(எம்.மனோசித்ரா)
திருகோணமலை மாவட்டத்தில் - கிண்ணியா பொலிஸ் பிரிவில் செவ்வாய்கிழமை (23) காலை குறிஞ்சாங்கேணி களப்பில் பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதோடு , 21 பேர் மீட்க்கப்பட்டு கிண்ணியா ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம்
செவ்வாய்கிழமை காலை 07.00 மணியளவில் பாடசாலைகள் மாணவர்கள், முதியோர் மற்றும் தொழிலுக்குச் செல்வோர் என சுமார் 20 இற்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதால், குறித்த பகுதியூடாகப் பயணிப்பதற்கு தற்காலிகமாக இந்த களப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 7.30 மணியளவில் படகு கவிழ்ந்த போதிலும் நேற்று பகல் 1 மணி வரையும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிண்ணியா வைத்தியசாலை
விபத்தின் பின்னர் படகில் பயணித்த 27 பேர் மீட்க்கப்பட்டு கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் , அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவாஹிர் உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதோடு , இருவர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். எஞ்சிய அனைவரும் தொடர்ந்தும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் ஐ.எம்.ஜவாஹிர் மேலும் தெரிவித்தார்.
4 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் பலி
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 70 வயதுடைய முதியவரொருவர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தாயொருவரும் குறித்த தாயின் 6 வயதுடைய மகன் மற்றும் மூன்றரை வயதுடைய மகளும் , பிரிதொரு குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மற்றும் இளைய சகோதரிகள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 19 பேரில் 5 ஆண்கள், 6 பெண்களும், முதியவர்களில் 4 ஆண்களும் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு திருகோணமலை பொது வைத்தியசாலையில் 6 வயதுடைய பெண் குழந்தையொன்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.
விபத்து இடம்பெற்ற களப்பு பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் உயர் பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நிறைவடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மீட்பு பணிகளில் ஈடுபட்ட கடற்படையின் 8 விசேட படைகள்
நேற்று காலை 7.30 மணியளவில் விபத்து இடம்பெற்ற போதிலும் பல மணித்தியாலங்களாக நீரில் மூழ்கியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய விரைவு செயற்பாட்டு படை, மரைன் படை, விசேட படகு படை மற்றும் சுழியோடிப்பிரிவு என 8 கடற்படையின் 8 விசேட படைகள மீட்பு பணிகளில் ஈடுபட்டன.
பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியில் இடம்பெற்ற இந்த படகு அனர்த்தத்தைக் கண்டித்து பிரதேச மக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. கிண்ணியா பிரதேச செயலக வளாகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் டயர்களை எரியூட்டி எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் இயலாமை தமக்கு அதிருப்தியளிப்பதாக தெரிவித்தனர். வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டுள்ள பெருமளவான மக்கள் ஒன்று கூடியதையடுத்து அப்பகுதியிலுள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியை மறித்தமையால் பொலிஸாருடன் முறுகலும் ஏற்பட்டது. எனினும் பின்னர் பொலிஸ் வாகனத்திற்கு வழிவிடப்பட்டதையடுத்து நிலைமை சுமூகமடைந்தது.
மக்கள் விசனம்
இந்த பகுதியில் குறுக்கு வீதியொன்றை அல்லது பாலமொன்றை அமைத்துத் தருமாறு பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அண்மையில் அதற்கான அடிக்கல் நாட்டப்பட போதிலும், இதுவரையில் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. மாறாத நீர் தாங்கிகளை இட்டு தற்காலிகமான பாதுகாப்பற்ற வீதியொன்றே அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் அது பாதுகாப்பான வீதியல்ல என்றும் , அதில் எம்மால் பயணிக்க முடியாது என்றும் பல சந்தர்ப்பங்களில் உரிய தரப்பினரிடம் தெரிவித்திருக்கின்றோம். அவ்வாறிருந்தும் இந்த தற்காலிக வீதிக்கு அனுமதியளித்த பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர் இந்த அசம்பாவிததத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM