ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
மன்னார் ,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டுமென சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபைகளின் கீழிருந்த பல அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு மத்திய அரசினால் பறிக்கப்படுகின்ற ,மீளப் பெறப்படுகின்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாகாண சபைகளுக்கு இருக்கின்ற நிதி,பொலிஸ் ,காணி அதிகாரங்கள் அரசியலமைப்பில் எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை எல்லாம் மாகாண சபைகளிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளன.
அதேபோல் தான் மாவட்ட வைத்தியசாலைகளும் கடந்த ஆண்டிலிருந்து மாகாண சபைகளிடமிருந்து பறிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்த நாட்டிலுள்ள ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மாகாணத்திலிருந்து பறித்தெடுத்து மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை மாற்றியமைக்குமாறு அரசிடமும் சுகாதார அமைச்சிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.
அதேபோல் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் என்ற இனிப்பு முலாம் பூசப்பட்டு பல பாடசாலைகளை மத்திய அரசு உள்வாங்கியதையும் நான் நினைவுப்படுத்த விரும்புகின்றேன். இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கிவிட்டு பின்னர் அவற்றை பறித்தெடுக்கின்ற செயற்பாட்டை அரசு முழுமையாக கைவிட வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM