(நா.தனுஜா)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தீவிரவாதத்தைப் பிரசாரம் செய்ததாகவும் இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்த்ததாகவும் பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பேசிய விடயங்களை முற்றாக மறுப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தீவிரவாதத்தைப் பிரசாரம் செய்ததாகவும் இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்த்ததாகவும் குறிப்பிட்டு, உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காண்பித்துப் பேசியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்களை எமது அமைப்பு முற்றாக மறுக்கின்றது.
ஆணைக்குழுவின் அறிக்கையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பற்றிக் குறிப்பிடப்படும் அத்தியாயத்தின் இறுதியில், இது ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சியங்களையும் ஆவணங்களையும் நிபுணர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த ஆணைக்குழு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான எந்தவொரு ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை. குறைந்தபட்சம் அவர் எழுதிய ஒரு வசனத்தைக்கூடக் காண்பிக்கவில்லை. மாறாக இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் இழிவுபடுத்தி எழுதிவருகின்ற ஓர் இளைஞன், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கூறியதைத் தான் செவிமடுத்ததாகப் பொய்யாகக்கூறிய சாட்சியத்தை மாத்திரமே ஆதாரமாகக் காண்பித்துள்ளது.
இக்குற்றச்சாட்டுக்களை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் முற்றாக மறுத்திருப்பதுடன் 'எனக்கெதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்' என்ற தலைப்பில் மும்மொழிகளிலும் கையேடொன்றையும் வெளியிட்டுள்ளார். இக்கையேடு ஜனாதிபதி, அமைச்சர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலரிடமும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பற்றிய பல தவறான தகவல்களை உள்ளடக்கியிருப்பதிலிருந்து, அவ்வறிக்கையைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைந்த தகவல்மூலங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் கூறுவதுடன் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது எவ்வகையிலும் நியாயமற்றது என்பதுடன் அது அவருடைய அடிப்படை உரிமைகளை மீறுவதுமாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM