இலங்கையின் "இலவசக் கல்வியின் தந்தை" என எல்லோராலும் நினைவு கூறப்படுபவர் தான் கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா ஆவார். இலவசக் கல்வித் திட்டம் என்னும் போது, அதனை எப்போதும் இவரது பெயருடனேயே இணைத்து நோக்குவது அவசியமாகும்.
மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் பல்வேறு இன்னல்களுக்கும், சவால்களுக்கும், முகங் கொடுத்து தனது கல்வியினைத் தொடர்ந்தார். தான் பட்ட கஷ்டங்களையும், துன்பங்களையும், எதிர்கால சிறுவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக செயற்பட்டவர்.
ஆசிரியத் தொழிலை தனது ஆரம்பத் தொழிலாக ஆரம்பித்து, அதன்பின் அரசியல்வாதியாக, இராஜதந்திரியாக செயல்பட்டவர். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்து 1931 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 ஆம் ஆண்டுவரை இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர்.
இன்று இலங்கை உலகிலேயே கல்வி அறிவு பெற்றுள்ள நாடுகளில் முதன்மை பெற்றதாக காணப்படுகின்றது என்றால் அதற்கான ஆரம்ப வித்திட்டவர் கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா. அந்த வித்துக்கள் தான் இன்று பெரும் விருட்சமாக பரவி பேராசிரியர்களாக, வைத்தியர்களாக, பொறியியலாளராக, ராஜதந்திரிகளாக, நீதிபதிகளாக, சட்டத்தரணிகளாக இன்னும் பல்வேறு தொழில் சார்ந்த வாண்மையுடன் சமூகத்தில் பரந்து காணப்படுகின்றனர்.
கல்விக்கான முதலீடு மனித வளங்களுக்கான முதலீடென அனுபவரீதியாக உணர்ந்தவர். வர்க்கத்தினருக்கும், செல்வந்தர்களுக்கும், சொந்தமான கல்வியினை இலவசக் கல்வித் திட்டத்தின் ஊடாக , அதனைப் பொதுவுடமை ஆக்கியதனால், சகலரும் கல்வியினை கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது .
இலவசக் கல்வியின் நோக்கமாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது,
- ஆரம்பப் பிரிவில் இருந்து பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி
- திறமைமிக்க அனைவரும் படித்து சமூகத்தின் உயர்வு நிலை அடைதல்
- கல்வி என்பது அனைத்துப் பிள்ளைகளுக்கும் எந்த விதமான பாகுபாடும் இன்றி பெறப்படவேண்டும்.
- ஆரம்பக் கல்வியினை தாய்மொழி மூலம் கற்றல்
- ஆங்கிலத்தை மூன்றாம் தரத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படல்.
- குழந்தைகளின் "தலை, உள்ளம், கைகள்" வளர்வதற்கேற்ற ஒரு பாடவிதானத்தை எடுத்துரைத்து, அவற்றைத் தொடர்புபடுத்தும் திறன்களைக் கொண்ட அறிவை மேம்படுத்தல்.
இவ்வாறாக, இவர் கல்வி மந்திரியாக இருந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். கிராமப்புற மக்களுக்கு எட்டாக்கனியாக காணப்பட்ட கல்வியினை இலவசக் கல்வித் திட்டத்தின் ஊடாக, அவர்கள் உயர்கல்வி வரை தமது கல்வியினை தொடர்வதற்கான வாய்ப்பு அன்றிலிருந்து ஏற்பட்டிருந்தது . இது எம் தேசத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்.
இது மாத்திரமல்லாது சகல பாடசாலைகளிலும் பிரதேச பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டமை, இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை ஆகியன அவர் ஆற்றிய சேவைகளுக்கான சான்றுகளாகும். இலங்கையில் பிறந்த நாம் எல்லோரும் இலவச கல்வியினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, எமது நாட்டில் இலவசக் கல்வியின் மூலமாக ஏற்பட்ட பலன்களை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நாட்டின் மூலை, முடுக்குகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வில் கல்வி என்னும் சுடரை ஏற்ற வழி சமைத்தவர் இவரென்றால் அது மிகையாகாது.
இவரால் மேற்கொள்ளப்பட்ட இலவசக் கல்வியின் பயனை பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை அனுபவித்தவர்களுள் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதோடு, அதன் மூலம் மிக உயர்ந்த பதவியையும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதனால் இந்த ஆக்கத்தினை இந்நாளில் இவருக்கு சமர்ப்பணமாக எழுதுகின்றேன்.
இதுபோல, எம்மில் பலரும் இலவசக் கல்வியின் பயனை முழுமையாக அனுபவித்தவர்கள் ஆவர். அவர் இவ்வாறானதொரு திட்டத்தினை அன்று கொண்டு வராமல் இருந்திருந்தால், இன்று இதனை எழுதிக் கொண்டிருக்கும் நானும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் எழுத்துருவில் அறிவதற்கு மிகவும் கடினமாகவே இருந்திருக்கும்.
எங்களால் எழுத , வாசிக்க முடியுமானால், அதற்கான அடித்தளம் பாடசாலையிலேயே இடப்பட்டிருக்கும். அந்தப் பாடசாலையில் வழங்கப்பட்ட இலவசக் கல்வியின் ஊடாகவே இந்தப் பயன் எமக்கு கிடைத்துள்ளது . இவ்வாறு எதிர்கால சமூகத்திற்கு பெரும் பங்காற்றிய கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்கள் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.
அவரது பூதவுடல் மறைந்தாலும், அவர் எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகள் காலத்தால் மறக்க முடியாதவை. இவரது சேவையினூடாக, அவர் ஒரு சிறந்த தேசியத் தலைவராக , தேசாபிமானியாக மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பெ. செல்வராஜ்
மஸ்கெலியா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM