(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?
பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.
என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.
கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?
பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.
எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.
கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?
பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.
கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.
கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?
கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?
பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM