(எம்.மனோசித்ரா)
இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை தரையிறக்குவதற்கு முன்னர் அவற்றின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும்.
பகுப்பாய்வு அறிக்கையில் எரிவாயு உரிய தரமுடையது என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அதனை தரையிறக்க அனுமதி வழங்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் உறுதிப்படுத்தப்பட்ட வாயுவை உள்ளடக்கிய சிலிண்டர்களில் புதிய ஸ்டிக்கர்களை ஒட்டி சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (7 ) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டன. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுமதியுடன் குறித்த இரு நிறுவனங்களும் புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சிரிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ளன.
தரத்தை உறுதிப்படுத்தல்
அத்தோடு இரு நிறுவனங்களாலும் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படும் போது கப்பலிலிருந்து தரையிறக்குவதற்கு முன்னர் , அரச அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கப்பலுக்குச் சென்று மாதிரிகளைப் பெற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துவர். பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய தரத்துடன் காணப்பட்டால் மாத்திரமே சிலிண்டர்களை தரையிறக்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.
தீவிர கண்காணிப்பு
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆலோசனைகள், விதிமுறைகளுக்கமைய குறித்த இரு நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகிக்கின்றனவா என்பது தொடர்பில் தீவிர கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இரசாயனம் மற்றும் செயற்பாட்டு பிரிவின் பீடாதிபதி உள்ளிட்ட நிபுணர்களை உள்ளடக்கி குழுவொன்றை நியமித்து இது குறித்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த குழு லாஃப் மற்றும் லிட்ரோ நிறுவனங்களுக்கு விஜயம் செய்து நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இக்குழுவிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் சிலர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று பரிசோதனைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் இந்த குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சமையல் எரிவாயு தொடர்பான சர்ச்சை ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை அந்த சர்ச்சைக்கான தீர்வினைக் காண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய உச்சபட்ச நடவடிக்கைகளைகளை அரசாங்கமும், நுகர்வோர் பாதுகாப்பு அமையும், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையும் முன்னெடுத்துள்ளன.
நவம்பர் 29 க்கு பின் 477 வெடிப்பு சம்பவங்கள்
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஒரே நாளில் 16 வெடிப்பு சம்பவங்கள் பதிவானமையே அனைவரது கவனத்தை ஈர்த்தது. எனினும் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 28 ஆம் திகதி வரை 28 வெடிப்பு சம்பவங்களே பதிவாகியுள்ளன. எனினும் 29 ஆம் திகதி 16 வெடிப்பு சம்பவங்களும் , 30 ஆம் திகதி 34 வெடிப்பு சம்பவங்களும் , டிசம்பர் முதலாம் திகதி 53 , 2 ஆம் திகதி 60, 3 ஆம் திகதி 142, 4 ஆம் திகதி 78, 5 ஆம் திகதி 47, 6 ஆம் திகதி 47 வெடிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எவ்வாறிருப்பினும் நவம்பர் 29 ஆம் திகதி ஒரே நாளில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியமை வரலாற்றில் முதல்முறை அல்ல. எந்தவொரு தரப்பினரும் அவை தொடர்பில் அவதானம் செலுத்தாமையே தற்போதைய பெரும் பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
அது மாத்திரமின்றி இதுவரை காலமும் சமையல் எரிவாயு பாவனையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எந்தவொரு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
எனவே எந்தவொரு நிறுவனத்திற்கும் இந்த பொறுப்பிலிருந்து விலக முடியாது. அந்த பொறுப்பை நிறைவேற்றாமலிருந்தமை தொடர்பில் பிரத்தியேக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் கிடைக்கப்பெறும் முடிவுகளுக்கமைய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை 18 லீற்றராக மாற்றி விநியோகித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நிறுவனங்களுக்கு சாதகமான வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது பிரயோசமற்றதாகும்.
மாத்தளை வெடிப்பு சம்பவம்
மாத்தளை பகுதியில் வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண்ணிடம் பொலிஸார் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்திற்கு அமைய , அப்பெண் சமையல் எரிவாயுவை பயன்படுத்த முற்பட்ட போது அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து மீண்டும் நோய் நிலைமை ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாத்தளை சம்பவம் தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்துகின்றனர். எனினும் இவ்வாண்டு ஜனவரி முதல் சமையல் எரிவாயு சர்ச்சை ஆரம்பிக்க முன்னர் இதுபோன்ற வெடிப்பு சம்பவங்களால் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 20 மற்றும் 24 ஆம் திகதிகளிலும் , செப்டெம்பர் 24 ஆம் திகதிகளிலும் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பில் யாரும் அவதானம் செலுத்தவில்லை. எது எவ்வாறிருப்பினும் இதுபோன்று எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாமல் தடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM