(நா.தனுஜா)
ஐ.நா. படைக்கான வீரர்கள் அனுமதி வழங்கும் பணியை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்குவது நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையுமா ? - அம்பிகா
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியில் சேவையாற்றுவதற்காக நாட்டிலிருந்து அனுப்பிவைக்கப்படும் படைவீரர்கள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கான அனுமதியை வழங்கும் பொறுப்பு அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன கட்டமைப்பாகக் கருதப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது போதிய சுயாதீனத்தன்மையற்ற, 'பி' நிலைக்குத் தரமிறக்கம் செய்வதற்கான பரிந்துரையிலிருக்கும் ஆணைக்குழுவினால் அந்தப் பணியை நம்பகத்தன்மை வாய்ந்த முறையில் முன்னெடுக்கமுடியுமா? என்ற கேள்வி எழுகின்றது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதுடன் பாரிஸ் கொள்கைகளுக்கு அமைவாகச் செயற்படுவதற்கு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டி ஆணைக்குழுவை 'ஏ' நிலையிலிருந்து 'பி' நிலைக்குத் தரமிறக்குவதற்கு தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவு பரிந்துரை செய்திருக்கின்றது.
இப்பரிந்துரை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் என்ற அடிப்படையில் அம்பிகா சற்குணநாதனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவுகள், மனித உரிமைகள்சார் விவகாரங்களைப் போதிய செயற்திறனுடன் அணுகாமை, ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனத்தின்போது பன்முகத்தன்மையை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை 'ஏ' நிலையிலிருந்து 'பி' நிலைக்குத் தரமிறக்குவதற்கான பரிந்துரை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த 'பி' நிலைக்கான தரமிறக்கப் பரிந்துரை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டிணைவின் இரண்டாவது கூட்டத்தின் பின்னரே அமுலுக்குவரும். இருப்பினும் இப்பரிந்துரைக்கான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 'ஏ' நிலைக்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதே அதன் சாராம்சமாகும்.
சுயாதீனத்தன்மையுடன் செயற்படாமை, பொலிஸ்காவலின் கீழான படுகொலைகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் உரியவாறு இயங்காமை, சிவில் சமூக அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணாமை போன்ற காரணங்களுக்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டில் முதற்தடவையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை 'பி' நிலைக்குத் தரமிறக்கம் செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதுடன், அது 2009 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் நாம் 'ஏ' நிலையைப் பெறுவதற்காக விண்ணப்பித்ததுடன் 2018 மேமாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 'ஏ' நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சுயாதீனமான கட்டமைப்பாகக் கருதப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியில் சேவையாற்றுவதற்காக இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்படும் படைவீரர்கள் ஏதேனும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றார்களா என்பது குறித்து ஆராய்ந்து அவர்களுக்கான அனுமதியை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
எனினும் தற்போது போதிய சுயாதீனத்தன்மையற்ற, 'பி' நிலையிலுள்ள ஆணைக்குழுவிடம் அந்தப் பொறுப்பைக் கையளிக்கமுடியாது. 'பி' நிலையிலுள்ள ஒரு கட்டமைப்பினால் இப்பணியை நம்பகத்தன்மையான முறையில் முன்னெடுக்கமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM