பாகிஸ்தான் - இலங்கை வணிக வாய்ப்பு மாநாட்டில் பொருளாதாரத்தொடர்புகளை மேம்படுத்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published By: Digital Desk 4

23 Nov, 2021 | 09:20 PM
image

(நா.தனுஜா)

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதுடன் இருநாடுகளினதும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலான பாகிஸ்தான் - இலங்கை வணிக வாய்ப்பு மாநாட்டில் அந்நோக்கங்களை முன்னிறுத்திய இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், ராவல்பின்டி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'பாகிஸ்தான் - இலங்கை வணிக வாய்ப்பு மாநாடு' இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் கூறியதாவது: 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகள் சார்ந்தும் நீண்டகால நட்புறவு பேணப்பட்டுவரும் நிலையில், தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளடங்கலாக இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதாரத்தொடர்புகளை மேலும் விருத்திசெய்யும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை - பாகிஸ்தான் நல்லுறவென்பது பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் ஒத்த தன்மையுடைய பாரம்பரிய கலாசாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. இலங்கையுடன் கடந்த 2005 ஆம் ஆண்டில் முதன்முதலாக இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடு பாகிஸ்தான் ஆகும்.

தற்போது பாகிஸ்தான் மிகவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரத்தைக்கொண்ட நாடாக இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் உள்ளக மற்றும் வெளியக ரீதியில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.

இருப்பினும் அதற்கு மத்தியில் அதிகரித்துவரும் பொருளாதார ரீதியான தேவைகளை நிறைவுசெய்வதற்கு பூகோள போட்டித்தன்மையை எதிர்கொள்ளக்கூடியவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

அதற்கமைய இம்மாநாட்டின் ஊடாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, ஆடையுற்பத்தி, மருந்துப்பொருள் உற்பத்தி, நிர்மாணத்துறை உள்ளடங்கலாகப் பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் முதலீடுகளையும் மேலும் ஊக்குவிக்கமுடியும் என்று தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் பௌத்த மதரீதியான சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவது குறித்தும் அதற்கான முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் இதன்போது பிரஸ்தாபித்தார்.

அதேவேளை இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா வைரஸ் பரவலால் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் தொடர்பில் அவரது உரையில் சுட்டிக்காட்டினார். மாநாட்டில் ஆற்றிய உரையில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியதாவது:

பூகோள அபிவிருத்தியின் மத்தியநிலையமாக ஆசிய பிராந்தியம் மாற்றங்கண்டுவரும் ஓர் யுகத்தில் நாம் தற்போது இருக்கின்றோம். இந்த யுகத்தில் பல்வேறு சவால்களுடனான புதிய வாய்ப்புக்கள் பரவலாக உருவாகியுள்ளன.

இருப்பினும் மூன்று தசாப்தகாலப்போர், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் ஆகியவற்றால் எமது நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கிப் பயணிப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அயல்நாடுகளுடனான மிகநெருக்கமான தொடர்புகள் மூலம் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய பொருளாதார செயற்திட்டங்களை வகுத்துக்கொள்ளமுடியும்.

இலங்கையின் நீண்டகால பொருளாதார நட்புறவு நாடாக பாகிஸ்தானுடன் கடந்த காலங்களில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அதன்படி இன்றைய தினமும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், அதனூடாக ஆடையுற்பத்தி, இலத்திரனியல் உபகரண உற்பத்தி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய பல்வேறு துறைகளிலும் இருதரப்புத் தொடர்புகளை மேலும் மேம்படுத்தி இருநாடுகளினதும் பொருளாதாரத்தை வலுப்படுத்தமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

மாநாட்டில் கலந்துகொண்டிருந்த அதிதிகளின் உரைகள் முடிவடைந்த பின்னர் ராவல்பின்டி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இலங்கையின் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையிலான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையிலிருந்து வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகள் குழுவொன்று பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட...

2025-03-24 19:08:36
news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11
news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26