(ஆர்.ராம்)
இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் எந்தவொரு அரசியல் தீர்வினையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை என்று ஐக்கியநாடுகள் உதவி பொதுச் செயலாளரிடத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாக்கி சிங்கள, பௌத்த நாடாக இலங்கையை பிரகடனப்படுத்துவதற்கு முயல்வதாகவும் அதனை தடுப்பதற்கு சர்வதேசத்தின் முழுமையான அழுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரிக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் பற்கேற்றனர்.
அத்துடன் இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐ.நா.விதிவிடப் பிரதிதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அரசியல் பிரிவைச் சேர்ந்த எட்வேர்ட் ரிஷ் மற்றும் ஜே.பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் இச்சந்தப்பின்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூறிய விடயங்கள் வருமாறு,
தற்போதைய அரசாங்கமானது, வலுவானதொரு ஒற்றையாட்சியின் கீழ், சிங்கள, பௌத்த குடியரசாக இலங்கையை பிரகடனம் செய்வதற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கா தமிழ் மக்களின் இருப்பில் கைவைத்துள்ளது. குறிப்பாகரூபவ் வர்த்தமான அறிவித்தல்கள், மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனைவிடவும் படைகளின் பயன்பாட்டிற்காக காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன. மேலும், மகாவலி, அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுன்றன.
இதனைவிடவும் நீண்டகாலமாக, தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகளை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி என்ற பெயரில் கைப்பற்றி வைத்துள்ளனர். சில இடங்களில் புத்த சமயம் ஏற்கனவே இருந்தது என்று கூறி அதனை புனித பகுதியாக அறிவித்துள்ளன
இதனைவிடவும் எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் ஊடாகவும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் சூறையாடப்படுகின்றன. விசேடமாக தமிழ் பகுதிகளின் எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை வடக்கின் வவுனியா பகுதியோடு இணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிழக்கிலும் இவ்வாறான நிலைமைகள் உள்ளன. இது தமிழர் தேசத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடாகும்.
அரசியல் தீர்வு
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது,தேசம் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதாவது இலங்கையொரு பல்தேச நாடு என்பது அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதேநேரம், ஒற்றையாட்சிக்குள் முன்மொழியப்படும் எந்தவொரு தீர்வினையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அது தமிழினத்தின் இருப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய முடியாது. குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை உள்ளடக்கிய ஒற்றையாட்சிகட்டமைப்புடனான தீர்வினை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
மேலும், தற்போது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக ஜனாதிபதி தனக்கு விசுவாசமான சட்டத்தரணிகள் கொண்ட குழுவொன்றை நியமித்து வரைவொன்றை தயாரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுவின் கோரிக்கைகளுக்கு அமைவாக எமது முன்மொழிவுகளை வழங்கியுள்ளோம். அதில் குறித்த குழுவினருக்கு சந்தேகங்கள் இருப்பின் அவற்றைத் தெளிவு படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளோம். ஆனால் இதுவரையில் அக்குழு எம்மைத் தொடர்புகொள்ளவில்லை.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றம் இருக்கையில் அதற்கு அப்பால்சென்று சட்ட நிபுணர்கள் குழுவை அமைத்து புதிய அரசியலமைப்பு வரவைத் தயாரிப்பது பொருத்தமில்லாத செயற்பாடாகும். அது மக்கள் கருத்தினையும் உள்வாங்கியதாக இல்லை. வெறுமனே உலகத்திற்கு தாமும் அவ்விதமான முயற்சியில் ஈடுபடுகின்றோம் என்று காண்பித்து ஏமாற்றுவதற்கான உத்தியொன்றாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
பொறுப்புக்கூறல்
தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு. அவ்வாறில்லாதவொரு சூழலில் நல்லிணக்கம் என்ற விடயம் சாத்தியமாகப்போவதில்லை. மேலும்ரூபவ் இலங்கை விவகாரத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தவிடயத்தினை வைத்துக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.
தற்போது சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிக்க ஆட்சியைக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறல் பற்றிய பொருட்டே இல்லை. ஆகவே அரசாங்கத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றபோது தான் பொறுப்புக்கூறல் பற்றிஅவர்கள் சிந்திப்பார்கள். அதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குகொண்டு செல்ல வேண்டும்.
பிரித்தானியாவைத் தளமாக கொண்டு அவ்விதமான முயற்சியொன்று எடுக்கப்பட்டுள்ளது. எனினும்அதுபற்றி எம்முடன்அத்தரப்பினர் கலந்துரையாடவில்லை. அந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு நாம் ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராகவே இருக்கின்றோம். அதேநேரம், ஐ.நாவும் அந்த விடயத்தில் ஒத்துழைப்புக்களையும் ஆதரவினையும் வழங்கி வெற்றிபெறுவதற்கு வழியமைக்க வேண்டும்.
இதனைவிடவும் அரசியல் கைதிகள் விடயத்தில் இலங்கையின் எந்த அரசாங்கமும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்று கூறினாலும், அதனைச்செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக இல்லை. அவ்வாறு எடுக்கப்படுகின்றபோது நீண்டகாலமாக சிறைகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைபெறுவதற்கு இயல்பான சூழல் ஏற்படும். தற்போது இவர்களின் விடுதலைக்கு வெவ்வேறு காரணங்களை கூறி அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM