(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை மீளப் பெற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.
முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, மேன் முறையீட்டு நீதிமன்றில் கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்துள்ள ரீட் மனு மீதான பரிசீலனைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை அறிவித்தார்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இதனை சிரேஷ்ட அரச சட்டவாதி தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் குற்றப் பகிர்வு பத்திரம் மீது விசாரணை நடாத்தும் கொழும்பு ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது மன்றில் ஆஜரான குறித்த ரிட் மனு தொடர்பில் இடையீட்டு மனுதாரர்களாக தலையீடு செய்துள்ள, சம்பவத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நுவன் போப்பகே சட்ட மா அதிபர் மனுதாரருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெறுவதற்கான காரணத்தை மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என கோரினர்.
இவ்வாறான நிலையில், குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவது தொடர்பில் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றுக்கு அறிவிக்க, சட்ட மா அதிபர் தரப்புக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இவ்வாறான நிலையில், இந்த ரிட் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டது.
முன்னதாக கடந்த 2020 ஜூன் 26 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித்த ராஜகருணா ஆகிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் வசந்த கரன்னாகொடவின் ரிட் மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் வண்ணம் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற விசாரணைகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், சிறப்பு மேல் நீதிமன்றம் முன்னெடுக்கும் விசாரணைகளை நிறுத்துமாறு கோரும், வசந்த கரன்னகொடவின் ரீட் மனுவில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னதாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக காட்டிக்கொண்டு, எந்த பயங்கரவாத செயல்களுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடாத அப்பாவி சிவிலியன்களை கடத்திச் சென்று இரகசியமாக தடுத்து வைத்து, கப்பம் பெற முயற்சித்து இறுதியில் அந்த 11 பேரையும் கொலை செய்தமை தொடர்பில் மூவர் கொண்ட ட்ரயல் அட்பார் விஷேட மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொலை செய்ய சதி செய்தமை, அதற்காக கடத்தியமை, உடைமைகளை கொள்ளையிட்டமை, பலாத்காரமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமை, காணாமல் ஆக்கியமை, அது தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட 667 குற்றச்சாட்டுக்கள் இந்த 14 பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் பிரதம நீதியரசரால் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா ஜெகன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவை அனைத்தும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்கும் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபரின் குற்றப் பத்திரிகையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர்ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த தற்போது ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, ஆகியோர் கைதாகி தற்போது பிணையில் உள்ளனர்.
முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அவர் இந்த விவகாரத்தின் 16 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டார். 17 ஆவது சந்தேக நபராக கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார கைது செய்யப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் குற்ரப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்தார்.
17 ஆவது சந்தேக நபரான கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார உள்ளிட்ட மூவர் அரச சாட்சியாக மாற்றப்பட்டனர். அளுத் கெதர உபுல் பண்டாரவே கன்சைட் முகாமில் குறித்த கடத்தப்பட்டவர்கள் இருந்த போது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள உதவியதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனைவிட லக்ஷ்மன் உதயகுமார மற்றும் தம்மிக தர்மதாஸ ஆகிய இரு கடற்படை உளவுப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் அரச சாட்சியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த கொமான்டர் சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய, கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனபப்டும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார ஆகிய 14 பேர் இந்த சிறப்பு மேல் நீதிமன்ற வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே தற்போது வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெற சட்டமாதிபர் தீர்மானித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM