(நா.தனுஜா)
இலங்கையின் கேந்திர அமைவிடத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், வெளிநாடுகளில் அடையாளங்காணப்படும் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் எமது நாட்டிற்குள் இலகுவாகப் பிரவேசிப்பதற்கான அச்சுறுத்தல்நிலை உயர்வாகக் காணப்படுகின்றது.
எனவே முன்னுரிமை ஒழுங்கின் பிரகாரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் மூன்றாம்கட்ட செயலூட்டித் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை அண்மைக்காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாமல் அலட்சியமாக செயற்படுவதனை அவதானிக்கமுடிவதாகத் தெரிவித்துள்ள அவர், மீண்டுமொரு நீண்டகால முடக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய இயலுமை நாட்டின்' பொருளாதாரத்திற்கோ அல்லது மக்களுக்கோ இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்படவில்லை என்றும் மீண்டுமொரு வைரஸ் பரவல் அலை உருவாகினால் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியாமல்போகலாம் என்றும் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரித்திருக்கும் நிலையில், மறுபுறம் கடந்த சில தினங்களில் கர்ப்பிணித்தாய்மாரும் சிறுவர்களும் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வீதத்தில் சிறியளவு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக விசேட வைத்தியநிபுணர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மீண்டுமொரு கொவிட் - 19 வைரஸ் பரவல் அலை உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் அதனை முன்கூட்டியே தடுப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வினவியபோதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவலின் நான்காவது அலை திரிபடைந்த டெல்டா வைரஸினால் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திரிபடைந்த டெல்டா வைரஸின் மேலும் சில திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்நாடுகளைப் பொறுத்தவரையில் இது பண்டிகைக்காலம் என்பதால் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறிருக்கையில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், வெளிநாடுகளில் இனங்காணப்படும் புதிய திரிபுகள் எமது நாட்டிற்குள் இலகுவாகப் பிரவேசிப்பதற்கான அச்சுறுத்தல்நிலை உயர்வாகக் காணப்படுகின்றது. ஆகவே எமது நாட்டில் புதிய திரிபுகள் குறித்த ஆய்வுகள் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும்.
அடுத்ததாக கொவிட் - 19 தடுப்பூசி வழங்கலைப் பொறுத்தமட்டில் சுகாதாரப்பிரிவினருக்கு மூன்றாம்கட்டமாக செயலூட்டித்தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம்கட்டத் தடுப்பூசிகள் சுகாதாரப்பிரிவினருக்கு முழுமையாக வழங்கப்பட்டதன் பின்னர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதனைத்தொடர்ந்து படிப்படியாகப் பொதுமக்களுக்கும் செயலூட்டித் தடுப்பூசிகளை வழங்கவேண்டும். ஏனெனில் தடுப்பூசியின் செயற்திறன் எவ்வளவு காலம்வரை நீடிக்கும் என்பது குறித்து எந்தவொரு ஆய்வின் மூலமும் இதுவரையில் உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், அனைவருக்கும் மூன்றாம்கட்டமாக செயலூட்டித்தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகின்றது.
மேலும் நீண்டகாலம் முடக்கத்திலிருந்த நாடு தற்போது மீண்டும் பழையநிலைக்குத் திரும்பியிருக்கின்றது. இருப்பினும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாமல் அலட்சியமாக செயற்படுவதனை அவதானிக்கமுடிகின்றது.
கொவிட் - 19 வைரஸ் பரவலின் ஐந்தாவது அலை உருவாகாது என்றும் அல்லது எப்போது உருவாகும் என்றும் உறுதியாகக்கூறமுடியாத நிலையில், சுகாதார வழிகாட்டல்களை அலட்சியமின்றி உரியவாறு பின்பற்றுவதன் ஊடாகவே மற்றுமொரு அலை உருவாவதைத் தடுக்கமுடியும். மீண்டுமொரு நீண்டகால முடக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய இயலுமை நாட்டின் பொருளாதாரத்திற்கோ அல்லது நாட்டுமக்களுக்கோ இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM