(நா.தனுஜா)
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு இழுபறியில் உள்ள நிலையில், இரவோடிரவாக சில தோட்டங்களுக்கான உரித்து கைமாற்றப்பட்டிருப்பதன் விளைவாக தோட்டத்தொழிலாளர்களின் தொழற்பாதுகாப்பும் வாழ்வாதாரமும் முழுமையாகக் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையீடுசெய்து பெருந்தோட்ட மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
அண்மைக்காலத்தில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய சடுதியான அதிகரிப்பினால் உயர்வடைந்திருக்கும் வாழ்க்கைச்செலவைக் கையாளமுடியாமல் மலையக மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுத் திணறிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் 1000 ரூபா சம்பள உயர்வு இழுபறி நிலைக்கு மத்தியில் இரவோடிரவாக நிகழ்ந்திருக்கக்கூடிய பெருந்தோட்டக்கம்பனி கைமாற்றத்தினால் தோட்டத்தொழிலாளர்களின் தொழற்பாதுகாப்பும் வாழ்வாதாரமும் முழுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
அப்புஹஸ்தன தோட்டம், உடபுஸல்லாவ தோட்டம் மற்றும் ஜேம்ஸ் பின்லிஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின்கீழ் இயங்குகின்ற சுமார் 30 தோட்டங்களும் 90 பிரிவுகளும் கடந்த 22 ஆம் திகதி கொழும்புப்பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக பிரவுன் அன்ட் கம்பனி என்ற நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டிருக்கின்றன.
பல தசாப்தங்களாகப் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் வாழ்ந்துவரும் பகுதியில், அவர்கள் பணிபுரியும் தோட்டத்திற்குச் சொந்தமான கம்பனியின் உரித்தானது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படும்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு யார் பொறுப்பாளிகள்? இவ்வாறு கைமாற்றம் செய்யப்பட்டபோது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சட்டம் பின்பற்றப்பட்டதா?
அதுகுறித்து பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய தரப்பினரால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதா? அரசுக்குச் சொந்தமான சில தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக அவற்றின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
நாட்டில் புதியதொரு சட்டம் உருவாக்கப்படும்போது அதற்கான வரைபு தயாரிக்கப்பட்டு, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே அமுல்படுத்தப்படுகின்றது.
அவ்வாறிருக்கையில் உரிய சட்டத்தைப் பின்பற்றாமல் இரவோடிரவாக மேற்படி தோட்டங்களின் பங்குகள் கைமாற்றப்பட்டதன் நோக்கம் என்ன? ஆகவே இதன்மூலம் தொழிற்சட்டமும் பெருந்தோட்டக்கலாசாரமும் தோட்டத்தொழிலாளர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டிருக்கின்றன.
எமது பெருந்தோட்டத்தொழிலாளர்களின் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அதற்கெதிராகக் குரல்கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
ஆகவே பெருந்தோட்டக்கம்பனிகளுக்கும் தொழில் அமைச்சிற்கும் எதிராக அரசாங்கம் உடனடியாக சட்டநடவடிக்கை எடுப்பதுடன் இவ்விடயம் குறித்து மக்களை உரியவாறு தெளிவுபடுத்தவேண்டும்.
ஜனாதிபதியினால் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசமுடியாத நிலை காணப்படுகின்றது.
அதேபோன்று அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், நீண்டகாலமாக அவற்றுக்கான தேர்தல்கள் நடாத்தப்படாமல் மக்களுடைய உரிமை மீறப்படுகின்றது என்று குறிபபிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM