குமார் சுகுணா
தனியார் தொலைக்காட்சி சேவைகள் தமிழ் மக்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த 90களில் சின்னத்திரை ஊடாக சிறுவர்கள் தொட்டு இளைஞர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஒரு பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.
நாடகக் கலைஞர், தொலைக்காட்சி படைப்பாளர், நடிகர், நாடக இயக்குநர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞரான இவர் காலமானார் என்ற செய்தி காதுகளுக்கு எட்டியதும் அதிர்ச்சியில் பலர் உறைந்திருப்பர்.
முகம் முழுக்க புன்னகையோடும் அழகான தமிழ் வர்ணனையோடும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆனந்த கண்ணனுக்கு மிகப் பெரிய இரசிகர் பட்டாளமே உண்டு.
சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன் பிரபலமான தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
குறிப்பாக சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணிபுரிந்த ஆனந்த கண்ணன் 90 கிட்ஸ்களின் விருப்பத்துக்குரிய தொகுப்பாளர் ஆவார்.
சன் டிவியின் பிரபலமான சிந்துபாத் மெகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆனந்த கண்ணன் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்திற்காக மீண்டும் சிங்கப்பூர் சென்று அங்கு வசித்து வந்தார்.
இளமை காலத்திலேயே நாடகக் கலையில் அதீத நாட்டம் கொண்ட ஆனந்த கண்ணன் சிங்கப்பூரின் ரவீந்திரன் நாடகக் குழுவில் நடித்து பின்பு உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து பிரபலமானார்.
பிறகு ஆனந்தகண்ணன் தமிழகத்தில் வானொலியில் படைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பின்னர் 2000களில் அங்கு 'சன் மியூசிக்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் படைப்பாளராகி உலகத் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
பிறகு சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் தொடரில் நடித்தார். அதன் மூலம் பல சிறார்களையும் அவர் அதிகமாகக் கவர்ந்தார். இத்தனை நாளாய் எங்கிருந்தாய், அதிசய உலகம் 3D போன்ற சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளர்களாகப் பலர் பணியாற்றினாலும், அதில் சிலர் மட்டுமே சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாகப் புகழ்பெறுகின்றனர்.
அவர்களில் ஒருவரான ஆனந்த கண்ணனுக்கு, சின்னத்திரை இரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை. சன் டிவியின் நட்சத்திரத் தொகுப்பாளராகத் திகழ்ந்தவர்.
இவர் பேட்டி காண்பதாக இருந்தால், உச்ச நட்சத்திரங்கள்கூட குஷியாவார்கள். பெண் இரசிகர்கள் படையை அதிகம் கொண்டிருந்த ஆனந்த கண்ணன், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
புற்றுநோயால் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த திங்கட்கிழமை பின்னிரவு இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48.
2011 இல் ஊடகத்தில் புகழுடன் இருந்தபோதே, தனது பூர்வீகமான சிங்கப்பூரில் குடியேறினார். தமிழ் மொழி மற்றும் கிராமியக்கலைகள்மீது அதிகமான பற்று கொண்டவர்.
தான் கற்ற பாரம்பரிய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக அந்த நாட்டிலுள்ள மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார்.
இந்தநிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆனந்த கண்ணனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பித்தப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சையின் மூலம் உடனடியாக பித்தப்பையை நீக்கியுள்ளனர்.
பிறகு, வீட்டில் ஓய்விலிருந்தபடியே வழக்கமான பணிகளைக் கவனித்துள்ளார். ஆனால், சில காலத்திலேயே ஆனந்த கண்ணனின் உடல்நிலையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
'கல்லீரலிலும் புற்றுநோய் பரவி, நான்காம் கட்ட நிலையில் இருக்கிறது' என்று மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலைக் கூறியுள்ளனர்.
தொடர் சிகிச்சைகளால் உடலளவிலும் மனதளவிலும் சற்று சோர்வடைந்த ஆனந்த கண்ணன், வீட்டிலிருந்தபடியே அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
அதுவரை குடும்பத்தினரைத் தவிர யாருக்குமே ஆனந்த கண்ணனின் உடல்நிலை குறித்துத் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், அவரை உற்சாகப்படுத்த சினிமா, சின்னத்திரை மற்றும் பிற துறையிலுள்ள முக்கியமான சில நண்பர்களுக்கு மட்டும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆனந்த கண்ணனுக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழைமை இரவு ஆனந்த கண்ணனின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், வரும் வழியிலேயே ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனந்த கண்ணனின் மரணம், பலருக்கும் நம்ப முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனந்த கண்ணனின் மனைவி ராணி, சிங்கப்பூரில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர்.
கதை சொல்லியான ராணி, ஆனந்த கண்ணனுடன் இணைந்து கிராமியக் கலைகளையும் பயிற்றுவித்தார். இவர்களின் ஒரே மகளான அவா கண்ணன் கல்லூரியில் படிக்கிறார்.
கிராமியக்கலைகளில் அனுபவம் பெற்ற மூத்த கலைஞர்களைத் தேடிச்சென்று அருகிவரும் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு, தன் குழுவினருக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஆனந்த கண்ணன்.
அதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துடும்பு மற்றும் பறை இசைப் பயிற்சிக்காக சென்னை வந்திருந்தவர் ஊடகங்களிடம் கருத்து பகிர்கையில் , கிராமியக் கலைஞனாகவே மாறிப்போன உணர்வில் சிலாகித்துப் பேசினார்.
`சிங்கப்பூர்ல மலாய், தமிழ், சைனீஸ், ஆங்கிலம்னு நாலு தேசிய மொழிகள் இருக்கு. இங்க ஆறு சதவிகிதத்தினர் மட்டுமே தமிழர்கள். ஒவ்வொரு பள்ளி வகுப்பறையிலயும் சராசரியா 2 - 3 மாணவர்கள் மட்டுமே தமிழர்கள்.
தமிழுக்குத் தொடர்ந்து உயிரூட்டலைன்னா, அடுத்த சில தலைமுறைகள்ல இந்த நாட்டுல தமிழ் பேசுறவங்க எண்ணிக்கையும் தமிழ் பாரம்பரியமும் இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கு.
அதனால், தமிழர் என்கிற அடையாளத்தைத் தக்கவெச்சுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கு.
அதுக்காகத்தான் பல சிரமங்களையும் கடந்து கிராமியக்கலைகளைப் பரப்பும் முயற்சியை செய்திட்டிருக்கோம்” என்று பெருமிதத்துடன் கூறியவர், இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.
அவரது நண்பர்கள் தெரிவித்ததாவது
“எனக்கு என்ன ஆனாலும் கிராமியக்கலைகளைப் பரப்பும் நம்ம வேலைகள் தொடர்ந்து நடக்கணும்”னு சொல்லியிருந்தார். அதனால, அவருக்கான சிகிச்சைகள் ஒருபக்கம் போயிட்டிருந்தாலும், தொடர்ந்து பயிற்சி வேலைகள் தடையில்லாம நடந்துட்டிருந்துச்சு. நண்பர்கள் பலரும் போன்ல, வீடியோகால்ல அவருக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.
கொரோனா சிக்கலால, அந்த நேரத்துல பக்கத்துல இருந்து அவருக்கு நம்பிக்கையூட்டவும், இப்போ அவருக்கு நேர்ல அஞ்சலி செலுத்தவும் பலருக்கும் வாய்ப்பு அமையல.
கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்ததுபோல மூணே மாதங்கள்ல எல்லாமே முடிஞ்சுடுச்சு. ஆனந்த கண்ணனோட இழப்பை ஏத்துக்க கஷ்டமா இருக்கு.
அவரோட குடும்பத்தினரும், குழுவினரும் ஆனந்த கண்ணனின் கனவுகளை நிறைவேற்ற நிச்சயமா உழைப்பாங்க” என்று கவலையுடன் முடித்தனர்.
மரபுக்கலைகளை வளர்க்கும் கலைஞராக குறிப்பாக சிங்கப்பூரில் வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய கலைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார் ஆனந்த கண்ணன்.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் மாணவர். தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் இந்தியாவுக்குச் சென்று மரபுக்கலை பயின்றவர். பல மேடை நாடகங்களை எழுதியும் இயக்கியும் உள்ளார்.
அவர் நிறுவிய ஏ.கே.தியேட்டர் (AK Theatre) நாடகக் குழுவின் மூலம், நாடகக் கலையையும் தமிழ் மொழியையும் மாணவர்களிடம் எளிமையான முறையில் கொண்டு சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.
மாலை மதுரம், காண்போம் கற்போம், அமளி துமளி, ஊர்க்குருவி, சூப்பர்ஸ்டார் சேலஞ், சவால் சிங்கப்பூர், சுவை போன்ற பல உள்ளூர் நிகழ்ச்சிகள் ஆனந்த கண்ணன் படைத்த, நடித்தவை.
சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டின் பிரதான விழாவில் அவர் தொகுத்து வழங்கிய ஊர்க்குருவி நிகழ்ச்சிக்காக சிறந்த படைப்பாளர் விருதைப் பெற்றார்.
பல தசாப்தங்களாக தமிழ்க்கலை உலகில் தமது நடிப்பு, படைப்பாற்றல் திறன்களாலும் தமிழ் மொழி, தமிழ் மரபுக்கலை மீதுள்ள வேட்கையாலும் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டவர் ஆனந்த கண்ணன். அவரது மறைவு கலை உலகுக்கு ஈடுசெய்ய முடியாததுதான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM