( குமார் சுகுணா )
இணையத்தில் இலங்கை தொடர்பாக வெளியான முத்திரை ஒன்று தற்போது மிக பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக தமிழ் பற்றாளர்கள் இதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அது என்ன என்று பார்ப்போம்.
இலங்கையின் முதல் மன்னர் என்று கூறப்படும் விஜயன் தொடர்பானதே இந்த முத்திரை. வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த இராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்ததாக கூறப்படுகிறது.
சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.
விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.
அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். “விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்” என்று வற்புறுத்துகிறார்கள்.
இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேரையும் மன்னன் நாடு கடத்துகிறார். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, “எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்” என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.
இலங்கையில் இராவணனின் மகள் என்று கூறப்படுகின்ற குவேனி விஜயனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள்.
சிம்மாசனம் ஏற ஆசைப்பட்ட விஜயன், ஒரு இளவரசியை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறியதையடுத்து, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு சென்று, அங்கு பாண்டிய மன்னருக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.
பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, குவேனியை அழைத்து, “நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப் போகிறேன். இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான்.
இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு “லங்காபுரா” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான். 38 ஆண்டு காலம் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.
குவேனியை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த குவேனி சாபம் விட்டதாகவும் கூறப்படுகின்றது.
1956-இல் விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையை பார்த்த பெரும்பான்மை தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்த போதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக் கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்” என்று கூறினார்கள்.
இதன் பிறகு தபால் தலை வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடு தான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான், சிங்களர்கள் அல்ல.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மெளரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பெளத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார்.
அக்குழு இலங்கைக்கு வந்த போது, அனுராதபுரத்தை தலை நகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் அல்லது தீசன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு “தேவ நம்பி” என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமூலர் தனது திருமந்திரத்தில் இலங்கையை சிவபூமி என கூறியிருக்கிறார். இராவணன் கூட சிவ பக்தன் தான். இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்த நிலையில் இன்று தென் முனை தவிர்ந்து ஏனைய இடங்களில் சிவாலயங்கள் உள்ளன. அத்தோடு , இலங்கையின் தென் முனையாகிய தெய்வேந்திர முனையிலும் ஒரு விஷ்ணு ஆலயம், அம்பாந்தோட்டையில் கதிர்காமம், சிவனொளி பாதமலை, சிலாபம் முன்னேச்சரம் என நாட்டின் சகல திசைகளிலும் புராதன இந்து ஆலயங்கள் இன்றும் காணப்படுகின்றன.
இவைகளை தொகுத்து நோக்கும் போது இலங்கை வரலாற்றை கூறும் மகாவம்சம் வரலாற்றை திரித்துக் கூறும் பெளத்த நூலாகக் காணப்படுவதுடன் இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழரே, வந்தேறு குடிகள் தமிழர்கள் அல்ல என்ற உண்மை வெளிப்படுகின்றது என இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த வரலாற்று உண்மையை அறிந்து, தமிழர்கள் பெருமை கொள்வதுடன் இதனை பகிர்வதன் ஊடாக அனைத்து தமிழர்களும் இந்த நாட்டின் உரிமையுள்ள பூர்வீகக் குடிகள் என்ற தன்னம்பிக்கையை வளர்த்திடுவோம் என இணையத்தில் பலரும் பரவலாக கருத்து பகிர்கின்றனர். 1956 இல் வெளியான விஜயனின் முத்திரை தற்போது வைரலாக காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இது தமிழர்களுக்கு ஒரு மகிழ்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இணையத்தை பார்க்கும் போது தெரிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM