(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
சட்டமூலத்தின் முக்கிய சில சரத்துகளுக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரியும் வாக்கெடுப்பில் தோற்றனர்.
பாராளுமன்றத்தில், நேற்றும், இன்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஆளும் எதிர்க்கட்சிகளின் வாத விவாதங்களின் பின்னர் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு விடப்பட வேண்டுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார்.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும், ஆனால் எதிர்கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்துகொள்ளுமாறும் சபையில் தெரிவித்தார்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
பிற்பகல் 4.30 மணிக்கு கோரம் அடிக்கப்பட்டு 4.35 மணிக்கு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 148வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 59 வாக்குகளும் பதிவாகியது.
அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நிலையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் விடயத்தில் தற்போது 7 பேரென குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரிக்கப்படுவதுடன் அதில் ஆறுபேர் உத்தியோகப்பூர்வ அதிகாரிகளாக தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் மூவர் ஜனாதிபதியின் நேரடித் தெரிவாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
எனினும் அதனை அரசாங்கம் ஏற்க மறுத்ததற்கு அமைய ஆணைக்குழு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும், எதிராக 147 வாக்குகளும் பதிவாகியது.
அதேபோல் துறைமுக நகரை அரச கூட்டுத்தாபனமாக மாற்றிக்கொள்ள கூட்டுத்தாபனத்திற்கு அரச நிதியில் ஒரு தொகையை முதலீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட வேளையில் அதற்கும் அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது.
இதனை அடுத்து சட்டமூலத்தின் 23 ஆம் சரத்தில் திருத்தம் வேண்டுமென ஹர்ஷ டி சில்வாவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்மைய 23 ஆம் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும் எதிராக 145 வாக்களும் பதிவாகியது.
அதேபோல் சட்டமூலத்தின் 73 ஆம் சரத்தில் கசினோ போன்ற செயற்பாடுகளை கண்காணிக்கும் செயற்பாடு குறித்து எதிர்க்கட்சி வலியுறுத்திய நிலையில் அதனை அரசாங்கம் ஏற்ற மறுத்ததால் அதற்கும் வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்கமைய 73 ஆம் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும், எதிராக 148 வாக்குகளும் பதிவாகின.
அதனை அடுத்து மேலும் சில சரத்துக்களுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும் அதற்கு வாக்கெடுப்பு கேட்கவில்லை. இறுதியாக நீதிமன்ற வியாக்கியானங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் திருத்தங்களின் பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் வாக்கெடுப்பு கோரினார். அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பில் சடமூலதிற்கு ஆதரவாக 149வாக்குகளும் எதிராக 58வாக்குகளும் பதிவாகியது. அதற்கைமைய சட்டம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM