(நா.தனுஜா)
உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் அதிகரிப்பதுடன் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்களவிலான பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின்கீழ் பொதுவான தளத்திற்கான தேடல் (சேர்ச் ஃபோர் கொமொன் கிரவுன்ட்) என்ற அமைப்பினால் புதன்கிழமை (24) கொழும்பிலுள்ள த கிரான்ட் மொனார்ச் ஹோட்டலில் உள்ளுராட்சிமன்ற பெண் பிரதிநிதிகளின் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியதுடன் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.
இம்மாநாட்டின் ஓரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, 'உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டமையைப் பெண்கள் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகின்றனர்.
ஆனால் அது பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான நுழைவாயில் மாத்திரமே என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக மேற்படி 25 சதவீத பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை, பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தவேண்டும்' என்று குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி அரசியலில் ஈடுபடும் பெண்கள் கட்சி ரீதியாகப் பிளவடையாமல் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை மேலும் இலகுபடுத்தமுடியும் என்றும் அவர் சுட்டிகாட்டியதுடன் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் கூட்டிணைவில் அங்கம்வகிக்கும் அனைவரும் கட்சிபேதமின்றி பெண்களின் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
அதேவேளை அங்கு பேசிய பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, உள்ளுராட்சி மன்றங்களில் ஆண்கள் மற்றும் பெண்களின் சமளவிலான பிரதிநிதித்துவம் அவசியம் என்று தெரிவித்ததுடன் அதனை மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றம் வரை கொண்டுசெல்லாவிட்டால் பயனில்லை என்றும் கூறினார்.
மேலும் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ள நிலையில், பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு மிகப்பொருத்தமான தருணம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டினார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட் கூறியதாவது:
அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில், தாம் வெற்றிபெறுவோமென உறுதியாகத் தெரிந்த தொகுதிகளில் ஆண்களையும் தோல்வியடையக்கூடிய தொகுதிகளில் பெண்களையும் களமிறக்குகின்றன என்ற பொதுவான அபிப்பிராயம் பலர் மத்தியிலும் காணப்படுகின்றது.
எனவே பெண்கள் மாத்திரம் போட்டியிடக்கூடிய தொகுதிகள் உருவாக்கப்படவேண்டும். அதனூடாக எந்தவொரு கட்சியானாலும், அதில் பெண்கள் களமிறக்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.
பாடசாலைக்கல்வி, பல்கலைக்கழக உயர்கல்வி மற்றும் அரச நிர்வாகசேவைப்பரீட்சை உள்ளிட்ட அனைத்திலும் பெண்களே முன்னிலை வகிக்கின்றார்கள். எனவே அவர்களால் நிச்சயமாக அரசியலிலும் சோபிக்கமுடியும் என்று தெரிவித்தார்.
மேலும் இதன்போது உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகும் பெண் பிரதிநிதிகளுக்கு உரியவாறான கௌரவம் அளிக்கப்படாமை, அரசியலில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்திலுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதாமை உள்ளடங்கலாக பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் அரசியலுக்குள் பிரவேசித்ததன் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றை எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM