(நா.தனுஜா)
அண்மையில் உயிரிழந்த ஹிஷாலினிக்கான நீதி என்பது ஒரு சமூகநலப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டதாகவும் மலையக சமூகத்தைச்சேர்ந்த மக்கள் உள்ளடங்கலாக அனைத்து மக்களுக்கும் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதை அடிப்படையாகக்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அக்கறைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதேவேளை மலையக சமூகத்திற்கான மேம்பட்ட கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாததாகும் என்று விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 15 வயதான ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து விடுதலை இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சிறுவர்களை வேலைக்கமர்த்தல் மற்றும் சிறுவர்கள் மீதான அனைத்துவிதமான பாலியல் சுரண்டல்களுக்கும் எதிராக அனைவரும் வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்.
சிறுவர்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் குறித்து வலுவான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறுவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகளை வலியுறுத்துகின்றோம்.
சிறுவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான கட்டமைப்புக்களுடன் நாங்கள் தொடர்புகளைப் பேணிவரும் நிலையில், அதனூடாக இவ்விவகாரத்தில் அரசினால் மேற்கொள்ளப்படும் நிதியொதுக்கீடுகள் குறைவாகக் காணப்படுவதை அறியமுடிந்துள்ளது.
அத்தகைய கட்டமைப்புக்களிலுள்ள அதிகாரிகளுக்கு சிறுவர் தொழிலாளர்களின் நிலைமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் தொடர்பில் போதுமானளவு புரிதல் இல்லை எனும் அதேவேளை, சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் அவற்றுக்கான நீதியை உறுதிப்படுத்தும் அளவிற்கு முன்கொண்டு செல்லப்படுவதில்லை. அதன்விளைவாகப் பெருமளவான சிறுவர்கள் துன்புறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு உள்ளாவதுடன் அது அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வை நெருக்கடிக்குள் தள்ளுகின்றது.
மலையகத் தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த ஹிஷாலினி போன்ற சிறுவர்களின் சம்பவங்களில் மேற்படி விடயங்கள் உண்மையாகின்றன. அங்குள்ள மாணவர்களில் பெரும்பாலானோருக்குத் தரமானதும் தடையற்றதுமான கல்வி கிடைக்கப்பெறுவதில்லை.
அதனால் அவர்கள் தமது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு வெகுதொலைவிலுள்ள இடங்களில், குறைந்த ஊதியத்திற்குத் தொழில்புரிவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றார்கள். சிறுவர் தொழிலாளர்களை வீட்டுவேலைக்கமர்த்தும் வரலாறும் நடைமுறையும் மலையகத்தமிழ்ச் சமூகத்தின் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே ஹிஷாலினிக்கான நீதி என்பது ஒரு சமூகநலப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டதாகவும் மலையக சமூகத்தைச்சேர்ந்த மக்கள் உள்ளடங்கலாக அனைத்து மக்களுக்கும் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதை அடிப்படையாகக்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அக்கறைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும். அதேவேளை மலையக சமூகத்திற்கான மேம்பட்ட கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாததாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM