(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊருக்கு வந்தால் தாக்குங்கள் என ஒரு தமிழ் எம்.பி. வன்முறையை தூண்டி முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேத்துகின்றார்.
இவர் தொடர்பில் முஸ்லிம் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். தாக்குங்கள் என்று கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹரீஸ் கேள்வி எழுக்கினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகமானது தமிழ், சிங்கள சமூகத்துடன் நல்லுறவுடன் வாழும் சமூகமாக உள்ளது. இந்நிலையில் தெற்கிலுள்ள ஞானசார தேரர், எமது இறைவனே இந்த நாட்டில் நடக்கின்ற குறிப்பாக கடந்த தாக்குதலுக்கு மூல காரணமென்று மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் எவ்வாறு நடந்துகொள்வது என்று எமது மார்க்க அறிஞர்களுடன் ஆராய்ந்த போது, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பொலிஸில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறினர்.
அதற்கமைய நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், இந்த சபையில் உள்ள வேறு ஒரு சமூகத்தவர் , முஸ்லிம் சமூகம் தொடர்பில் பேசுவதற்கு தடையாக நாங்கள் இருக்க விரும்பவில்லை.
அவருக்கு அந்த விடயத்தை பேசும் உரிமை இருக்கின்றது. அதற்காக ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஊருக்கு வந்தால் தாக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் கூறியமை எமது சமூகத்தில் கொதிப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு எமது சமூகத்தின் வரலாறு தெரிய வேண்டும். அவர் கடந்த கால முஸ்லிம் தலைவர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது, எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே முகம்கொடுத்து செயற்பட்டனர் என்பதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்க்க முற்படுகின்ற போது, கடந்த காலத்தில் அவரின் பாட்டனார் முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் எவ்வாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சுடுங்கள் என்று கூறும் அவதாரம் எடுத்தார்களோ அதே புதிய அவதாரத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குங்கள் என்று கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை உள்ளது என்பதுதான் நாங்கள் கேட்கும் கேள்வி.
எங்களுடைய வியர்வை, மூச்சு எமது சமூகத்தின் மீது உள்ளது. ஆனால் இரட்டை வேடம் போடுவதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது.
முஸ்லிம் சமூகம் பற்றி பேசும் நபர், வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்று கூறுகின்றார். அதனால் கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் அபிலாசைகள் தொடர்பில் பேசமுடியாது.
முஸ்லிம் சமூகம் நாட்டில் பல பிரதேசங்களிலும் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் தீவிர சிந்தனையை உருவாக்குவதற்கு இடமளிக்க முடியாது. அந்த இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறிதேனும் சிந்திக்காது அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த சபையில் முஸ்லிம் தலைவர்களுக்கு இல்லாத ஞானமா இவருக்கு வந்துள்ளது என்று கேட்க வேண்டியுள்ளது. நிதானமாக பேசக்கூடிய தலைவர்கள் பலர் இந்த சபையில் இருக்கின்றனர்.
ஆனால் ஒருவர் மட்டும் காவடி எடுத்து ஆடுவது போன்று எதை பேச வேண்டும், பேசக் கூடாது என்று தெரியாமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. வந்தான் வரத்தான் எல்லாம் எமது சமூகம் தொடர்பில் பேச இடமளிக்க முடியாது. இது தொடர்பில் இந்த சபையில் உள்ள மூத்த முஸ்லிம் அரசியல் வாதிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM