ஒரு சீர்குலைந்த முறைமை : இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களை தடுத்து வைத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு

07 Aug, 2021 | 02:48 PM
image

அம்பிகா சற்குணநாதன்

 

“சீர்குலைந்த முறைமை : இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களை தடுத்து வைத்தல், சிகிச்சையளித்தல், மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு” என்ற ஆய்வானது இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் போதைப் பொருள் தொடர்பான தடுத்து வைத்தல் முறைமையை மனித உரிமைகள் கட்டமைப்பினுள் ஆராயும் முதலாவது சுதந்திரமான, விரிவான அறிக்கையாகும்.

பின்னணியும் சூழலும்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, இலங்கை அரசாங்கமானது போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவமயப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கையாள்கின்றது.

‘போதை பொருட்கள் மீதான யுத்தத்தில்’ இராணுவமானது விஷேடமான வகிப்பங்கினை கொண்டுள்ளது. குறித்த வகிபங்கானது போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் மாத்திரமல்லாது போதைப் பொருள் அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்றவற்றையும் உள்ளடக்குகிறது.

 2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தனது விஞ்ஞாபனத்தில் “போதைப் பொருள் அச்சுறுத்தலை” ஒழித்தலுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்ததற்கு இணங்கவே போதைப் பொருள் கட்டுப்பாட்டில் இந்த இராணுவமயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

அப்போதிலிருந்து, போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி இராணுவத்தினரின் ஈடுபாட்டினை ஏற்படுத்தியுள்ளார்.

அரசாங்கமும் ஊடகங்களும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகவும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் பிழையாக கருத்தைப் பரப்புகின்றன. அதனால் அனைவரும் அவர்களை குற்றவாளிகளாக்கி ஒதுக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த மனிதத் தன்மையற்ற செயற்பாடுகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட வழிவகுக்கிறன. அவை பொது வெளியில் குறைந்தளவிலான கவனத்தையே ஈர்த்துள்ளன.

தண்டனை வழங்குகின்ற மற்றும் பாரபட்சமான சட்ட கட்டமைப்பு

இலங்கையில் காணப்படும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள் பற்றிய ஆய்வினை எடுத்துப் பார்த்தால், சட்ட கட்டமைப்பானது சிறந்த முறையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவற்கு பொருத்தமற்றதாக காணப்படுவதாக இருக்கிறது. 

மேலும் அது உள்ளடக்கியிருக்கும் முரண்பாடான சட்ட ஏற்பாடுகள் நியாயாமற்ற மற்றும் சமமற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. அத்துடன், சட்டம் தொடர்பான நிர்வாக சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பன பொதுவாகவே சட்டங்களுக்கு மேலாக பிரயோகிக்கப்படுகின்றன. 

இதனால் சட்டத்தின் உறுதியான நிலை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன நலிவடைகின்றன. உள்நாட்டுச் சட்டங்களானது போதைப் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி, கடத்தல் மற்றும் பல வகையான போதைப் பொருட்களை வைத்திருத்தல் என்பவற்றை குற்றமாக்கியுள்ளன. இச் சட்டங்கள் நியாயமற்ற கடினமான தண்டனைகளை விதிக்கின்றன. இரண்டு கிராம் போன்று சிறிய அளவிலான ஹெரோயின் வைத்திருப்பதற்கும் அல்லது கடத்துவதற்கும் ஆயுள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகளின் அதிகரிப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறைக் காரணமாக போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் முன் விசாரணை தடுப்புக் காவலில் வாரங்கள் மற்றும் மாதங்களை கழிக்கின்றனர்.

இந்த காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தப்படுகின்றனர்  (அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பதை பொருட்படுத்தாது). அந்நபர்கள் தண்டப்பணம் செலுத்தி விட்டு விடுதலை செய்யப்படுகின்றனர். 

இருந்த போதிலும், தண்டப்பணத்தினை செலுத்த முடியாதவர்கள் ஆறு மாதங்கள் அளவில் சிறைத்தண்டனையை அனுபவிக்கின்றனர் - ஆகையால் வறுமை அவர்களை குற்றவாளியாக்குகிறது.

சில போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை. எனவே, சட்டம் முன் விசாரணை தடுப்புக் காவலில் வைத்திருப்பதினை கட்டாயப்படுத்துகிறது. 

வளங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாக ரீதியான இடைஞ்சல்கள் காரணமாக, விசாரணையானது கணிசமானளவு பிற்போடப்படுகிறது. 

எனவே, முன் விசாரணை தடுப்புக் காவலில் மக்கள் மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் வழக்குத்தொடுக்காது தடுத்து வைக்கப்படுகின்றனர். இது தடுப்புக் காவலுக்கான சிறைக்கூடத்தில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது.

சட்ட அமுலாக்கத்தின் மூலமான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம்

சட்டம் மற்றும் கொள்கையில் காணப்படும் முறைமைப்படுத்தப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் பொலிஸார் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் போதும் தண்டனைக்குட்படுத்தப்படாமல் விடுவது சட்டத்தை மதிக்காத கலாச்சாரத்தை உருவாக்குகிறது. இக்காரணங்கள் காவல் துறையினுள் கடுமையான தவறான நடத்தை மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்கின்றன. இது போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்கு கைது செய்யப்பட்டவரின் உரிமைகளை பாதிக்கின்றன. 

உதாரணமாக, சிறையில் உள்ள நபர்கள் பொலிஸார் தம் மீது போதை பொருட்களை நாட்டியதாக அடிக்கடி குற்றம் சாட்டினர். முக்கியமாக போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் போலிஸ் காவலில் சித்திரவதைக்கும் மோசமான நடத்துகைக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என பரவலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் கைது செய்யப்பட்டவுடன் பலவந்தமான உடற் பரிசோதணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். போதைப் பொருள் சார் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பும் பொலிஸாரால் இலக்கு வைக்கப்பட்டு தொந்தரவு செய்யப்படுகின்றனர்.

விசாரணைகளின் போதான குறைந்த மேற்பார்வையானது போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நேரம்ரூபவ் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றில் பிழையான அறிக்கைகள் முன்வைப்பதற்கு பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. மேலும், வேண்டுமென்றே அவர்கள் விசாரணை நடவடிக்கைகளை பிற்போடுகின்றனர்.

தடுப்புக் காவலின் மனிதாபிமானமற்ற நிலையும் கொவிட் 19 இற்கான குறைந்தபட்ச ஏற்பாடுகளும் அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் போதைபொருள் சார் குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டிருப்பதனால், இலங்கையின் சிறைகள் மக்கள் திரளால் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறைக் கைதிகள் மனிதாபிமானமற்ற நிலைக்கு ஆளாக்கப்படுவதுடன் இழிவான நடத்துகைக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

சிறையில் கொவிட் 19 பரவல் ஏற்பட்ட போது அரசாங்கமானது, தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் மற்றும் சிறிய குற்றங்களுக்காக குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்தது. 

வலுக்கட்டாயமான போதைப் பொருள் தடுப்பு மையங்கள் 

இலங்கையில் அரசால் நிர்வகிக்கப்படும் மற்றும் தனியார் போதைப் பொருள் புனர்வாழ்வு மையங்கள் காணப்படுகின்றன. கந்தக்காடு மற்றும் சேனாபுர என்பன அனைவராலும் அறியப்பட்ட மிக பெரிய மையங்களாகும்.

2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வுளிப்பதற்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட குறித்த புனர்வாழ்வு மையங்கள் இன்று வரை இராணுவத்தினரின் கைவசமே உள்ளன.

2007 ஆம் ஆண்டின் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வுளித்தல் ) சட்டமானது, போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புவதற்கும் குறித்த நபரை நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கிறது.

நீதவான் நீதிமன்றமானது, போதைக் பொருள் சார்புநிலை தொடர்பான மருத்துவ மதிப்பீட்டறிக்கையின் அடிப்படையிலோ அல்லது விஷங்கள், ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான மருந்துக்கள் கட்டளைச்சட்டத்தின் கீழோ குறித்த நபரை தண்டிக்கும் பொருட்டு வலுக்கட்டாய புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்க முடியும். மேலே சொல்லப்பட்ட சட்டத்தின் பிரிவு 10 ஆனது எந்தவிதமான சாட்சிகளும் இல்லாமல் ஆட்களை கைது செய்து தன்னிச்சையாக தடுப்புக் காவலில் வைப்பதற்கு இடங்கொடுப்பதுடன் வலுக்கட்டாயமான போதைப்பொருள் புனர்வாழ்விற்கு அவர்கள் தீர்ப்பளிக்கப்படுவதற்கும் வழி வகுக்கின்றது.

இவ்வாறு, போதைப் பொருள் பாவனைக்கான சிகிச்சையானது தன்னிச்சையான தடுப்புக் காவலில் வந்து முடிகிறது.

புனர்வாழ்வு மையங்களில் இடம்பெறும் வன்முறை

இராணுவத்தால் நடாத்தப்படும் நிலையங்களில், ‘சிகிச்சை’ என்ற பெயரிலோ அல்லது ‘தண்டனை’ என்ற பெயரிலோ பரவலாக வன்முறை இழைக்கப்படுகிறது. 

இந்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் தங்கியிருக்கும் காலத்திம் முழுவதும் வன்முறை, முறையற்ற நடத்துகை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகின்றனர்.வன்முறைகள் மற்றும் தவறான நடத்துகைகள் தண்டனைக்காக அல்லது காரணமேயில்லாமல் அங்கு தடுத்து வைக்கப்படும் நபர்களின் மேல் இழைக்கப்படுகின்றன. ஏதேனும் பிழை செய்தால் அல்லது எவரேனும் விதிமுறைகளுக்கு கீழ்படியாமல் இருந்தால் அந்த நபர்கள் அடிக்கப்படலாம், வயரால் தாக்கப்படலாம், பலாத்காரமாக அதிகமான புஷ் அப்கள் செய்விக்கப்படலாம் அல்லது வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வதற்கும் ஆளாக்கப்படலாம். ஒரு சந்தர்ப்;பத்தில், சண்டையில் ஈடுபட்ட நபரொருவர் மூன்று நாட்களுக்கு தான் மரத்தோடு இணைத்து விலங்கிடப்பட்டதாக கூறினார். அத்தருணத்தில்; போது அவர் மூன்று நாட்களும் நின்றுக் கொண்டிருக்க வேண்டி நேரிட்டது. சாப்பிடுவதற்கும் கழிப்பறையை பயன்படுத்தவுமே அவர் விடுவிக்கப்பட்டார். உணவு மற்றும் நீர் என்பன அவருக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டதுடன் அவர் உறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

விடுதலையான பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள்

சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளானவை, தீங்கினை குறைக்கும் சேவைகளானது போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் சுகாதாரததிற்கான உரிமையின் ஒரு அத்தியவசியமான பகுதி என்று தெரிவிக்கிறன. அத்துடன் வலுக்கட்டாயமான போதைப் பொருள் தடுப்பிற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் கட்டாய சிகிச்சையானது தன்னிச்சையான தடுப்புக் காவல் மீதுள்ள தடை, சித்திரவதை செய்யப்படுவதன் மீதுள்ள தடை, தவறான நடத்துகை மீதுள்ள தடை மற்றும் சுகாதாரத்திற்கான உரிமை போன்றவற்றை மீறுவதாக அமையும் என வலியுறுத்துகின்றன.

2015 ஆம் ஆண்டின் ஆய்வுகளின் படி தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் சிகிச்சையின் திறனை பொறுத்தவரையில் 64 வீதமான சிகிச்சை பெற்றவர்கள் விடுதலையான பின்பு போதைப் பொருள் பாவனையை மீண்டும் ஆரம்பித்தனர். 

இது அதிகளவானவர்கள் போதைப் பொருள் பாவனையை மீண்டும் ஆரம்பித்ததை சுட்டிக்காட்டுகிறது. 2018 இல் வெளியிடப்பட்ட அதே போன்றதொரு அறிக்கையில், நேர்காணல் செய்யப்பட்ட 170 நபர்களில்,   அரசினால் செய்யப்பட்ட வலுக்கட்டாயமான  போதைப் பொருள் தடுப்பு சிகிச்சையின் பின்பு 123 நபர்கள் போதைப் பொருள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.  

இந்த அறிக்கைகள்  வலுக்கட்டாயமான புனர்வாழ்வளிப்பதானது  செயற் திறன் அற்றதாகயிருப்பதை காட்டுகிறது. வலுக்கட்டாயமான போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை முறையானது செயற்திறனற்றது என்பதை இத் தரவுகள் உறுதி செய்கின்றன.

விடுவிக்கப்பட்டதற்கு பின்னர் ஆதரவு மற்றும் கவனிப்பு, சமூக மறு ஒருங்கிணைப்பிற்கான உதவி என்பன குறைவாகவே காணப்படுகின்றன.

கட்டாயமான புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் பொலிஸாரினால் தொடர் நிந்தை மற்றும் தொல்லைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்தகைய தொல்லைகளானவை, சமூகத்துடன் மீள் ஒருங்கிணைத்தல் மற்றும் வாழ்வாதார வாய்ப்புக்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன. போதை பொருளுக்கு அடிமையானவர்களை சுயவிருப்புடன் சமூக மட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு மற்றும் வாழ்வாதார உதவி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு அறிக்கைக்கும் மேலதிக மூலங்களுக்கும். https://www.hri.global/drug-control-sri-lanka இனை பார்வையிடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04