(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 230 000 ஐ கடந்துள்ள நிலையில் , மரணங்களின் எண்ணிக்கையும் 2300 ஆக உயர்வடைந்துள்ளது.
நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார தரப்பினர் , அதிதீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர் எண்ணிக்கையும் சடுதியான அதிகரிப்பை காண்பிப்பதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டிய கடத்தில் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று கொழும்பில் அபாயம் மிக்க பி.1.617.2 வைரஸ் தொற்றுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸானது பி.1.1.7. வைரஸை விட 50 வீதம் வேகமாக பரவக் கூடியது என்று வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தளர்வுகளின் பின்னரான கட்டுப்பாடுகள்
இந்நிலையில் போக்குவரத்துக்கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வது குறித்த நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் அவை தொடர்பில் அறிவிக்கப்படும். எவ்வாறிருப்பினும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை விதிப்பதை விட மக்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து அவற்றை பின்பற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் தொற்றாளர் அனுமதி அதிகரிப்பு
மே மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
மே மாதம் 16 ஆம் திகதி 120 ஆகக் காணப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகள் தற்போது 160 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது சுமார் 120 இற்கும் அதிக தொற்றாளர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தரவுகளின் அடிப்படையில் அவதானிக்கும் போது மே மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே நாட்டு மக்கள் தற்போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய கட்டத்திலுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள சிகிச்சை படுக்கைகளில் 71 வீதமானவற்றில் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சப்ரகமுவ மாகாணத்தில் 90 வீதத்திற்கும் அதிகமானோரும் , மேல் மாகாணத்தில் 78 வீதமானோரும், வடமத்திய மாகாணத்தில் 72 வீதமானோரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறிருக்க இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கையும் சடுதியான அதிகரிப்பை காண்பிக்கிறது. ஜூன் முதலாம் திகதி 400 ஆகக் காணப்பட்ட ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை ஜூன் 15 ஆம் திகதியாகும் போது 800 ஆக அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவித்தார்.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை 2,361 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கயைம இது வரையில் 233,053 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 194 145 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதோடு , 36 067 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று மேலும் 57 கொவிட் மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM