ஆர்.ராம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் நீதியைக் கோரியும் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோதமான ஏதேச்சதிகாரச் செயற்பாடுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு தமிழ்த் தேசியத் தளத்தில் செயற்படும் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து கடிதம் அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
அந்தவகையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் எம்.பி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மற்றும் தமிழீழ விடுதலை இயகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்ட கடிதம் ஐ.நா.அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்ட பிறிதொரு கடிதமும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் வழிகாட்டலில், கூட்டமைப்பின் பேச்சாளரும், தமிழரசுக்கட்சியின் வெளிவிகாரங்களுக்கான பிரதி செயலாளருமான எம்.ஏ.சுமந்திரனின் முன்னெடுப்பில் தயாரிக்கப்பட்ட கடிதத்தின் பிரதிகள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்துடன் VIRTE Research அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தில் காணப்படும் 36 விடயப்பரப்புக்களில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த விடங்கள் பற்றிய கண்காணிப்பு ஆய்வறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் தற்போது வரையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.இந்நிலையில் பங்காளிக்கட்சிகளின் கையொப்பத்தையும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தினையும் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றில் வைத்துபெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இக்கடிதத்தில் கையொப்பமிடப்போவதில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோவும புளொட்டும் தீர்மானித்துள்ளதாக வீரகேசரியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே கையொப்பம் இட்ட கடிதத்தினை அனுப்பியுள்ளமையால் இதில் கையொப்பமிடப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாக வீரகேசரியிடம் உறுதிப்பதியுள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தமிழரசுக்கட்சியின் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோரே இக்கடிதத்தில் கையொப்பமிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மாவை.சேனாதிராஜாவிடம் விக்னேஸ்வரன், புளொட்,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், த.தே.க. ஆகிய தரப்பினர் கையொப்பமிட்ட கடிதத்தில் கையொப்பமிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அவர் அதனை ஏற்றுக்கொண்டிருக்காததோடு சுமந்திரன் தனக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறிருக்கை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய விரிவான அறிக்கையொன்றை பின்னிணைப்பாகக் கொண்ட கடிதமொன்றை ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வீரகேசரியிடம் குறிப்பிட்டார்.
இதேவேளை விக்னேஸ்வரன் அணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் இம்முறை ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கான கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கவில்லை. இதுதொடர்பில் குறித்த கட்சி அங்கத்துவம் வகிக்கும் கூட்டணியின் ஏனைய தரப்பினர்களிடத்தில் கேள்விஎழுப்பியபோது தாம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனிடத்தில் கையொப்பம் இடுவதற்கு கோரியதாகவும் அவர் மத்திய குழு தீர்மானித்தின் பின்னரேயே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அக்கட்சியின் செயலாளர் நாயகமான அனந்தி சசிதரன் கையொப்பம் இடாமை குறித்து கேசரியிடம் தெரிவிக்கையில் தமிழ் இனம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படாமை சுட்டிக்காட்டி சில சொற்பிரயோக மாற்றங்களை கூறியபோதும் அதனை முன்னெடுப்பதற்கு வரைவை தயாரித்தவர்கள் மறுத்தமையினால் கையொப்பம் இடவில்லை என்று கூறினார். அத்துடன் போரின் நேரடிச் சாட்சியமாக இருக்கும் தான் எழுந்தமானமாக செயற்பட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த 22ஆம் திகதி தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர்இணையவழியில் கலந்துரையாடலை நடத்தினார்கள். மூன்று மணிநேரம் நீடித்திருந்த இக்கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
அதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அரசாங்கத்தின் சமகாலச் செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தி கடிதம் அனுப்புதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, திட்டமிட்ட காணி அபகரிப்பை நிறுத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் ஆகிய விடயங்களில் ஏகோபித்த இணக்கபாடு எட்டப்பட்டிருந்தது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரையும் இச்செயற்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான பிரயத்தனங்கள் சிலவும் அரசியல் தரப்புக்களுக்கு அப்பால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமன்றி, சுமந்திரன், ஐ.நா.வுக்கான கடித்தின் வரைபை செய்வார் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களில் சுமந்திரன் பங்கேற்காமை மற்றும் மேலதிக விடயங்கள் பற்றிய தொடர்பாடல்கள் செய்யப்படாமையால் ஏனைய அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து வரைபை தயாரித்து இறுதி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் தமிழரசுக்கட்சியின் தலைவர் அறிந்திருந்ததாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் கூட்டாக குறிப்பிடுகின்றன. இவ்வாறான நிலையில் தான் அக்கட்சிகள் கூட்டிணைந்து தயாரித்த ஆவணம் அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அது ஆமோதிக்கப்பட்ட நிலையில் அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பம் இட்டதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்தச் செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னரே சுமந்திரனின் வரைபு நேற்று முன்தினம் மாலையளவில் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் அதுபற்றிய எவ்விதமான தொடர்பாடலும் செய்யப்படவில்லை என்றும் அந்த அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டுக்கின்றன.
இதேவேளை வரைவு தயாரிக்கும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டபோது நான் சம்பந்தன் அவர்களுடன் ஆலோசித்தே அச்செயற்பாட்டை முன்னெடுப்பதாக கூறியதோடு அச் செயற்பாட்டை பூர்த்தி செய்து அனைத்து பிரதிநிதிகளும் அனுப்பி வைத்திருந்தேன். எனினும் கலந்துரையாடலில் பங்கேற்ற ஏனைய தரப்பினர் பிறிதாக வரைவொன்றை தயாரிக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு முன்னறிவிப்புக்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM