(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் மேற்கொள்ள தவறியதால் மரண வீதம் அதிகரித்து செல்கின்றது. அதனால் கொவிட் தொற்றினால் மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பைத்தியம் எனக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொவிட் தொற்றினால் அதிகரித்துச் செல்லும் மரணங்கள், பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசி ஏற்றி முடிக்க இருக்கும் கால எல்லை போன்ற கேள்விகளை கேட்டபோது, இடையில் குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, எதிர்க்கட்சி தலைவர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்படுவதில்லை. அவருக்கு கொவிட் வைரஸ் அல்ல, கொவிட் பைத்தியம் பிடித்திருக்கின்றது என தெரிவித்ததற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டை கட்டுப்படுத்தும் முயற்சி சுகாதார துறையினரின் கைகளை விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுவருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் நாட்டுக்குள் வருவதற்கு முன்பிருந்தே அதுதொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை நாங்கள் அரசாங்கத்துக்கு இந்த சபையில் விடுத்திருந்தோம். அப்போது அரச தரப்பினர் எம்மை விமர்சித்தனர். முகக்கவசம் தேவையில்லை, தடுப்பூசி அவசியமில்லை என பதிலளித்தார்கள்.
அத்துடன் கொவிட்டை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முறையற்ற வேலைத்திட்ட காரணமாக இன்று மரணங்கள் அதிகரித்து செல்கின்றன. தோற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றனர். மக்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தெரிவிக்கும்போது எமக்கு பைத்தியம் என தெரிவிக்கின்றனர். அரச தரப்பினர் தெரிவிப்பதுபோல், மக்களை கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்பதில் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால் அரசாங்கத்துக்கு இன்று கொரோனாவே பைத்தியமாகி இருக்கின்றது. அஸ்ட்ரா செனிகா, ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ஆரம்பத்தில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தபோது, அதுதொடர்பில் அலட்சியமாக இருந்த அரசாங்கம், தற்போது அதிகூடிய விலையில் அதனை பெற்றுக்கொண்டிருக்கின்றது. அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்டமாக ஏற்றியவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு, தேவையான தடுப்பூசிகள் இல்லாமல் இருக்கின்றது. அதனால் இரண்டாம் கட்ட தடுப்பூசி எப்போது ஏற்றப்படும் என்று நிச்சயம் இல்லாமல் இருக்கின்றது என்றார்.
இதன்போது, எழுந்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார அமைச்சர் என்றவகையில் கொவிட்டை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக எனது முழு நேரத்தையும் நான் செலவிட்டு செற்படுகின்றேன். எதிர்க்கட்சி தலைவர் இதுதொடர்பாக தொடர்ந்து சபையில் கேள்விகேட்பது, கொவிட்டை கட்டுப்படுத்த அர்ப்பணிக்கும் எனது காலத்தை குழப்புவதற்கான முயற்சியா என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் கொவிட் தொடர்பாக கேள்வி கேட்பதைவிட களத்தில் இறங்கி அதற்காக பாடுபடவேண்டும் என்றார்.
இதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கொவிட்டை கட்டுப்படுத்த களத்தில் இருந்து பணியாற்ற சுகாதார அமைச்சர் எனக்கு கற்றுத்தர தேவையில்லை. அரசாங்கம் செயற்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் களத்தில் இறங்கி செயற்பட்டு வருகின்றோம். தேவையான தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடி அதனை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். வைத்தியசாலைகளில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதேபோன்று நாங்கள் எதனையும் செய்யவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிக்கின்றார். நாங்கள் கொவிட் ஆரம்பத்தில் இருந்து செய்துவரும் வேலைத்திட்டங்களை ஒப்புவிக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விட்டுச்செல்ல நான் தயார் என்ற சவாலை அவருக்கு விடுக்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் பாராளுமன்ற பதவியை துறக்கவேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொள்வாரா என கேட்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM