இயல்பாக பேசத்தொடங்குகிறார் டொக்டர். கீதா ஹரிப்ரியா. இலங்கையைத் தவிர்த்து வங்காளதேசம், இந்தியா மற்றும் தென்னாசியா முழுமைக்கும் மகப்பேறின்மை மருத்துவத்திற்கான சிறப்பு மருத்துவ நிபுணராக இவர் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவிடாய் கோளாறுகளை எப்படி தடுப்பது அல்லது அதற்கான சிகிச்சை என்ன?
மாதவிடாய் என்பது முதலில் எதற்காக மாதந்தோறும் வருகிறது என்பதை தெரிந்த கொள்ள வேண்டும். உடலில் உள்ள ஹோர் மோன் சுரப்பிகளால் ஏற்படுகிறது. இந்த சுரப்பிகளின் பணி மற்றும் செயல்பாடு சீராக இருந்தால் எந்த கோளாறும் ஏற்படாது. அடுத்தது முட்டைப் பை. ஒவ்வொரு மாதமும் இங்கு தான் முட்டை வளர்ந்து முட்டை வெளியாகிறது. இதனையடுத்து கர்ப்பப்பை. உதிரபோக்கு என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது. அதனால் இங்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புண்டு. ஹோர்மோனைப் பொறுத்தவரை ைதரொய்ட் சுரப்பியின் செயல்பாடு முக்கிய மானது. இவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கக்கூடாது. இது குறித்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் எடுத்தால் இது சீரடையும் அல்லது கட்டுக்குள் கொண்டுவர இயலும். அதே போல் புரொலாட்டீன் என்ற ஹோர்மோனாலும் சில சிக்கல்கள் வரக்கூடும்.
அதே போல் வேறு சில பெண்களுக்கு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் உருவாகும். இதன் காரணமாகவும் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். இதனை துல்லியமாக அறிந்துகொள்ள இரத்த பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஸ்கேன் மூலம் கர்ப்பப் பையில் கட்டிகள் இருக்கிறதா? என்றும், எதன் காரணமாக உதிரபோக்கு ஏற்படுகிறது என்பதையும் கண்டறிய இயலும். அதே போல் முட்டைப் பையில் மூன்று விதமான கட்டிகள் இருக்கலாம். ஒன்று நீர்க்கட்டி, 25 சத வீத பெண்களுக்கு குழந்தையின்மைக்கான காரணங்கள் இந்த நீர்க்கட்டிகள் தான். இதன் காரணமாக முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளியாவதில் சிக்கல் உள்ளிட்ட பல கோளாறுகள் உருவாகிறது. அதாவது பதினைந்து நாளில் உருவாகவேண்டிய முட்டை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரை கூட வளர்ந்து வெளியாகக்கூடும். இதுபோன்ற பிரச்சினைகளையுடைய பெண்களின் உடல் எடை அதிகமாக இருக்கும். இவர்களின் முகம் உள்ளிட்ட விரும்பதகாத இடங்களில் உரோமங்கள் வளர்ந்திருக்கும்.
அதேபோல் முட்டைப் பையில் நீர்க்கட்டிகளைத் தவிர சொக்லேட் சிஸ்ட் எனப்படும் இரத்த கட்டிகள் உருவாகியிருக்கும். இது எப்படி உருவாகிறது என்றால், மாதவிடாயின் போது வெளியா கும் உதிரப்போக்கு வெளியிலும் நடைபெறும். முட்டைப் பையிலும் நடைபெறும். இவ்வகையான இரத்தப் போக்கு மாதந்தோறும் நடைபெறுவதால் முட்டைப் பையில் சேகரமாகும் குருதி கட்டியாக மாறிவிடுகின்றன. இருப்பதிலேயே இவ்வகையான கட்டிகள் தான் சவாலானவை. ஏனெனில் இதனால் மாதந்தோறும் முட்டையையும், முட்டைப் பையும் ஆரோக்கியமாக காத்திடும் வலுவான தசைகள் இதன் காரணமாக வலுவிழக்கத் தொடங்கிவிடும். இதனால் குழந்தையின்மைக்கான முக்கிய காரணமாக மாறிவிடுகிறது. அத்துடன் மாதவிடாயின் போது வலி ஏற்படுவதற்கு காரணமே இந்த இரத்த கட்டிகளால் தான் என்று குறிப்பிடலாம். ஒரு சிலருக்கு இந்த இரத்தகட்டிகள் அரிதாக புற்றுநோயாகவும் மாற வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிடவேண்டும். இதனையடுத்து கர்ப்பப்பையில் தோன்றும் பைப்ரோயிட் கட்டிகள். இவை ஒன்றோ இரண்டாகக் கூட இருக்கலாம் அல்லது நிறைய கட்டிகள் கூட இருக்கலாம். எம்முடைய மருத்துவ அனுபவத்தில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து 62 பைப்ரோயிட்கட்டிகளை நீக்கியிருக்கிறேன். அதன் பிறகு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதே சமயத்தில் பைப்ரோயிட் கட்டிகள் புற்றுநோய் கட்டி கிடையாது. இவை புற்று நோய் கட்டியாக மாறுவது மிகமிக அரிது. இந்த பைப்ரோயிட் கட்டிகள் குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. அதே போல் ஒவ்வொரு பெண்களுக்கும் கரு சிதைவு ஏற்படுவதற்கும் இந்த பைப்ரோயயிட் கட்டிகள் தான் காரணம். குழந்தை வளரும் இடத்தில் பைப்ரோயிட் கட்டிகள் இருந்தால் கருச்சிதைவை உண்டாக்கும். இதுபோன்று கருச்சிதைவு அடிக்கடி ஏற்படுகிறவர்கள் டொக்டர்களின் மருத்துவ ஆலோசனையையும், சிகிச்சையையும் பெற வேண்டும்.
இதற்கான சிகிச்சைகளில் லெப்ரோஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி மூலம் தீர்வளிக்க முடியும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி என்றால் கர்ப்பப்பையில் உள்ளே சென்று ஒளிப்பெருக்கி மூலம் நன்றாக கண்காணிக்க முடியும். இதில் தற்போது நவீன வரவாக 3டி லெப்ரோஸ்கோப்பி அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் நான்கு அடி தூரத்தில் உள்ள பொருளை ஒரு அடிக்கும் குறைவான தொலைவில் துல்லியமாக காண முடியும். இதன் மூலம் கர்ப்பப்பையில் உள்ள ஒவ்வொரு இரத்தக்குழாயையும், ஒவ்வொரு தசைகளையும் துல்லியமாக காண முடியும். அதன் பிறகு நீர்க்கட்டிகளை அகற்ற முடியும்.
திருமணத்திற்கு பிறகு குழந்தையின்மைக்கான சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்வீர்கள்?
இது ஒவ்வொரு பெண்களின் வயதைப் பொறுத்து அமையும், திருமணமான தம்பதிகள் இளவயது அதாவது 35 வயதிற்குள்ளாக இருந்தால் திருமணமாகி ஒரு ஆண்டு வரை காத்திருந்து அதன் பிறகு இவ்வகையான மருத்துவ நிபுணரை அணுகலாம். 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றால் திருமணமாகி மூன்று அல்லது ஆறு மாதத்திற்குள் இயற்கையான முறையில் கரு தரிக்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவ நிபுணரை சந்திப்பது நல்லது.
குழந்தையின்மைக்காக ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து?
இவர்களுக்கு உயிரணுக்கள் பரிசோதனை கொம்ப்யூட்டர் முறையில் மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் அந்த உயிரணுக்களின் மரபணுவில் உள்ள கோளாறுகளையும் துல்லியமாக கண்டறிகிறோம். ஒரு சில தம்பதிகளுக்கு அனைத்து பரிசோதனையிலும் வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் குழந்தை பாக்கியம் கிட்டியிருக்காது. இதன் காரணம் ஆண்களின் உயிரணுக்களில் உள்ள குறைபாடுள்ள மரபணுக்களே. இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி கருச்சிதைவிற்கும் ஆளாவதுண்டு. இந்த மரபணு குறைபாடிற்கு ஆண்களின் புகைபிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவைகளே காரணமாக அமைகின்றன. அத்துடன் ஒரு சிலர் வெப்ப மயமாக இருக்கும் இடத்தில் பணியாற்றினாலோ அல்லது மடிக்கணினியில் தொடர்ந்து பணியாற்றினாலோ இத்தகைய குறைபாடு தோன்ற வாய்ப்புள்ளது. அத்துடன் ஒரு சிலருக்கு விற்றமின் குறை பாடுகளாலும் இத்தகைய பாதிப்புக்கு ஆளாக நேரிடும். ஒரு சில ஆண்களுக்கு விதைப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் தோன்றியிருக்கக்கூடும். இவர்களுக்கு ஸ்கோரட்டல் டாப்ளர் என்ற பரிசோதனையின் மூலம் சிக்கல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறிய அளவிலான லெப்ரோஸ்கோப்பி சத்திர சிகிச்சை செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். விதைப்பையில் எங்கேனும் இருக்கும் ஒன்றிரண்டு உயிரணுக்களைக் கூட லேசர் போன்ற நவீன சிகிச்சைகள் மூலம் கண்டறிந்து, அதனை சேகரித்து, வளர்த்தெடுத்து குழந்தை பாக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்.
குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சைகள் குறித்து..?
நவீன சிகிச்சைகள் என்பது அதன் வெற்றி வீதத்தை முன்னிறுத்தி குறிப்பிடுகிறோம். 1990ஆம் ஆண்டுகளில் இதன் வெற்றி வீதம் 10 சதவீதம். ஆனால் இதன் இன்றைய வெற்றிவீதம் 60 முதல் 85சதவீதம் வரை இருக்கிறது. இக்சியில் ஒரு உயிரணுவை 400 மடங்கு பெரிதாக்கி உற்று கண்காணித்து கருவகத்திற்குள் செலுத்தப்படுகிறது. இதைவிட இம்சி என்ற சிகிச்சையில் உயிரணுக்கள் 7000 மடங்கு பெரிதாக்கப்பட்டு உற்று கண்காணித்து கருவகத்திற்குள் செலுத்துகிறோம். இவையெல்லாம் கருத்தரிப்பிற்கான சாத்தியக்கூறை அதிகரிக்கிறது. அதே போல் கருவை இன்குபேற்றரில் வைத்து கண்காணிக்கிறோம். இதற்காக தற்போது எம்ப்ரியாஸ்கோப் என்ற நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மனித உடல்வெப்பநிலையை போலவே இதில் அமைக்கப்பட்டிருக்கிறது.இதில் கருவை வளர்த்தெடுக்கிறோம். எம்ப்ரியாஸ்கோப் வழியாக ஒவ்வொரு எம்ப்ரியயோவின் முழு வளர்ச்சியையும் கண்காணிக்க முடியும். எமக்கு எந்த எண்ணுள்ள எம்ப்ரியோவின் வளர்ச்சியை கணக்கிடவேண்டுமோ அந்த எண்ணுள்ள எம்ப்ரியோவை குறிப்பிட்டால், அதனுடைய முழு வளர்ச்சியும் திரையில் தோன்றும். இதில் தற்போது கிட்ஸ் ஸ்கோர் என்ற தொழில்நுட்பம் அறிமுகமாகியிருக்கிறது. இதன் போது,கருவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு எம்ப்ரியோவிலும் ஒரு எண் வழங்கி கணக்கிடப்படுகிறது. இதில் முன்னிலையில் இருக்கும் இரண்டு எம்ப்ரி யோவை தெரிவு செய்து அதனை கர்ப்பப் பையில் வைக்கும் போது கருதரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதே சமயத்தில் கர்ப்பப்பையில் வைக்கும் போது எம்ப்ரியோவின் புறஓட்டின் அடர்த்தி யையும் கண்காணிப்போம். ஒருசிலருக்கு இவை இயல்பை விட சற்று தடிமனாக இருக்கும். அதனை லேசர் மூலம் தேவையான அளவிற்கு குறைத்து பயன்படுத்துவோம். அதேபோல் கர்ப்பப்பையில் வைக்கப்படும் எம்ப்ரியோ மீது எம்ப்ரியோ க்ளூம் எனப்படும் ஒருவகையான திரவத்தை பூசுவோம். இது கர்ப்பப்பையில் கரு ஒட்டிவளர்வதற்கு ஏதுவாக அமைகிறது. அதேபோல் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி மூலமாக கர்ப்பப்பையின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக ஸ்க்ராட்ச் டெஸ்ட் என்ற பரி சோதனையை மேற்கொண்டு கருத்தரிப்பை உறுதிப்படுத்துவோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM