ஜெய் பீம் என்ற பெயரோடு நடிகர் சூர்யாவின் 39 ஆவது திரைப்படத்தின் முதல்பார்வை நேற்று வெளியானது. இந்த படத்தின் பெயர் மிக பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது .
ஜெய் பீம் என்பது திரைப்படத்தின் பெயர் என்றதுமே இது இயக்குநர் ரஞ்சித்தின் திரைப்படமாகத்தான் இருக்கும் என அனைவரும் நினைத்திருப்பர்.ஆனால் இதனை இயக்குவது இயக்குநர் ஞானவேல்.
உண்மையில் ஜெய்பீம் என்ற வார்த்தை தற்போதைய காலக்கட்டத்தில் இயக்குநர் ரஞ்சித்தின் மூலமே அதிகம் பிரபலமடைந்திருக்கின்றது என்றால் மிகையில்லை..
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசை நிகழ்ச்சியை முதல் முதல் நடத்திய போது கானா பாடல்களுடன் ராக் மற்றும் ராப் இசையை கலந்து ‘ப்யூஷன்’ வடிவத்தில் உருவாக்கப்பட்ட 20 பாடல்கள் முதல் முறையாக மேடையில் இசைக்கப்பட்டது.
இதில்,
ஜெய் பீம் என சொல்வோமே! சாதிகள் இல்லை வெல்வோமே!
கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்!
கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்!
என இன்று பிரபல பாடகராக விளங்கும் அறிவின் குரலில் பறை இசை தெரிக்க பாடப்பட்ட பாடல்தான் ஜெய் பீம். இதனையடுத்து இந்த வார்த்தை மேலும் பிரபலமடைய தொடங்கியது.
ஜெய் பீம்’ என்றால் என்ன?
ஜெய் பீம் என்றால் ஒளி,
ஜெய் பீம் என்றால் அன்பு,
ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்,
ஜெய் பீம் என்றால் பல கோடி மக்களின் கண்ணீர்த் துளி!
என ஒரு மராத்திய கவித்தை கூறுகிறது.
இந்திய அரசியலமைப்பை தந்த டாக்டர் அம்பேத்காரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களினால் பயன்படுத்தும் சொல்லாடல்தான் ’ஜெய் பீம். பீம் என்றால் அம்பேத்கரைக் குறிப்பது. ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி என்பது பொருள். 1936இல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமயத்தில் மும்பை சால் பகுதியில் அவரது ஆதரவாளர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெய்பீம் எனச் சொன்னதாகவும். பிறகு பெரும்பான்மையான மக்கள் அந்தச் சொல்லை உபயோகிக்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு என்ற கதையும் உண்டு.
மராட்டியத்தை 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் ஆண்டு வந்தனர். அப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும்,மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது.
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும்,சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர். 1817 டிசம்பர் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.
2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்.500 தாழ்த்தப்பட்ட மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம். போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப் படைத்தலைவர் கோகலே களத்திலேயே உயிரிழந்தார் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின. பாஜிராவ் கைதானார்.
வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது. 1927 ஜனவரி 1 இல் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார். அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக “ஜெய் பீம்” எனும் வெற்றி முழக்கம் வெடித்ததாகவும் ஒரு கதை உள்ளது. மேலும் அம்பேத்கர் ஒவ்வொரு வருடமும் கோரேகான் பகுதிக்குச் சென்று போர் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இவர் ஒரு வழக்கறிஞர், அரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், பெண்ணியவாதி, கல்வியாளர் என்பதனை தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒற்றைக்குரலாக ஒலித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தமையால், இன்றும் அவரை தலித் மக்கள் ஒரு கடவுள் போல கொண்டாடுவதனை அறிவோம். அந்தவகையில் அம்பேத்காரை அவரது கொள்கைகளை பின்பற்றுபவர்கள் கொண்டாடும் வார்த்தைதான் ஜெய் பீம். நமக்கு தெரிந்த பிரபலங்களில் இயக்குநர் ரஞ்சித்தே இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துகின்றார்.
நிகழ்காலத்தில் மக்களின் மிக பெரிய ஊடகமான சினிமாவில் தலித் அரசியலை சிறப்பாக பேசும் இயக்குநர் ரஞ்சித் , திரைக்கு வெளியிலும் அவர் தலித்துக்களுக்காக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்.
அம்பேத்கரின் 127ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 'ஜெய்பீம் ஆன்தம்' வெளியிடப்பட்டுள்ளது. கேஸ்ட்லஸ் கலெக்டிவ் இசைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்களால் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது.
இந்தப் பாடலில், அம்பேத்கரின் சிறப்பு, இன்றைய சூழலில் நிலவும் சாதியம், சமத்துவம் உள்ளிட்டவை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தனது நீலம் அமைப்பு மூலம், தலித் கலை, பண்பாடு ஆகிய தளங்களில் பெரிய அளவிலான கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார். அத்தோடு, தலித் அரசியலைப் பேசும் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். 2019ஆம் ஆண்டில் நீலம் பதிப்பகத்தை தொடங்கி நீலம் கலை, இலக்கிய மாத இதழையும் வெளியிட்டு வருகிறார்.
ஒரு கட்டத்துக்கு நாம் சென்று விட்டால் நமது அடையாளங்களை பலர் மறைத்து விடுவர். பொதுவாக தாழ்த்தப்பட்ட சாதிய அடையாளங்களை பலரும் வெளிகாட்ட விரும்புவதில்லை. ஆனால் எதற்கு நான் எனது சாதியை மறைக்க வேண்டும் நான் நான்தானே என தைரியமாக தன்னை அடையாளப்படுத்தி கொள்வதில் இவருக்கு மாற்று இருக்க மாட்டார்கள்.
இன்றும் தமிழகத்தில் சாதிய கெளரவ கொலைகள் நடக்கத்தான் செய்கிறது.சக மனிதனை சாதி என்ற பார்வையில் ஒதுக்கி வைக்கின்ற பண்புகள் மாறவே இல்லை. இதை மாற்ற அரசியல் வாதிகள் யாரும் முயற்சித்திருக்கின்றார்களா என்று தெரியாது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இவரது குரல் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது.
அம்பேத்கார் கொள்ளைகளை கடைப்பிடிப்பதோடு ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு தற்போதைய நிகழ் காலத்தில் உணர்வு கொடுத்தது இவர்தான்.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் 39ஆவது திரைப்படத்தின் பெயர் ஜெய்பீம் என்று உறுதியாகி உள்ளமையால் அனைவரது கவனமும் இந்த வார்த்தை மீதே திசை திரும்பியுள்ளது. ஜெய்பீம் என்பது உண்மையில் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணமே., திரைக்கு வெளியே இயக்குநர் ரஞ்சித் போன்ற சிலர் அதற்காகதான் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
குமார் சுகுணா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM