குமார் சுகுணா
“ஹேப்பி ரிட்டையர்மெண்ட், யோர்க்கர் கிங்” என்று ஐ.சி.சி.யே தன் வாழ்த்துச் செய்தியில் புகழ்ந்து பிரியாவிடையளித்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை.
ஆம் , அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மலிங்க நேற்றுமுன்தினம் அறிவித்தார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த மலிங்கா, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், டி20 உட்பட அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்க அறிவித்துள்ளார்.
தனது அதிரடி யோர்க்கர்களால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்த மலிங்க, ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி, முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லசித் மலிங்கவின் பந்து வீச்சு மற்றும் அன்றி அவரது தலைமுடிக்கும் உலகம் முழுவதும் ஏராளமாக கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மலிங்க அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது துல்லியமான யோர்க்கர்களால் எதிரே நிற்கும் துடுபாட்ட வீரர்களை திக்குமுக்காட செய்தவர்.
அதுவும் குறிப்பாக எதிரணி துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டங்களை கட்டுப்படுத்த முனையும் தற்போதைய யோர்க்கர்களுக்கு மலிங்க தான் தொடக்கப்புள்ளி என்று கூறலாம். 2007 மற்றும் 2011 -ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பையில் இலங்கை அணி இறுதி போட்டி வரை முன்னேற மலிங்கவும் ஒரு காரணம்.
30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி உள்ளார். கடைசியாக இலங்கை அணிக்காக 2020 மார்ச்சில் அவர் விளையாடி இருந்தார். டி20 தொடரில் இருந்து விலகியதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார் மலிங்க.
2007 உலகக் கோப்பையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தவர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவர். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்க விளையாடி உள்ளார்.
கிரிக்கெட் உலகிலேயே விநோதமான ஒரு பந்துவீச்சு பாணி உடையவர் என்றால் மலிங்கதான், குறிப்பாக வேகபந்து வீச்சில். மேற்கு இந்திய தீவுகளில் முன்பு கிளார்க் என்ற ஒரு பந்துவீச்சாளர் இருந்தார், இவர் வலது கை வீச்சாளர்தான் ஆனால் பந்து வீசி முடிக்கும் போது இடது கால் முன்னே வராமல் வலது கால் முன்னே வர வீசுவார், அப்போது அது பெரிய விடயம். பிறகு மலிங்கதான்.இவரது பாணிதான் உலகளவில் பிரசித்தம்.
டி20 துடுபாட்டத்தில் எப்படி கிறிஸ் கெய்லை அடித்துக் கொள்ள முடியாதோ டி20 பந்துவீச்சில் முடிசூடா மன்னன் மலிங்க என்று தயங்காமல் கூற முடியும். ஐ.சி.சி.யே தன் வாழ்த்துச் செய்தியில், “ஹேப்பி ரிட்டையர்மெண்ட், .யோர்க்கர் கிங்” என்று புகழ்ந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 5 முறை கோப்பையை வெல்ல 4 முறை காரணமாக இருந்தவர் மலிங்கதான்.லசித் மலிங்க தனது விடுப்பை அறிவித்ததையடுத்து அவருடன் விளையாடிய சக வீரர்கள் அவருக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர். பும்ராவ் மலிங்கவை வாழ்த்தியுள்ளார்.
“உதாரணமாகத் திகழும் உங்கள் கிரிகெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். மலி உங்கள் அனைத்து எதிர்கால திட்டங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடியது இனிமை மகிழ்ச்சி” என்று பும்ரா தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் ‘அனைத்து நினைவுகளுக்கும் நன்றி மலிங்க” என்று புகழ்ந்துள்ளது.
122 ஐ.பி.எல். போட்டிகளில் மலிங்க 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒருமுறை 5/13 என்று வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு. இலங்கைக்காக 546 விக்கெட்டுகளை அனைத்து வடிவங்களிலும் கைப்பற்றினார். 2007 உலகக்கோப்பையில் இவரது பந்து வீச்சினால் இலங்கை இறுதியில் விளையாடியது, 2011 உலகக்கோப்பையிலும் இவரது பங்களிப்பு ஏராளம், 2014 டி20 உலகக்கோப்பையில் இலங்கையின் வெற்றி தலைவனும் மலிங்கதான்.
மஹேலஜெயவர்தன கூறும்போது, “உன்னை முதன் முதலாக 18 வயது பந்துவீச்சாளராக வலையில் சந்தித்தது முதல் நிறைய ஆச்சரியகரமான நினைவுகளை விட்டுச் சென்றுள்ளாய், நன்றி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே மலிங்க மறக்க முடியாத பல நினைவுகளை விட்டுச்சென்றுள்ளார் என்றே கூற வேண்டும்.
யுத்தம், இன பிரச்சினை என்ற முட் செடிகளுக்கு இடையே வளர்ந்து விருட்சமானதுதான் இலங்கை கிரிக்கெட். பல துயரங்களுக்கு மத்தியில் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை இலங்கை வீரர்கள் சாதித்துள்ளனர். சனத்,சங்ககார, முரளி ,மஹேல போல மகத்தான வீர்களில் மலிங்கவும் ஒருவர். இவர்களின் வெற்றிடங்கள் இலங்கை கிரிக்கெட்டில் அத்தனை எளிதாக நிரப்ப முடியாது என்பதே உண்மை. நாட்டுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான பல நினைவுகளையும் பெருமையையும் தந்த மலிங்கவை நாமும் வாழ்த்தி விடை கொடுப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM