(என்.வீ.ஏ.)
அணித் தலைவர் சுஜான் பெரேரா அசாத்திய திறமையை வெளிப்படுத்தி பங்களாதேஷின் பல கோல் முயற்சிகளைத் தடுத்ததன்மூலமும், வசீம் ராஸிக் போட்ட உபாதையீடு நேர பெனல்டி கோலின் மூலமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றது.
பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு, குதிரைப்பந்தயத் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற தீர்மானம் மிக்க போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை இறுதிப் போட்டியில் சிஷெல்ஸை சந்திக்கவுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட இறுதிப் போட்டி ஒன்றில் கடந்த 21 வருடங்களில் இலங்கை விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
மாலைதீவுகளில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர கிண்ண அழைப்பு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியிலேயே இலங்கை கடைசியாக விளையாடியிருந்தது.
ரொஷான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி அப் போட்டியில் மாலைதீவுளை பெனல்டி முறையில் வெற்றிகொண்டு சம்பியனாகியிருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கிண்ண கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் விளையாடுவதைக் குறியாகக் கொண்டு நேற்றைய போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் ஆரம்பித்ததிலிருந்து ஆக்ரோஷத்துடனான எதிர்த்தாடல் உத்தியைக் கையாண்டு விளையாடின.
காலையில் பெய்த கடும் மழை காரணமாகவும் போட்டியின்போது பெய்த மழை காரணமாகவும் மைதானத்தின் சில பகுதிகளில் சகதி நிறைந்திருந்ததால் வீரர்கள் சிறு தடுமாறத்தை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும் போட்டியின் 25ஆவது நிமிடத்தில் இலங்கை முதலாவது கோலைப் போட்டு முன்னிலை அடைந்தது.
சசங்க ஜயசேகர இடதுபுறத்திலிருந்து பரிமாறிய பந்தை சலன சமீர ஓங்கி உதைக்க அது பங்களாதேஷ் கோல்காப்பாளரின் கைகளில் பட்டு முன்னோக்கி வந்தது. அப்போது விரைந்து ஓடிய வசீம் ராசீக் இடதுகாலால் பந்தை உதைத்து கோலினுள் புகுத்தினார்.
7 நிமிடங்கள் கழித்து பங்ளாதேஷுக்கு கிடைத்த கோர்ணர் கிக் பந்தை தொப்பு பர்மான் தலையால் முட்டி கோல் போட முயற்சித்தார்.
ஆனால், இலங்கையின் பின்கள வீரர் டக்சன் பியூஸ்லஸ் பந்தை கையால் தடுத்ததால் பங்களாதேஷுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அத்தடன் பியூஸ்லஸுக்கு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டது.
தொடர்ந்து 34ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் தோப்பு பர்மான் உதைத்த பெனல்டி, கோல்காப்புக்கு மேலாக சென்றதால் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகித்தது.
அதன் பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணி தடுத்தாடல் உத்தியைக் கையாண்டதால் பங்களாதேஷின் முயற்சிகள் வீண்போயின.
அத்துடன் கோல்காப்பாளர் சுஜான் பெரேரா, எதிரணியினர் கோல் போடுவதற்கு எடுத்த பல முயற்சிகளை தடுத்து நிறுத்தினார். பின்கள வீரர் சரித்த ரத்நாயக்கவும் தடுத்தாடலில் திறமையாக செயற்பட்டார்.
இடைவேளையின் பின்னர் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் பங்களாதேஷின் மாற்றுவீரர் யாசின் அரபாத் பரிமாறிய பந்தை மற்றொரு மாற்று வீரரான ஜுவெல் ராணா கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியினரின் ஆக்ரோஷ எதிர்த்தாடல் விளையாட்டினால் இலங்கை அணி தடுத்தாடல் உத்தியைக் கையாண்டது. போட்டியின் கடைசி 10 நிமிடங்களில் இலங்கை அணி எதிர்த்தாடல் வியூகத்தை அமைத்து விளையாடி எதிரணியைப் பிரமிப்பல் ஆழ்த்தியது.
போட்டி முழு நேரத்தைக் கடந்து உபாதையீடு நேரத்துக்குள் சென்ற 2ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் பின்களவீரர் ஒருவர் வசீம் ராசீக்கை முரணான வகையில் வீழ்த்தியதால் இலங்கைக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
இந்த பெனல்டியை வசீம் ராசீக் கோலினுள் புகுத்தி இலங்கையின் வெற்றியையும் இறுதி ஆட்ட வாய்ப்பையும் உறதிசெய்தார்.
இலங்கைக்கும் சிஷெல்சுக்கும் இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM