குமார் சுகுணா
உண்மைகள் பல நேரங்களில் கசக்கும். ஆனால் எப்போதும் அது பொய்யாகாது. இன்று டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நீதி கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் கிடைக்கும் என நம்புவோம். இந்த சம்பவம் பல விடயங்களை நமக்கு உணர்த்தியுள்ளன.
இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் யாரும் மலையகத்தை சேர்ந்தவர்களை போல சிறுவர்களையோ அல்லது பெண்களையோ பாதுகாப்பற்ற வகையில் வேலைக்கு அனுப்பி பிரச்சினைகளை எதிர்கொள்வதாக நாம் அறிந்தது மிக குறைவு.
மக்களின் விழிப்புணர்வு அற்ற தன்மை என்றாலும், இதனை பயன்படுத்தி, வீட்டு பணிப்பெண்களை தேடும் பணக்காரர்கள் கூட மலையகத்தவர்களையே குறிவைத்து அதிகம் விரும்புவதை பார்க்கின்றோம்.

காரணம் மலையகம் மீதான ஏனையவர்களின் பார்வை. மிக மோசமான பார்வைகள் உள்ளன என்பது மறுப்பதற்கு இல்லை. அதாவது வர்க்க ரீதியான பார்வை இருக்கின்றது.
ஆண்டான் அடிமை நிலையில் அவர்களை வைத்துக்கொள்ளலாம் என்ற மனநிலை. கூலியாட்கள் போல வைத்துக்கொள்ளலாம். எது செய்தாலும் பிரச்சினை வராது பணத்தை கொடுத்து மாற்றிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்கள் இப்படித்தான் நிகழ்ந்துள்ளன.
மலையகம் என்றாலே தாழ்வாக பார்க்கக்கூடிய மனப்பான்மை பலரிடம் உள்ளது. அதுவும் மலையகத்தில் பிறந்து இன்று கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பணம் எனும் சமூக அந்தஸ்த்து கொண்டவர்களிடமும் உள்ளது.
கொழும்பு என்றால் எல்லாமே கொழும்பு 7ஆகவோ 3 ஆகவோ இருக்காது. சில தெருக்களில் கழிவு நீருக்குள்தான் வீடுகளே இருக்கும்.
அடைச்சலான ஒரு அறையில் உணவு சாப்பிடும் இடம். உறங்கும் இடம் என்று அனைத்தும் ஒரு இடத்திலேயே என்று வாழ்பவர்கள்தான் அதிகம்.
ஆனால் அங்கிருந்து கொண்டு வளமான மலையகத்தை அவர்கள் ஏளனமாக பார்ப்பதை மறுக்கமுடியாது. மலையக மக்களை இழிவாக பார்ப்பார். மலையகத்தான்.. தோட்டகாட்டான்... வந்தோரிகள்.. கூலிகள்... போன்ற வார்த்தை பிரயோகங்கள் மலையக மக்களுக்கு எதிராக பாய்வதை நாம் மறுக்க முடியாது.
காலநிலை மாற்றத்தால் மலையக பிரதேசங்களில் உடல் நிறம் கறுப்பாக மாறுவது இயல்பு. ஆனால் அதை கிண்டல் செய்பவர்களும் உள்ளனர்.
அந்த மக்களை வர்க்க ரீதியாக இன்றும் கூலிகள் போன்ற கொடூர மனப்பான்மையில் பார்க்கின்றவர்களினாலேயே வயது வித்தியாசம் இன்றி விலங்குகளை விட மோசமாக இந்த மக்களை நோக்குகின்ற மனபான்மை உருவாகுகின்றது.
இதன் விளைவுகளில் ஒன்றுதான் சிறுமி என்று கூட பாராது.. படிக்க வேண்டிய வயதில் உள்ள பிள்ளையை ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் அமைச்சராக இருந்தவர் தனது வீட்டின் பணிப்பெண்னாக மாற்றியுள்ளார்.
பணிப்பெண் என்பதை தாண்டி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைதான் வன்மம்.
டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
குறித்த சிறுமி நீண்ட காலமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தகவலை சட்ட வைத்திய அதிகாரி உறுதி செய்துள்ளார். மேலும், பலமாதங்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில், பொரளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வைத்திய பரிசோதனை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தடயவியல் மருத்துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை, பொரளை பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இறந்த சிறுமி, தாக்கப்படவில்லை. சித்திரவதை செய்யப்படவில்லை. எனினும், எரிகாயங்களால் உடல் 72 சதவீதம் எரிந்துள்ளது. அச்சிறுமி கர்ப்பமடையாது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் எவ்வளவு பெரிய கொடுமையானது என்று இந்த அறிக்கைகைகளை பார்க்கும் போதே புரிகின்றது. அந்த சிறுமி வீட்டை விட்டு செல்லும்போது 15 வயதுதான் ஆகின்றது.
அவ்வளவு சின்ன வயதில் பெற்றோர் அதுவும் தாய் அருகில் இருக்கும்போது அவர் வேறு நபர்களால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிகக் குறைவு.
தோட்டங்களில் எல்லோரும் கூட்டமாகவே வாழுவர். இவ்வாறான சந்தர்பங்களில் அந்த சிறுமியை துன்புறுத்தியிருக்க வாய்ப்புகள் இல்லை.
ஒருவருட காலமாக வீட்டுக்கு வராமல் இவர் தங்கியிருந்த இடத்தில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக்கூடும். ஒரு வேலை அந்த வேதனையை சொல்ல முடியாது அந்த பிள்ளை தனக்கு தானே தீமூட்டி மரணித்திருக்கலாம்.
அல்லது வேறு யாராவது பலவந்த படுத்த பயமுறுத்தி இருக்கும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பல ஆண்கள் இருந்துள்ளனர். அவர்களினால் இந்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.
சிறுமி தன் தாயாரிடம் இது தொடர்பில் தன்னால் அங்கு வேலை செய்ய முடியாது என்றும் அழைத்துச்செல்லுமாறும், அங்கு தொழில் செய்பவர் தும்புத்தடியால் தன்னை தாக்குவதாகவும் கூறியுள்ளார்.
சிறிய பிள்ளை, அவரைத் தாக்க வேண்டாம் என கூறுங்கள் என நான் Madam இடம் கூறினேன் என்கிறார் தாய். மேலதிகமாக நான் பணம் பெற்றுள்ளதால், நான் தொழிலுக்கு வருகிறேன் என தெரிவித்தேன் என்றார்.
பிள்ளையை வைத்து அதிக பணம் பெறுவதும் கொடூரம்தான்.
இந்த மரணம் குறித்து ரிஷாத் பதியூதினிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ள நிலையில் அவர் சிறுமி உயிரிழந்தவுடனையே நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதால் தாமதமாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அமைச்சருக்கு ஆதரவாகவும் மலையகத்துக்கு எதிராகவும் பலர் வன்மத்தனமான பதிவுகளை பதிவிடுவதனை காணக்கூடியதாக உள்ளது.
மலையகம் என்றால் வன்மத்தை விதைப்பவர்களுக்கு ஒன்று கூறவேண்டும்.
நாங்கள் தமிழர்கள் உழைப்பாளிகள்; இந்த பூமியின் மூத்த குடிகள்; மூவேந்தர்களின் ஆட்சி பிரதேசங்களுக்குள் இருந்தவர்கள்தான் நாம்; கால கொடுமை படையெடுப்புகள் செல்வங்கள் சுரண்டல் வரட்சி அதனால் ஏற்பட்ட வறுமை பட்டினி என காலம் அனைத்தையும் பாவமாக்கியது.
செல்வத்தை சுரண்டியவன் குடியானவனாக மாற செல்வத்தை இழந்தவன் ஏழையாக்கப்பட்டான். இக்காலப்பகுதியில் வெள்ளைகாரர்களின் ஆட்சியில் அடிமையான நிலை. அவனால் வஞ்சிக்கபட்டே இந்த நாட்டுக்கு வந்தோம். இதுவும் எங்கள் சோழன் ஆண்ட பகுதிதான்.
ஆண்டான் அடிமை என்ற வர்க்கத்துக்குள் இருந்தாலும் கால போக்கில் இலங்கையில் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி நகர்தப்பட்டனர்.
இதனாலேயே மீண்டும் தாயகம் திரும்பாது பலர் விரும்பி இந்த நாட்டில் இருந்தனர். இந்தியா தாயகம் என்றாலும் வருடத்தில் பலமுறை சொந்த ஊரை பார்த்து விட்டு திரும்பி இங்கையே வந்தனர்.
இலங்கையில் ஏனைய சமூகங்களை போலவே இவர்களும் கெளரவமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் . இன்றும் வாழ்பவர்கள்தான்.
ஆனால், அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்க தெரியாத இவர்களை ஏமாளிகளாகவே இந்த நாடும் சமூகங்களும் பார்க்கின்றன என்பதற்கு மிக சிறந்த உதாரணம் தான் டயகம சிறுமியின் மரணம்.
இதற்கு காரணமான அனைவரும் தண்டணை அனுபவிக்க வேண்டும். இனியாவது சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும். இனி ஒரு தரகர் மலையகத்துக்குள் நுழைய கூடாது. அதனை நாம்தான் தடுக்க வேண்டும்.
ஏனைய சமூகங்கள் எம்மை பார்க்கும் பார்வை எமது மீதான வன்மத்தனங்கள் மாற வேண்டும் என்றால் எமது சமூக கட்டமைப்பை நாம் மாற்றவேண்டும். அதற்கு முயற்சிப்போம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM