(நா.தனுஜா)
இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படல் உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஓரங்கட்டும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன்மாதம் வரையான முதல் அரையாண்டில் மனித உரிமைகள் நிலைவரம் மிகுந்த கரிசனைக்குரிய மட்டத்திலிருக்கும் நாடுகளை உள்ளடக்கியதாக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்து செல்வதைத் தெளிவாகப் புலப்படுத்தும் அதேவேளை எதிர்கால மீறல்கள் குறித்த அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆழமான கரிசனை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனையடுத்து இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விசனத்தை வெளிப்படுத்தியும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் தொடர் கண்காணிப்பிற்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையான கைதுகளும் இடம்பெற்றன. அதுமாத்திரமன்றி கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற மேற்பார்வையின்றி புனர்வாழ்வளித்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான அதிகாரத்தை வழங்கக்கூடியவாறான புதிய வழிகாட்டல்களும் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டன.
மேலும் மரணதண்டனைக் கைதியொருவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டதுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற சுயாதீன கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக 'சர்ச்சைக்குரிய' நபர்கள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு மிகமுக்கிய சில மனித உரிமைகள் வழக்குகள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. பொலிஸ்காவலின் கீழ் சில மரணங்கள் பதிவானதுடன், அவற்றை 'சட்டத்திற்கு முரணான படுகொலைகள்' என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி தமிழ் மற்றும் முஸ்லிம் நலனோம்பு அமைப்புக்கள் உள்ளடங்கலாக சில அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டமை மற்றும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஒதுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM