(நா.தனுஜா)
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களினால் நாட்டின் விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
கண்டிக்கு வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அங்கு மல்வத்து மகாவிகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரையும் அஸ்கிரிய மகாவிகாரையின் பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரத்னாபிதான மகாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
இதன்போது நாட்டின் விவசாயிகள் தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் மகாநாயக்க தேரர்களிடம் எடுத்துரைத்தார்.
இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது:
உரம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதன் காரணமாக விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னமும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
அதுமாத்திரமன்றி கடந்த காலங்களைப்போன்று அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டுமக்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் அதேவேளை, அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பொறுத்தமட்டில், தவறான ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கவேண்டும். பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை பேராசிரியர் புத்தி மாரம்பே நாட்டின் விவசாயத்துறை தொடர்பில் நன்கு தெளிவும் தேர்ச்சியும் உடையவராவார்.
இரசாயன உரத்தையும் சேதன உரத்தையும் மாத்திரம் தனித்தனியாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் சுமார் 11 வருடகாலப் பயிர்ச்செய்கையை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருவகையான உரத்தையும் பயன்படுத்துவதன் ஊடகவே பயிர்ச்செய்கை உற்பத்தியை மேம்படுத்தமுடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்ததன் பின்னரே, எமது நாட்டிற்குள்ளேயே சேதன உரத்தை உற்பத்தி செய்வது குறித்து ஆராயப்பட்டது. இருப்பினும் தேவையானளவு சேதன உரத்தை உற்பத்திசெய்யும் இயலுமை எமது நாட்டிற்கு இல்லை என்பது அதன் பின்னரே உணரப்பட்டது. எனவே இவ்விடயத்தில் உரியவாறு முன்கூட்டிய ஆய்வுகளை முன்னெடுக்காமலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இரசாயன உர இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் என்ற இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் 'எர்வீனியா' என்ற தீங்கேற்படுத்தும் பாக்றீரியா உள்ளடங்கியிருப்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மறுபுறம் மூடியின் முதலீட்டாளர் சேவையினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிதிவழங்குனர்கள் உள்ளிட்ட தரப்பினர் நாட்டின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே அண்மைக்காலத்தில் இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மகாநாயக்க தேரர்களுடனான இச்சந்திப்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் அவரது பாரியார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, புத்திக பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM