பெண்கள் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தவேண்டும் ! ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் உள்ளுராட்சிமன்ற பெண் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தல்

25 Nov, 2021 | 02:01 PM
image

(நா.தனுஜா)

உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் அதிகரிப்பதுடன் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்களவிலான பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

 

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின்கீழ் பொதுவான தளத்திற்கான தேடல் (சேர்ச் ஃபோர் கொமொன் கிரவுன்ட்) என்ற அமைப்பினால் புதன்கிழமை (24)  கொழும்பிலுள்ள த கிரான்ட் மொனார்ச் ஹோட்டலில் உள்ளுராட்சிமன்ற பெண் பிரதிநிதிகளின் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியதுடன் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.

 

இம்மாநாட்டின் ஓரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, 'உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டமையைப் பெண்கள் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகின்றனர். 

ஆனால் அது பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான நுழைவாயில் மாத்திரமே என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக மேற்படி 25 சதவீத பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை, பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தவேண்டும்' என்று குறிப்பிட்டார்.

 

அதுமாத்திரமன்றி அரசியலில் ஈடுபடும் பெண்கள் கட்சி ரீதியாகப் பிளவடையாமல் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை மேலும் இலகுபடுத்தமுடியும் என்றும் அவர் சுட்டிகாட்டியதுடன் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் கூட்டிணைவில் அங்கம்வகிக்கும் அனைவரும் கட்சிபேதமின்றி பெண்களின் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

 

அதேவேளை அங்கு பேசிய பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, உள்ளுராட்சி மன்றங்களில் ஆண்கள் மற்றும் பெண்களின் சமளவிலான பிரதிநிதித்துவம் அவசியம் என்று தெரிவித்ததுடன் அதனை மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றம் வரை கொண்டுசெல்லாவிட்டால் பயனில்லை என்றும் கூறினார்.

 மேலும் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ள நிலையில், பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு மிகப்பொருத்தமான தருணம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டினார். 

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட் கூறியதாவது:

அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில், தாம் வெற்றிபெறுவோமென உறுதியாகத் தெரிந்த தொகுதிகளில் ஆண்களையும் தோல்வியடையக்கூடிய தொகுதிகளில் பெண்களையும் களமிறக்குகின்றன என்ற பொதுவான அபிப்பிராயம் பலர் மத்தியிலும் காணப்படுகின்றது. 

எனவே பெண்கள் மாத்திரம் போட்டியிடக்கூடிய தொகுதிகள் உருவாக்கப்படவேண்டும். அதனூடாக எந்தவொரு கட்சியானாலும், அதில் பெண்கள் களமிறக்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும். 

பாடசாலைக்கல்வி, பல்கலைக்கழக உயர்கல்வி மற்றும் அரச நிர்வாகசேவைப்பரீட்சை உள்ளிட்ட அனைத்திலும் பெண்களே முன்னிலை வகிக்கின்றார்கள். எனவே அவர்களால் நிச்சயமாக அரசியலிலும் சோபிக்கமுடியும் என்று தெரிவித்தார்.

 மேலும் இதன்போது உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகும் பெண் பிரதிநிதிகளுக்கு உரியவாறான கௌரவம் அளிக்கப்படாமை, அரசியலில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்திலுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதாமை உள்ளடங்கலாக பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் அரசியலுக்குள் பிரவேசித்ததன் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றை எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51