சிவலிங்கம் சிவகுமாரன்
எந்தவகை தடுப்பூசிகள், எவ்வளவு கிடைத்தன ? என்பது பற்றி தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக கிடைக்கப்பெற்ற விபரங்கள்
ஜுலை 1 ஆம் திகதி வரை இலங்கையில் தடுப்பூசிகளை பெற்றவர்கள் விபரம்
- போடப்பட்ட தடுப்பூசிகள் – 38,66,623
- குறைந்தது ஒரு தடவையாவது தடுப்பூசி பெற்றவர்கள் – 2789,537
- முழுமையாக தடுப்பூசிகளை பெற்றவர்கள் (இரண்டு தடவைகள்) – 1077,086
- (ஆதாரம் : உலக சுகாதார ஸ்தாபனம்)
இலங்கை அனுமதியளித்துள்ள தடுப்பூசி வகைகள்
- கொவிஷீல்ட் (அஸ்ட்ரா செனிகா) – இந்தியா
- பிபைஸர் – ஜேர்மனி
- ஸ்புட்னிக்– வி– ரஷ்யா
- சைனோபார்ம்– சீனா
இலங்கையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட காலத்தில் அரசாங்கமானது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் அக்கறைகாட்டியிருக்கவில்லை. அதன் விளைவுகளை தற்போது அரசாங்கமும் நாட்டு மக்களும்அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எந்த நாட்டின் தடுப்பூசிகளை முதற்கட்டமாகப் பெறுவது, எவ்வளவு எண்ணிக்கையான தடுப்பூசிகள் அவசியம், குறித்து தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனவா அல்லது அது இலங்கை மக்களுக்கு உகந்ததா போன்ற ஆலோசனைகள் எந்தளவுக்குப் பெறப்பட்டன என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.
உள்ளூர் சுகாதார பிரிவினரிடம் கூட இது தொடர்பான ஆலோசனைகள் பெறப்படவில்லையென்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. இதன் காரணமாகவே முதற்கட்டமாக பலருக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசி மாதிரிகளை இரண்டாம் கட்டமாக பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், அதற்கு பதிலாக வேறு நாட்டின் அல்லது நிறுவனத்தின் தடுப்பூசிகளை ஏற்றுவது சரியா ,அதன் பின்விளைவுகள் என்ன என்பது குறித்து எந்த சுகாதார அணுகுமுறைகளும் தெரியாது அரசாங்கம் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்திலேயே தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வது தொடர்பில் சரியான பொறிமுறைகளை கையாண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்பது சுகாதாரப் பிரிவினரின் கருத்தாக உள்ளது. எனினும் கொரோனா கட்டுப்படுத்தலை இராணுவ அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப் போய் தான் இன்று இப்படியான நிலைமைகள் உருவாகியுள்ளன என அனைவருமே இப்போது அரசாங்கத்தை நோக்கி விரலை தீட்டுகின்றனர்.
இந்நிலையில் எமது நாட்டுக்குக் கிடைத்த தடுப்பூசிகள் எவை? எந்த எண்ணிக்கையில் அவை கிடைக்கப்பெற்றன? அலகொன்றின் பெறுமதி என்ன ? மேலதிகமாக எவ்வளவு தடுப்பூசிகள் பெறப்படப்போகின்றன போன்ற விடயங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சிடம் தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக நாம் கேள்விகளை எழுப்பியிருந்தோம்.
விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட காலப்பகுதி மார்ச் மாதம் 1 ஆம் திகதியாகும். எனினும் நாட்டின் சூழ்நிலைகளை முன்வைத்து அதற்கான பதில்களை ஒளடத உற்பத்திகள் , வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சானது, இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 06/05/2021 என்ற திகதியிடப்பட்ட கடிதத்தின் படி விபரங்களைப் பெற்று அனுப்பிவைத்துள்ளது.
எனினும் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் எமது நாட்டிற்கு கிடைத்த கொவிஷீல்ட் (அஸ்ட்ரா செனிகா) மற்றும் ஸ்புட்னிக் – வி ஆகிய தடுப்பூசிகளின் விபரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.
மொத்தமாக கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் – 515,000 (ஐந்து இலட்சத்து 15 ஆயிரம்)
- கொவிஷீல்ட்– 5 இலட்சம்
- ஸ்புட்னிக் – வி 15 ஆயிரம்
தடுப்பூசிகளைவழங்கிய நாடுகள்
- கொவிஷீல்ட் – இந்தியா
- ஸ்புட்னிக் –வி– ரஷ்யா
தடுப்பூசிகளின் பெறுமதி (இலங்கை ரூபாவில்)
- கொவிஷீல்ட் – -10 பேருக்கு கொடுக்க கூடிய மருந்து குப்பியின் விலை– 10,287.38
- கொவிஷீல்ட்– ஒரு மருந்து குப்பியின் விலை– 1028.74
- ஸ்புட்னிக் –வி– -5 பேருக்கு கொடுக்க கூடிய மருந்து குப்பியின் விலை– 9,947.51
- ஸ்புட்னிக் –வி– ஒரு மருந்து குப்பியின் விலை–1,989.50
கிடைத்துள்ள தடுப்பூசிகளுக்கு செலவிடப்பட்டுள்ள தொகை (போக்குவரத்து செலவுகள் உட்பட)
- கொவிஷில்ட் – 515,346,540.50
- ஸ்புட்னிக் –வி–32,030,764.31
மேலதிகமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசி வகைகளும் அதற்கான செலவீனங்களும்
- கொவிஷீல்ட் – ரூ 1 கோடியே 80 இலட்சம்
- ஸ்புட்னிக் –வி– ரூ 1 கோடிய 30 இலட்சம்
- பிபைஸர்– ரூ 50 இலட்சத்து 580
எனினும் மேற்குறிப்பிட்ட கேள்விகளில் இலங்கைக்கு இலவசமாக கிடைத்த தடுப்பூசிகள் எந்த வகையைச் சேர்ந்தது வழங்கிய நாடு என்ற கேள்விக்கு பதில்கள் கிடைக்கவில்லை. எனினும் முதன் முதலாக இலங்கைக்கு 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியாவானது அதை மானியமாகவே வழங்கியதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நாம் எழுப்பிய கேள்விக்கு குறித்த 5 இலட்சம் தடுப்பூசிகளின் பெறுமதியானது போக்குவரத்து செலவுகள் உட்பட 51 கோடியே 53 இலட்சத்து 46 ஆயிரத்து 540 ரூபா என இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இதில் தெரிய வரும் மற்றுமோர் முக்கிய விடயம் கொவிஷீல்டை விட ஸ்புட்னிக்கின் சராசரியாக பார்க்கும் போது இரண்டு மடங்கு அதிகமென்பதையும் இங்கு நோக்கலாம். எனினும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ஒரு தடவை போட்டால் போதுமானது என்ற கருத்து மருத்துவ ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இதனிடையே இது வரையில் சீன தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசிகளையே இலங்கை அதிகமாக பெற்றுள்ளது. மார்ச் மாதம் இறுதிப் பகுதியிலிருந்து இது வரை சீனா 40 இலட்சம் வரையான சைனோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆம் திகதி ஒரே தடவையில் 10 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. அடுத்த வாரமளவில் கொவிஷீல்ட் மற்றும் பிபைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்குரிய காலம் தாமதித்துள்ளது. காரணம் முதலவாது டோஸ் தடுப்பூசிகள் மூன்று வகையினதாக இருப்பதால் அதே வகையையே இரண்டாவது டோஸ் ஆக போட வேண்டும் என்பது மக்களினது எதிர்ப்பார்ப்பு. முதல் தடவையாக கொவிஷில்ட் அல்லது ஸ்புட்னிக்கை பெற்றவர்கள் இரண்டாது டோஸ் ஆக சைனோபார்ம் பெறுவதை ஒரு அச்ச உணர்வோடு எதிர்நோக்குகின்றனர். அப்படி பெறலாம் அதனால் எந்த பக்கவிளைவுகளோ அல்லது வேறு எந்த பிரச்சினைகளோ இல்லை என்பது குறித்து இதுவரை அரசாங்கமோ சுகாதார அமைச்சோ தெளிவுபடுத்தவில்லை.
இது வரையில் இலங்கையில் முழுமையாக அதாவது இரண்டு கட்டங்களிலும் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் சராசரியாக 10 இலட்சம் பேரே உள்ளனர். குறைந்தது ஒரு தடவையேனும் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 27 இலட்சமாக உள்ளது. தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் நிலைமைகளைக் கொண்டே அடுத்த கட்டங்களுக்கு செல்லலாம். ஆனால் ஒரு பக்கம் தொற்றால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இறப்புகளின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மிக முக்கியமாக ஜூன் மாதத்தில் மட்டும் தொற்றால் இறந்தோரின் தொகை 1500 ஆக உள்ளது.நாட்டில் பரவி வரும் டெல்டா திரிபு வைரஸ் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார தரப்பு கூறுகின்றது. ஆனால் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசிகளை பெற்றுத் தருவதிலும் சுகாதார வழிமுறைகளை உரிய பொறிமுறையில் அமுல்படுத்துவதிலிருந்து அரசாங்கம் தவறி விட்டதோ என்று தான் கூற வேண்டியுள்ளது.
நாட்டின் நிதி நிலைமைகள் மிக மோசமாக உள்ளன. 2020 ஆம் ஆண்டிலிருந்து இவ்வருடம் ஜூன் மாதம் வரை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் 262 மில்லியன் ரூபாவை ( 26 ஆயிரத்து 200 கோடி ரூபா) செலவிட்டுள்ளதாக பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் உரிய வயதினர் அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் அரசாங்கம் என்ன வழிவகைகளை ஆராயப்போகின்றது என்பது தெரியவில்லை. ஏனென்றால் இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களுக்காக கடந்த வார இறுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டிய நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருந்தது.
செலுத்தத் தவறினால் தடுப்பூசிகளையோ எரிபொருட்களையோ பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்திருந்தார். நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவே ஆளுந்தரப்பு அமைச்சரான அவர் கூறியிருந்தார். தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பினருக்கும் பெற்றுக்கொடுக்க அடுத்த வருடமாகலாம். அது வரை இலங்கையின் நிலைமையை நினைத்துப் பார்க்க அச்சமாகவே உள்ளது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-07-04#page-4
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM