(நா.தனுஜா)
பொருளாதார ரீதியில் நாடு பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்கொண்டு சீர்செய்வதற்குரிய செயற்திட்டத்தை முன்வைக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான செயற்திட்டங்கள் தொடர்பில் எந்தவொரு விடயங்களும் கூறப்படவில்லை. எனவே நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமரேனும் இதுகுறித்துத் தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது, அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படும் முன்கூட்டியே திட்டமிடப்படாத பொருளாதாரக்கொள்கையின் காரணமாக நாளாந்தம் வாழ்க்கைச்செலவு அதிகரித்துவரும் அதேவேளை, பொதுமக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதாகக்கூறி, அரசாங்கத்தினால் நிர்ணயவிலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்ட போதிலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறித்த வர்த்தமானி அறிவித்தல் கருத்திற்கொள்ளப்படாமல் சந்தையில் பொருட்களில் விலைகள் பெருமளவிற்கு அதிகரித்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் அதற்குத் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் பொருட்களின் விலைகள் பெருமளவிற்கு அதிகரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அரிசியின் நிர்ணய விலை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு சந்தையில் அரிசியைக் கொள்வனவு செய்யமுடியாதுள்ளது.
சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபா தொடக்கம் 200 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோன்று ஒரு கிலோ நாட்டரிசி 120 ரூபா தொடக்கம் 200 ரூபா விலைக்கும் ஒரு கிலோ வெள்ளைப்பச்சை அரிசி 115 ரூபா தொடக்கம் 125 ரூபா விலைக்கும் சிவப்புப்பச்சை அரிசி கிலோ ஒன்று 110 ரூபா தொடக்கம் 120 ரூபா விலைக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் அரிசிக்கான நிர்ணயவிலை தொடர்பாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் ஒரு கிலோ சம்பா அரிசியின் நிர்ணயவிலை 98 ரூபாவாகவும் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி ஒரு கிலோவின் நிர்ணயவிலை 93 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்திருப்பதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்குமாறு பஸ் உரிமையாளர்கள் கோரிக்கைவிடுத்திருக்கும் அதேவேளை, முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும் எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி கட்டணத்தை அதிகரித்திருக்கின்றார்கள். இந்நிலையில் உணவுப்பொருட்கள் மாத்திரமன்றி, அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் கட்டுப்படுத்துகின்ற இயலுமையை அரசாங்கம் இழந்திருக்கின்றது. இவற்றுக்கு மத்தியில் தற்போது விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். அதனால் அடுத்த வருடத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை தோற்றம் பெற்றிருக்கின்றது.
மேலும், அண்மையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையின்போது பொருளாதார செயற்திட்டம் தொடர்பில் எவ்வித விடயங்களும் கூறப்படாத நிலையில், நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமரேனும் இதுகுறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM